Monday, May 30, 2011

வெளிநாட்டில் வாழ்க்கை.........




வெளிநாட்டில் வாழ்க்கை சொகுசாய் இருப்பது போல் தோன்றும்.

ஆனால் ஓர் இழப்போ துக்கமோ வரும் வேளையில் சேர்ந்து அழ ஆளில்லாமல் துவளும்போது தெரியும் வெளிநாட்டில் வாழ்வதில் உள்ள வலி.

நான் இந்த வலியை உணர்ந்தும் இருக்கிறேன், ஆனால் தெளிவாக இந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டு வர முயன்றதில்லை.

அதை கீதா ரவிச்சந்திரன் என்பவர் தனது இழப்பு என்கிற பதிவில் செய்திருக்கிறார்.



இத்தகைய இழப்புக்கள் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகளை யாரிடம் சொல்லி புரிய வைக்க முடியும்?

நாம் நேரில் செல்லவில்லை என்ற காரணத்தினால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அர்த்தமில்லை. மனித இழப்புக்களுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவது எவ்வளவு தூரம் ஆறுதல் அளிக்கும்?


Monday, May 16, 2011

கம்ப்யூட்டர் செய்திகள்........

கேள்வி: அலுவலகக் கம்ப்யூட்டரில் சில பெர்சனல் பைல்களை, ஆடியோ, வீடியோ பைல்களைச் சில வாரங்களுக்கு சேவ் செய்து வைத்திட விரும்புகிறேன். இவற்றை மற்றவர்களின் கண்களில் பயன்படாமல் பாதுகாப்பது எப்படி? விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 3 யுடன் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ளது.


-பெயர் தராத வாசகர், திருப்பூர்.

பதில்: நீங்கள் பெயர் தரவில்லை என்றாலும், இந்த கேள்வி பல வகைகளில் கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வந்துள்ளன. எனவே பதில் அளிக்கிறேன். பைல்களை மறைத்து வைக்க சில தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் பாதுகாப்பானவை என்று 100% சொல்ல முடியாது. எனவே விண்டோஸ் சிஸ்டம் தரும் உதவியைப் பார்க்கலாம். விண்டோஸ் (டாஸ்) கட்டளைகளில் Attrib என்ற கட்டளை இதற்கு உதவும். Attrib என்பது ஒரு பைலுக்கு நாம் தரும் பண்புகளைக் குறிக்கும். இவை Read only, Hidden and System attributes என வகைப்படும்.

முதலில் கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட் ரேட்டராக லாக் இன் செய்து கொள்ளுங்கள். மறைக்க வேண்டிய பைல்களை எல்லாம் ஒரு போல்டரில் போட்டு வைக்கவும். அது E: ட்ரைவில் Personal என்ற பெயரில் இருக்கட்டும். எந்த பெயரையும் தரலாம். பின் Start பட்டன் அழுத்தி ரன் பாக்ஸில் CMDஎன டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி (command prompt)கிடைக்கும். இங்கு நீங்கள் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய மறைத்து வைத்திட வேண்டும் என்று திட்டமிடுகின்ற போல்டரின் பெயரை அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். இங்குள்ள எடுத்துக் காட்டின்படி அந்த கட்டளைச் சொற்கள் “attrib +s +h E:\Personal” என இருக்க வேண்டும். (மேற்கோள் குறிகள் டைப் செய்யப்படக் கூடாது) இந்த கட்டளை உங்கள் Data போல்டரை உ டிரைவில் மறைத்து வைத்திடும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம். இவ்வாறு மறைத்து வைத்திருப்பதை “Show hidden files and folders” என்ற கட்டளை கொடுத்தெல்லாம் பார்க்க முடியாது. இதனைப் பின்னர் வேண்டும் என்று எண்ணுகையில்“attrib s h D:\Data” , எனக் கட்டளை கொடுக்க வேண்டும். அப்போது இந்த போல்டர் காட்டப்படும்.



கேள்வி: வை-பி இயக்கம் குறித்து விளக்கம் தரவும். ஒரே மாதிரியான சாதனங்களைத் தான் இந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இணைக்க முடியுமா? வெவ்வேறு வகையான சாதனங்களையும் இணைக்க முடியும் என்றால் வழி என்ன?

-எஸ். சம்சுதீன், கோயம்புத்தூர்.

பதில்: இதற்கான பதிலை முன்பு ஒருமுறை கம்ப்யூட்டர் மலரில் தந்துள்ளேன். இருப்பினும் தாங்கள் கூடுதலாகக் கேட்ட சில விஷயங்களையும் இணைத்து இங்கே விளக்குகிறேன்.

வை-பி (WiFi– Wireless Fidelity) என்பது ஒரு வகையான நெட்வொர்க். தொழில் நுட்ப ரீதியாகச் சொல்வ தென்றால் இதை 802.11 நெட்வொர்க் என அழைப்பார்கள். இந்த நெட்வொர்க்கில் பல டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும். கம்ப்யூட்டர்கள், டிஜிட்டல் கேமராக்கள், மியூசிக் பிளேயர்கள், மொபைல் போன்கள் ஏன் சில இடங்களில் டிவிக்கள் கூட இதில் இயங்கும். எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டர் வை-பி யில் இயங்கக் கூடியது என்றால் வை-பி நெட்வொர்க் இயங்கும் இடத்தில், இதனை ஹாட் ஸ்பாட் என அழைப்பார் கள், உங்களால் இன்டர்நெட்டில் நுழைந்து இயங்க முடியும். இத்தகைய ஹாட் ஸ்பாட்கள் இன்று விமான நிலையங்கள், காபி ஷாப்கள், இரயில்வே ஸ்டேஷன்கள் போன்ற இடங்களில் உள்ளன. பொதுமக்களுக்கு இந்த இடங்களில் வை-பி இணைப்பு இலவசமாகவே கிடைக்கிறது. இந்த தொழில் நுட்பம் பலர் ஒருவருக்கொருவர் தங்களை இணைத்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது. WiFi எனப்படும் இந்த சொல் தொடர் WiFi Alliance என்ற நிறுவனத்தால் நமக்குக் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து பலவகை டிஜிட்டல் சாதனங்களை வை-பி இணைவு பெற்றது எனச் சான்றளித்து வருகிறது. அதாவது இந்த சான்றிதழ் பெற்ற எந்த ஒரு சாதனமும் அ தேபோல் சான்றிதழ் பெற்ற இன்னொரு சாதனத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக நீங்கள் எச்.பி. நிறுவனத்திடம் இருந்து வை-பி இணைவு தன்மையுடன் கூடிய லேப் டாப் வாங்கியிருக்கலாம். சோனியிடமிருந்து இதே தன்மையுடன் கூடிய டிஜிட்டல் கேமரா வாங்கியிருக் கலாம். இந்த இரண்டும் வை-பி நெட்வொர்க் இயங்கும் இடத்தில் எந்த வயர் தொடர்பும் இன்றி இணைப்பு பெற்று இயங்கும்.



கேள்வி: பயர் வால் பாதுகாப்பு கம்ப்யூட்டரில் உள்ளது. ஆனால் பல வேளைகளில், இதனால், செயல்படுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே வேகமாகச் செயல்பட வேண்டும் என எண்ணுகையில் இதன் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்த முடியுமா? அதற்கான செட்டிங்ஸ் என்ன?

-சே. அன்புக்குமார், மதுரை.

பதில்: பயர்வால் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் வேகத்தை மட்டுப் படுத்துகிறது என்று நீங்கள் எண்ணினால் அதன் இயக்கத்தினை தேவையற்ற போது நிறுத்தி வைக்கலாம்; பின் தேவைப்படும்போது இயக்கலாம். அதற்கான செட்டிங்ஸ் இதோ.

1. Start மெனு சென்று Control Panel செல்லவும்.

2. பின் Network Connections என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

3. பாப் அப் ஆகும் விண்டோவில் Local Area Connection என்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Properties டேப் மீது கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டேப்களில் Properties டேப் தேர்ந்தெடுத்து பின் Advanced Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இனி பயர்வால் தேவை என்றால் “Protect my computer and network by limiting or preventing access to this computer from the Internet’ என்பதில் செக் செய்திடவும். பயர்வால் தேவை இல்லை என்றால் இந்த டிக் மார்க்கை எடுத்துவிடவும். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

5. நீங்கள் விண்டோஸ் பயர்வால் பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள விண்டோஸ் பயர்வால் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் On (Recommended) என்பதனைத் தேர்ந் தெடுக்கவும். பயர்வால் இயக்கம் தேவை இல்லை என்றால் Off (Not Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்







விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள் அனைவருமே ஏதாவது எர்ரர் செய்தியினை, நாள்தோறும் சந்தித்திருப் பார்கள். விண்டோஸ் இயக்கத்தில் எங்கு பிரச்னை உள்ளது என்று இந்த செய்திகள் நமக்குக் காட்டுகின்றன. சற்று விபரம் புரிந்தவர்கள் அதனைப் படித்து புரிந்து அதற்கேற்ற வகையில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள் கிறார்கள். பலர் இங்கே எர்ரர் இருக்கின்றது தெரிந்து என்ன செய்ய? இது போல செய்திகள் வராமல் இருந்தாலே நல்லது என்று நினைக் கிறார்கள். அவர்களுக்கான தகவல் இது. இது போன்ற செய்திகள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு களைப் பார்க்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவில் My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.

2.அடுத்து மெனுவில் System Properties விண்டோ திறப்பதற்காக Properties பிரிவில் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இந்த அட்வான்ஸ்டு டேப்பில் கிடைக்கும் விண்டோவில் Error Reporting என ஒரு பட்டன் கிடைக்கும்.

5.இப்போது எர்ரர் ரிபோர்ட்டிங் விண்டோ கிடைக்கும். பின் இதில் Disable Error Reporting என்று இருப்பதனை செலக்ட் செய்திடவும். இதனைக் கிளிக் செய்தால் அனைத்து எர்ரர் செய்திகளும் காட்டப்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் உள்ள எர்ரர் செய்திகள் காட்டப்படும். எதுவும் வேண்டாமப்பா! ஆளை விடுங்க!! என்று எண்ணுபவரா நீங்கள். அப்படி என்றால் But notify me when critical errors occur என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள்.

6. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி எர்ரர் செய்திகள் நீங்கள் செட் செய்தபடி மட்டுமே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் இருக்கும்







கர்சர் பெரிதாக வேண்டுமா?

உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் கர்சர் பெரியதாகவும், உங்களுடைய கம்ப்யூட்டரில் சிறியதாகவும் இருக்கிறதே என்று உங்களுக்குக் கவலையாக உள்ளதா? சற்றுப் பெரியதாக கர்சர் இருந்தால் தேவலாம் என்று எண்ணுகிறீர்களா? இந்த ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஸ்டார்ட் பட்டனை முதலில் அழுத்தி அதிலிருந்து மேலெழும் கட்டத்தில் செட்டிங்ஸ் மற்றும் கண்ட்ரோல் பேனல் (Settings, Control Panel.) செல்லவும். அதில் மவுஸ் ஐகான் (Mouse icon) என்றிருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள பாயிண்ட்டர்ஸ் (Pointers) என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு ட்ராப் பாக்ஸ் கிடைக்கும். அதன் தலைப்பாக “Scheme.” என்ற சொல் இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் இயக்கும் விண்டோஸ் தொகுப்பிற்கேற்ற வகையில் Windows Standard (extra large) (system scheme) அல்லது Windows Standard (large) (system scheme) என ஒன்று இருக்கும். இதில் எந்த திட்டம் உங்கள் கணிப்பொறியில் இருந்தாலும், அது வழக்கமான கர்சரைக் காட்டிலும் சற்றுப் பெரிய கர்சரையே கொடுக்கும். மேலும் பல வகையான கர்சர்களை அங்கு பார்க்கலாம். தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி கர்சர் நீங்கள் தேர்ந்தெடுத்த அளவில், வகையில், தோற்றத்தில் இருப்பதனைக் காணலாம்.



கண்ட்ரோல் + இஸட்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் தாங்கள் அவசரத்தில் செய்த தவறை உடனடியாக நிவர்த்தி செய்திட, அதாவது செய்த தவறை ஒரு விளைவும் இல்லாமல் ஆக்கிட கண்ட்ரோல் + இஸட் கீ சேர்க்கையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதனைப் பெரும்பாலும் வேர்ட் தொகுப்பில் பயன்படுத்துபவர்களே அதிகம். அதில் மட்டுமே இந்த கீகள் சேர்க்கை பயன்படும் எனப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த கீ சேர்க்கை விண்டோஸின் அனைத்து பயன்பாட்டுத் தொகுப்புகளிலும் செயல்படும். எடுத்துக் காட்டாக, டெஸ்க் டாப் திரையில் ஐகான் ஒன்றைப் பதிக்கிறீர்கள். அதனை வைத்தது தவறு என்று அடுத்த கணம் எண்ணினால், உடனே கண்ட்ரோல் + இஸட் கீகளை அழுத்துங்கள். ஒட்டி வைத்த ஐகான் மறைந்து போகும். விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரிலும் இது செயல்படும். எடுத்துக்காட்டாக பைல் ஒன்றை அழிக்கிறீர்கள். பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும் என , அதனை மீட்க எண்ணினால் ரீசைக்கிள் பின் தேடிப் போக வேண்டாம். கண்ட்ரோல் + இஸட் கீகளை அழுத்தவும். பைல் உடனே கிடைக்கும். ஆனால் நீங்கள் பைலை அழிக்கும்போது, ரீசைக்கிள் பின் தொட்டிக்கு அது போகக் கூடாது என எண்ணி ஷிப்ட் கீயைச் சேர்த்து அழுத்தியிருந்தால் கண்ட்ரோல் +இஸட் கீயை அழுத்தினாலும் பைல் கிடைக்காது.



டூல் பார் பட்டன்கள்

உங்கள் டூல் பாரில் உள்ள பட்டன்கள் சிறியதாக உள்ளதே என்று கவலையாக உள்ளதா? அவற்றைப் பெரியதாக வைத்து இயக்க விருப்பமா? கீழே குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுங்கள். டூல்ஸ் (Tools) மெனு செல்லவும். அங்கு (Customize) என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ஏதேனும் டூல்பாரில் வலதுபுறமாக மவுஸைக் கிளிக் செய்திடவும். அதன்பின் வரும் பிரிவுகளில் (Customize) ஐத் தேர்ந்தெடுக் கவும். பின் கிடைக்கும் விண்டோவில் (Options tab) பிரிவில் பார்த்தால் அங்கு (Large Icons) என்ற சொற்களுக்கு எதிரே ஒரு சிறிய கட்டம் கிடைக்கும். அதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். உடனே பட்டன்கள் அனைத்தும் பெரியதாக இருக்கும். டெக்ஸ்ட் அப்படியே தான் இருக்கும். இந்த பட்டன் அளவு உங்களுக்குப் பிடித்தால் குளோஸ் (Close) பட்டனைக் கிளிக் செய்திடவும். இனி பட்டன் புதிய அளவிலேயே இனி இருக்கும். இது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். மீண்டும் பழைய அளவிலேயே இருக்கும். இதில் ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த செயல்பாட்டினை எந்த விண்டோஸ் தொகுப்பில் மேற்கொண்டாலும், அது அனைத்து விண்டோஸ் தொகுப்பிலும் எதிரொலிக்கும். எடுத்துக்காட்டாக வேர்ட் தொகுப்பில் மேற்கொண்டாலும், பிற எக்ஸெல் போன்ற ஆபீஸ் தொகுப்புகளிலும் இந்த பெரிய பட்டன்கள் கிடைக்கும்.











Thursday, May 5, 2011

ரூபம்.(சிறுகதை)








இவன் வீட்டின் வாசற்படியை அடைந்தபோது, வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ஷே உரையாற்றிக்கொண்டு இருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு, தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான்.



'உங்களைக் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் வாழவைப்பது, என்னுடைய பொறுப்பு. நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன்’ என ராஜபக்ஷே தமிழில் பேசிக்கொண்டு இருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்ஷேவின் முகம் நிறைத்து இருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும், நவீனமாகவும், துல்லியமான ஒலி அமைப்புடனும், அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை, சவூதியில் இருந்து அனுப்பி இருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டிக்கிடந்தது





இவன் சிறுவனாக இருந்தபோது, அம்மாவிடம் ஒரு தொலைக்காட்சி வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்து இருக்கிறான். இறந்துபோன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களுக்கு வருமானம். அந்தப் பணத்தில்தான், அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினி இல்லாமல், பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி இருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி பார்க்க வருவார்கள். அக்காவுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வம் இல்லை. ஆனால், இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால், அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண் கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா 'வீட்ட போகலாமா?’ என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் ரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேநீரும் அவித்த பனங் கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால், தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான்.



இவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத் தாளை ஒட்டி, நடுவே கத்தரித்து, பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக்கொண்டு இருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும், தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கே இருந்த 'மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, இவன் வசியத்தில் விழுந்தவன்போல் இருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதே இல்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை, ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டு இருப்பதுபோல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சில சமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருப்பான். ஒலி மட்டும் வந்தாலும், படக் காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும்போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண் இமைக்காமல் பல நிமிடங்கள் பார்த்துக்கொண்டு இருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றுதான் இவனுக்குத் தேவையானது. அதில் இருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும்போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான்.



பக்கத்து வீட்டுக்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்து இருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்து இருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத் தெரு இருந்தது. அந்த நெடுஞ்சாலையில் ராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். ராணுவ வாகனங்கள் தூரத்தில் வரும் ஒலி கேட்ட உடனேயே, கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையில் இருந்து விலகி ஓடிவிடுவார்கள். ராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும்போது, சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வது இல்லை. அது வெறுமனே எச்சரிக்கைவெடி யாகத்தான் இருக்கும். ராணுவம் ஒரு போதும் நெடுஞ்சாலையில் இருந்து விலகி, கிராமத்துக்குள் நுழைந்தது இல்லை.



கடைத் தெரு மூடிக்கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டுக்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கி இருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால், இப்போது இவனை நாற்காலியில் உட்காரு மாறு வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேநீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள்தான். அவசரத்துக்கு, சீனி, தேயிலை என இரு பக்கமும் கைமாற்றும் நடப்பது உண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக்கொள்வது என்றால், கூச்சமாக இருக்கும். தொலைக்காட்சி விஷயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான்.



தீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போனபோது, உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா, ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன், கையில் இருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா, இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு, ஓர் அழகிய துணி உறையைத் தைக்கச் செய்து, அதனைக்கொண்டு தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப் பைக்குள் இப்போது தீப்பெட்டி கள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக் காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக் கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்து இருந்தான்.



பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்து இருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா 10 தடவைகள் கூப்பிட்ட பின்பு, குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு வந்து, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்துவிடுவான். இதனால் ஒன்றும் இவனது படிப்பு பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் இவன் முன்னணி மாணவனாகவே இருந்தான். அக்காவிடம் ஒருநாள் தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி, 'எங்கிட வாத்திமாரவிட இது பிரயோசனமானது’ என்றான்.



பல்கலைக்கழக அனுமதி, சொற்ப மதிப்பெண்களால் தவறிப்போனது. கொஞ்சம் மனம் சோர்ந்துபோனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும், அறையில் இருந்த விளக்கை அணைத்துவிட்டு, இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருப்பான். அம்மா அவ்வப்போது வந்து 'இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப்போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது.



இவனுக்கு 20 வயதானபோது அந்தக் கிராமத்துக்குள் ராணுவம் முதல் தடவையாக நுழைந்தது. ராணுவம் வரும் செய்தி கேட்டு, சனங்கள் வீடுகளில் இருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு, உயிர் தப்பச் சிதறி ஓடினார்கள். அக்கா, அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து, நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால், இவனும் அம்மாவும் நகரத்துக்குப் போவது என்று முடிவு எடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளுக்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக்கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று, நகரத்துக்குச் செல்லும் வாகனம் ஒன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றிவிட்டு, இவன் வாகனத்தை சைக்கிளில் பின் தொடர்ந்தான்.



நகரத்துக்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்தில் இருந்த உறவினரின் கடை ஒன்றுக்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு, நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். 4 மணி நேரப் பயணத்தில் 20 சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன், அங்கு இருந்து வயல் வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான்.



இரவாகிக்கொண்டு இருந்தாலும் காட்டின் மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையில் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது.



இவன் காட்டுக்குள்ளால் நடந்து வந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ, இவனுக்குக் 'கானகன்’ என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை 'யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால், அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்துக்குள் கதை இருந்தது.



போரிடவே பிறந்தவன்போல இவன் இருந்தான். இவனது இடது கண்ணுக்குத் திட்டமிடல் என்றும், வலது கண்ணுக்குத் துணிச்சல் என்றும் பெயர். இவனது இடது காலுக்கு நிதானம் என்றும், வலது காலுக்கு வேகம் என்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்து இருக்கிறான். இவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும், தனி ஆளாகப் போராடித் தளம் திரும்பி இருக்கிறான். கடைசியில், விமானக் குண்டு வீச்சு ஒன்றில் வேகம் எனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது.



ஊன்றுகோலின் உதவியுடன் இவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவுக்கோ அக்காவுக்கோ தான் கால் இழந்த செய்தி தெரியா மல் பார்த்துக்கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோதுகூட இவன் அம்மாவைப் பார்க்கப் போக வில்லை. இவன் இருக்கும் இடமும் அம்மாவுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான்.



ஒரு வருடத்துக்குப் பின்பு, புலிகளின் தொலைக்காட்சியில்தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்ததுபோல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப் பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.



புலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராக இருந்தான். அவற்றில் 'விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணி நேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சி யில் தொகுத்து வழங்குவான். பாடல்களுக்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன.



சாந்தன் ஒருமுறை இவனிடம் 'என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார்.



வழித் தெருவில் இவனை மக்கள் காணும்போது இவனைச் சூழ்ந்துகொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும்போது உட்கார்ந்துகொண்டு இருப்பதால், இவனுக்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது, அவர்களது கண்கள் இருண்டுபோயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி முகர்ந்தார்கள். இழந்துபோன குழந்தைகள் அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கலாம்.



இவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். 'இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிடப் பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என இவனது உதடுகள் முணுமுணுக்கும்.



சமாதானக் காலத்தில் வன்னியில் இருந்து இசைக் குழு ஒன்று அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது, நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன்தான் அவசியம் வர வேண்டும் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்டபோது, இவனுக்கு அருகில் இருந்த பாடகன் 'கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா?’ என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில், பாடகன், 'குடிக்கிறதில ஒண்டுமில்ல... ஆனால்,குரலுக் குக் கூடாதெல்லா...’ என முனகிவிட்டு, இருக்கையில் சாய்ந்துகொண்டான்.



அய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டுக்குச் சாப்பிட வர வேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக, இவனைத் தங்களது வீட்டுக்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளில் இவன் மேடைகளில் தோன்றும்போது எல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரல் இட்டார்கள்.







அங்கு இருந்து திரும்பும்போது விலை உயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின்போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையில் எடுத்து, 'இதை எனக்குத் தருவாயா?’ என அதிகாரி கேட்டபோது, அதை அதிகாரியே எடுத்துக்கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான்.



முகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். இவனுக்கு என்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரீஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸ்ஸில் ஓர் அட்டையும் கிடைத்து இருந்தன. பாரீஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டு இருந்தது. அவற்றில் எழுதப்பட்டு இருந்தவற்றுக்காக அல்லாமல், அந்த அட்டைகளின் அழகுக்காக அவற்றைக் கிழித்துப் போட மனம் அற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான்.



முகாமில் இருந்த தோழர்களுக்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான்.



நந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரண் அடையும் முடிவை எடுத்தபோது, இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவும் இல்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும், அணி சிதறி மக்களுக்குள் கரைந்துபோனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பம் இல்லை. அதை மடியில் செருகிக்கொண்டு, நந்திக் கடல் ஓரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து ராணுவத் தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் செல்ல, ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக, ஒரு படகில் 20 பேர் வரை தயாராக இருந்தார்கள். ராணுவத்திடம் இருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும்போது படகு புறப்படுவதாகத் திட்டம்.



இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்துவிட்டு, ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்று இருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான்.



படகு கரையை அடையும்போதுதான், கரையிலேயே வரிசையாக ராணுவ வீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக்கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும், 'ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்!’ என்ற உத்தரவு வந்தது. இவர்கள், 'அய்யா, நாங்கள் பொதுமக்கள்’ எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது, கரையில் இருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல் நீர் துடித்துச் சிதறியது.



ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு, அவர்களது உடல்களிலே வெடி பொருட்கள் கட்டப்பட்டு இருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோ மீற்றர் நடத்திச் சென்ற ராணுவம், அங்கு இருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர் களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது.



இவன் தலையைக் குனிந்தவாறே இருந் தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டு இருந்தது. குழந்தைகள் தாகத்தாலும், பசியாலும், வெப்பத்தாலும் அழுதபோது, அவர்களது தாய்மார்களால் 'பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன.



வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது, இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர, இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்து இருந்தபோது, இவனது தோளைத் தொட்டு ஒரு ரகசியக் குரல் 'கானகன்’ என அழைத்தது.



சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது, ஒரு ராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக்கொண்டு நின்றான். தரையில்கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே, மறு கையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு, இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான்.



தகரங்களால் அடைக்கப்பட்டு இருந்த அந்தச் சிறிய அறைக்குள்தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்டபோது, ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். 'உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலன் இல்லை என்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்த வரை உண்மைகளைப் பேசிவிடாமல் இருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற்போயின.



விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டு இருந்தது. சுற்றி நின்ற ராணுவத்தினர் சிலர், இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறு இருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோது எல்லாம், ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. 'கானகன்தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்’ என ஓர் அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும், படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன.



தரையோடு தரையாக நகர முடியாதுகிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோலச் சுற்றி நின்று, தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது கேள்விகளுக்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்காரவைத்துவிட்டு, அசையவிடாமல் பிடித்துக்கொண்டே, இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியில் இருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையை 'கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து, இவனது கையில் கொடுத்து, அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவதுபோல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத் துண்டு ரத்தம் வடிய... அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு போனது.



அடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலில் இருந்த ரத்தம் வாந்தியாக வெளியேறிக்கொண்டு இருந்தது. இவன் புனர் வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறே இருந்தான். இந்தப் புனர் வாழ்வு முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 200 சரண் அடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். நோயால் இறந்த ஆறு பேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக, புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். 200 என்ற எண்ணிக்கை குறையாமல் ராணுவத்தினர் பார்த்துக்கொண்டார்கள்.



இவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது. அவர்களில் ஒருவன் தனது ஆடைகளைக் கழற்றி வீசுவதிலேயே குறியாக இருந்தான். அதற்காக ராணுவத்தினரிடம் ஒவ்வொரு நாளும் உதைபட்டான். அவன் அங்கு இருந்து விடுதலையாவதற்காக நாடகம் போடுகிறான் என ராணுவ அதிகாரி சொன்னான்.



இவர்களில் தெரிவு செய்யப்பட்ட 50 பேர்களுக்குப் பயிற்சி அளிக்க ஒரு மன நல மருத்துவர் வந்தார். அவர் மனச் சோர்வில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என உரை யாற்றிக்கொண்டு இருக்கும்போதே இவன் குறுக்கிட்டு, 'இங்கிருந்து விடுதலையாகி வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சியாயிருப்போம் என நினைக்கிறேன்’ என்றான். மருத்துவர் எது சொன்னாலும் இவன் விட்டேற்றியாக அவரைத் தட்டிக் கழித்தான். கடைசியில் மருத்துவர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிட்டார். அடுத்த பயிற்சி வகுப்பை ராணுவத்தினருக்கு எடுக்கவிருப்பதால், முன்னாள் போராளிகளுக்கான முதல் நாள் பயிற்சி வகுப்பை இத்துடன் முடித்துக்கொள் ளலாம் என்று மருத்துவர் சொன்னார்.



சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து அங்கு இருந்து விடுதலையான முதலாவது அணியில் இவனும் இருந்தான். அந்த அணியில் அவயங்களை இழந்தவர்கள் மட்டுமே இருந்தனர். புதிய வேட்டியும் சட்டையும் ராணுவத்தினரால் வழங்கப்பட்டன. முகாமில் விழா நடத்தி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்னாள் போராளிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



இவனை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தார். அம்மாவின் முகம் முழுவதும் சிரிப்புத் தொற்றியிருந்தது.



அக்காவுக்குக் கல்யாணமாகி அவள் நகரத்தில் குடியிருந்தாள். இவ்வளவு நாட்களும் அம்மா, அக்காவுடனேயே தங்கியிருந்தாள். அம்மா, தன்னை அக்காவின் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்வதாக இவன் எண்ணினான். ஆனால், அம்மா இவனைக் கிராமத்து வீட்டுக்கு அழைத்து வந்தாள்.



வீடு உருக்குலைந்து இருந்தது. கதவுகளையும் நிலைகளையும்கூடத் திருடிச் சென்று இருந்தார்கள். வாசலுக்கும் ஜன்னலுக்கும் அம்மா துணியால் திரை செய்துபோட்டார். இவனது அறைக்குள் ஒரு மேசையும், நாற்காலியும், படுக்கையும் வாங்கிப் போட்டார். இவன் அந்த அறைக்குள்ளேயே அடைந்துகிடந்தான். வீட்டுக்குப் போனால், மகிழ்ச்சி உருவாகும் என மனநல மருத்துவரிடம் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்த்தான்.



கடைத் தெருவே மாறியிருந்தது. முன்பு இவன் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் 'மீனா கபே’, இப்போது 'லங்கா கபே’ ஆகியிருந்தது. அதை ராணுவத்தினர் நடத்திக்கொண்டு இருந்தனர். இப்போதும் அங்கே இடையறாது தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. இவன் தலையைக் கவிழ்ந்தவாறே அதைக் கடந்து சென்றான். கடைத் தெருவில் எல்லோருமே தன்னைப்போலவே தலையைக் குனிந்தவாறே நடந்துகொண்டு இருப்பதாக இவனுக்குத் தோன்றியது. தற்செயலாகச் சந்தித்த கண்களில் அச்சத்தை மட்டுமே இவன் பார்த்தான்.



அம்மா இவனுக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்காகப் பணம் திரட்டிக்கொண்டு இருந்தார். காலைப் பொருத்தி நான் எங்கே போகப் போகிறேன். அந்தப் பணத்தில் ஒரு தொலைக்காட்சி வாங்கினாலாவது, அறைக்குள் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கலாம் என நினைத்தான். ஆனால், அவ்வாறு கேட்பது அம்மாவைப் புண்படுத்தக்கூடும் என்பதால், இவன் வெறுமனே அறைக்குள் அடைந்துகிடந்தான். வாரம் ஒருமுறை ராணுவச் சாவடிக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மட்டுமே வெளியே போனான்.



அன்று மாலையில் பக்கத்து வீட்டில் இருந்து பாட்டுச் சத்தம் வந்துகொண்டு இருந்தது. மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக்கொள்வதே என மன நல மருத்துவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. கண்களை மூடிக்கொண்டு படுத்து இருந்தான். பொழுது பட்டதும் ஊன்று கோலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவன் பக்கத்து வீட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறிய போது, உள்ளே இருந்த தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ஷே உரையாற்றிக்கொண்டு இருந்தார். சற்று நேரத்தில் தொலைக்காட்சி திடீர் என நிறுத்தப்பட்டது.



வீட்டுக்காரர் வாசலுக்கு வந்து இவனைப் பார்த்தார். இவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னான். வீட்டுக்காரர் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவாறே, அவர்கள் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றார். இவன் கையை வாசற்படியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி எழுந்து சுவரில் சாய்த்துவைத்திருந்த ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு படி இறங்கும்போது, வீட்டுக்காரர், 'கானகன், நீ இஞ்ச வந்து போனால், ஆமியால எங்களுக்கும் பிரச்னை வரும்’ என்று முணுமுணுத்தது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.



வீதியில் நின்று சட்டைப் பையில் இருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்க முயன்றான். கை நடுங்கிக்கொண்டு இருந்தது. நான்காவது தீக்குச்சியிலேயே பற்றவைக்க முடிந்தது. இந்தப் பழக்கம் தடுப்பு முகாமில் இருந்தபோது வந்திருந்தது. அம்மா காலையில் ஒரு கட்டு பீடி வாங்கிக் கொடுப்பார்.



வாயில் பீடியை வைத்தவாறே நடந்தான். இவனது ரவி என்ற பெயரை வீட்டுக்காரர் மறந்து, இவனைக் கானகன் என அவர் அழைத்தது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பீடியை இழுத்துக்கொண்டே நடந்தான். விடுதலையாகி வந்து இவ்வளவு நாளாகியும், அக்காவோ, அத்தானோ, தன்னை இதுவரை வந்து பார்க்காதது திடீர் என இவனுக்கு உறைத்தது.



நடுநிசியில் அம்மா எழுந்து கை விளக்கை எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து, இவனது அறையை நோக்கிப் போனார். ஒவ்வொரு நாளும் அம்மா இவ்வாறு சென்று பார்ப்பார். இவன் தூங்கிக்கொண்டு இருப்பது அவருக்கு நிம்மதியாக இருக்கும்.



அம்மா இவனது அறையின் வாசலில் நின்று இவனது படுக்கை இருந்த திசையில் விளக்கைப் பிடித்தபோது, படுக்கை காலியாக இருந்தது.



அம்மா பதற்றத்துடன் அறையின் மூலை ஒன்றுக்கு வெளிச்சத்தைத் திருப்பினார். அங்கே அவன் சுவரோடு சாய்ந்து தரையில் ஆடாமல் அசையாமல், சிலைபோல உட்கார்ந்து இருந்தான். அம்மா, அவனது முகத்துக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது, அவனது கண்கள் மேசையையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்தார்.



அம்மா மேசைக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது, மேசையில் ஒரு தீப்பெட்டி நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அம்மா திடீர் என வெடித்துப் பெருங் குரலெடுத்து அழத் தொடங்கினார். இவன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து இருந்தான். இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டு இருந்தன!







Tuesday, April 26, 2011

எல்லாம் வெல்லும்.





பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா வது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்க மாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்தார். முந்தைய நாள் போரில் மிஞ்சிய புகை மணம் காற்றிலே நிறைந்துகிடந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அவர் முள்ளிவாய்க்காலில் இருந்ததை நினைத்துப் பார்த்தார். இத்தனை அழிவு இவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட்டது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது.







முள்ளிவாய்க்காலில் காலையில் எழும்பியதும் துர்க்காவின் கண்ணில் படுவது அகிலா என்ற சிறுமிதான். வழக்கம்போல் அரை மணி நேரம் யோகாசனம் செய்த பின்னர், மேஜர் சோதியாவின் படத்துக்கு மெழுகுத் திரி கொளுத்தி வணங்குவார். ஒரு சுற்று நடந்து கூடாரங்களைப் பார்வையிடுவார். சிலர் இன்னமும் தூக்கத்தில் இருப்பார்கள். சிலர் எழுந்து தேநீர் தயாரிப்பார்கள். அகிலாவுக்குக் குண்டு விழுந்து ஒரு கை போய்விட்டது. அதிலே கட்டுப் போட்டு இருந்தார்கள். அவள் ஒருவிதக் கவலையும் இல்லாமல், குனிந்து புற்களுக்கு இடையில் ஏதோ ஒரு பூச்சியைத் துரத்திக்கொண்டு இருந்தாள். துர்க்காவைக் கண்டதும் விறைப்பாக நின்று, 'துர்க்காக்கா’ என்று மகிழ்ச்சி பொங்கக் கத்தி, மிஞ்சி இருந்த இடது கையால் ஒரு சல்யூட் அடித்தாள். 'இங்கே நிற்கக் கூடாது. ஓடு ஓடு’ என்றார். 'எல்லாம் வெல்லும், அக்கா’ என்றாள் உற்சாகமாக. 'எல்லாம் வெல்லும்’ என்று துர்க்காவும் ஒரு சல்யூட் வைத்தார்.



அகிலா, நித்தியா, அபிராமி, சுகன்யா, கன்னிகா, குழலி எல்லோரும் காயம் பட்டவர்கள். கை இல்லாமலும், கால் இல்லாமலும், கண் போயும் கட்டுக்களோடு வாழப் பழகிய சிறுமியர். அவர்கள் போர் முனையில் தங்கக் கூடாது. மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை அங்கே இருக்க அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. குண்டு வீச்சில் பெற்றோரை இழந்தவர்கள். உறவு என்று சொல்ல ஒருவருமே இல்லை அவர்களுக்கு. நித்தியாவுக்கு இரண்டு கண்களிலும் கட்டுப் போட்டு இருந்தது. குண்டு வீச்சும், எறிகணையும், துப்பாக்கிச் சூடும் ஆறு மணித் தியாலங்கள் தொடர்ந்து நடந்து அப்போது தான் ஓய்வுக்கு வந்திருந்தது. தினம் இரண்டு மணி நேரம் ஜெனரேட்டர் போடப்பட்டு, அந்த நேரம் சனங்கள் அத்தியாவசியமான காரியங்களைச் செய்யப் பழகிக் கொண்டார்கள்.



சில வேளைகளில் துர்க்கா நினைப்பது உண்டு, குண்டுகள் விழும்போது நேராகப் பதுங்கு குழிகள் மேல் விழுந்தால் நல்லாஇருக்கும் என்று. ஒரு பிரச்னையும் இன்றி இறந்துபோகலாம். அந்தப் பதுங்கு குழியைச் சிறுமியர்தான் நிறைத்திருந்தனர். இரண்டு கைகள் போன மேனகாவும் அங்கேதான் இருந்தாள். ஒரு முறை கிபீர் இரைந்துகொண்டு தாழப் பறந்து வந்தது. மூன்று வயதுக் குழந்தைகூட அது கிபீர் விமானம் என்று சத்தத்தை வைத்தே சொல்லிவிடும். அதனுடைய வேகம் ஒலியின் வேகத்தைப்போல இரண்டு மடங்கு. விமானம் போன பின்னரே அதன் ஒலி வந்து சேரும். விமானத்தின் பேரிரைச்சலில் கத்திப் பேசினாலும், கேட்காது. சிறுமிகள் பதுங்கு குழிகளுக்குள் நீச்சல் குளத்துக்குள் குதிப்பதுபோலப் பாய்ந்துவிட்டார்கள். பக்கத்தில் குண்டு விழுந்து மண் எல்லாம் சரிந்து மூடிவிட்டது. ஆழமான குழி அது. நாலு பேர் அவசர அவசரமாகக் கிண்டியதில் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. அப்படியும் சுவர்ணலதா மூச்சுத் திணறி இறந்துவிட்டாள். எப்பவும் திருநீறு பூசி, பொட்டுவைத்து, இரட்டைப் பின்னலுடன் சிரித்தபடி இருக்கும் சிறுமி அவள். காலையில் எழுந்தவுடனேயே சீப்பைத் தூக்கிக்கொண்டு, 'அக்கா... அக்கா’ என்று யாராவது பெரிய பெண்ணைத் தேடித் திரிவாள், தலையை இழுத்துவிடச் சொல்லி.



தினம் மின்சாரம் வேலை செய்யும் இரண்டு மணி நேரத்தில் முக்கியமான செய்திகளை மக்களுக்காக ஒலிபரப்பினார்கள். வெளி நாடுகளுக்குச் செய்திகளும், தகவல்களும், படங்களும் அனுப்பப்பட்டன. பதுங்கு குழியில் காயம்பட்டு வேதனையோடு முனகிக்கொண்டு இருந்த குழந்தைகள், விஜய் நடித்து வெளிவந்த 'சிவகாசி’ படத்தை டி.வி-யில் பார்த்தார்கள். பசியையும் வேதனையையும் மறந்து, அவர்கள் படத்தில் ஆழ்ந்துபோய் இருந்ததைப் பார்த்தபோது, துர்க்காவுக்கு மனதைப் பிசைந்தது. எந்தத் தாய்மார் பெற்ற பிள்ளைகளோ... அவர்களுக்கே தாயின் முகம் மறந்துவிட்டது. அடுத்த நேர உணவு என்னவென்று தெரியாது. அது எங்கே இருந்து கிடைக்கும் என்பதும் தெரியாது. குண்டு எங்கே விழும், அப்போது யார் யார் மிஞ்சுவார்கள் என்பதும் தெரியாது. இரண்டு கைகளும் போய் மெலிந்து, இழுத்து இழுத்து மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் கன்னிகா சொல்கிறாள், 'அக்கா, தள்ளி நில்லுங்கோ, படத்தை மறைக்காமல்!’



துர்க்கா வானத்தை நிமிர்ந்து பார்த்தார். சூரியன் அன்றைய நாளைத் தயக்கத்துடன் துவங்கினான். மரங்கள் புகைமூட்டமாகத் தெரிந்தன. கால நிலை, பகல் மப்பாகவும், பின்நேரம் மழையாகவும் இருக்கும் என்று அவருக் குப் பட்டது. முழங்காலை மடித்து சப்பாத்துக் கயிற்றை இழுத்துக் கட்டினார். இடைப்பட்டியை மூன்றாவது ஓட்டை மட்டும் இறுக்கிய பின்னர் தொப்பியைத் தலை மேல் அணிந்தார். கைத் துப்பாக்கியை உறையினுள் செருகினார். 'ரெடியாக இரு’ என்று சொல்வதுபோல, செக்கண்டுக்கு 700 மீட்டர் வேகத்தில் சுடக்கூடிய ஷி97 யப்பான் துப்பாக்கியை ஆதரவாகத் தொட்டுத் தன் இருப்பை உணர்த்தினார்.



குறி சுட்டுத் திறனில் அவர் பல முறை பரிசு பெற்றவர். தீச் சுவாலை நடவடிக்கையின்போது வயிற்றிலே குண்டுபட்ட பிறகும் அந்தத் துப்பாக்கி அவரைக் கைவிடவில்லை. அந்த நிலையிலும் 1,500 மீட்டர் தூரத்தில் அவருடைய துப்பாக்கி பல தடவை குறி தப்பாமல் சுட்டது. இரண்டு வார காலமாக அரிசிக் கஞ்சியை மாத்திரம் சாப்பிட்டு வந்ததில், அவர் உடல் மெலிந்து போய் இருந்தது. ஆனால், வலிமை குன்றவில்லை. அண்ணாந்து பார்த்தபோது, ஒரு பறவையைக்கூடக் காண முடியவில்லை. ஒரு பறவையின் சத்தமாவது கேட்கிறதா என்று காது கூர்ந்து கேட்டார். போர் தொடங்குவதற்கு முன்னால் அந்த நேரம் எத்தனை பறவைகளின் ஒலி வானத்தை நிரப்பியிருக்கும்! எல்லாமே இடம் பெயர்ந்துவிட்டன என எண்ணினார். முதலில் இடம்பெயர்வது பறவைகள், பின்னர் மிருகங்கள், கடைசியில்தான் மனிதர்கள்.



அவரிடம் இருந்த நைக்கான் கேமராவினால் துர்க்கா நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளைப் படம் பிடித்திருந்தார். தன்னுடைய மடிக் கணினி யில் படங்களைச் சேமித்து, அவற்றைப்பற்றிய விவரமான குறிப்புகளையும் எழுதியிருந்தார். பறவைகளின் நிறங்கள், ஒலிகள், பழக்கவழக்கங் கள், உணவு என அவர் அவதானித்த அத்தனை தகவல்களையும் எழுதிப் பாதுகாத்தார். இந்தத் தகவல்களையும், படங்களையும், ஒலிகளையும், ஒரு நாளைக்கு காணொளித் தகடாக வெளியிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். அவ்வப் போது கம்ப்யூட்டரில் பதிந்துவைத்தவற்றை வெளிநாட்டுக்குப் பாதுகாப்புக்காக அனுப்பவும் அவர் தவறவில்லை.



அருள்மதி போராளியாக விருப்பப்பட்டு, ஒருநாள் தானாக வந்து அவர்களுடன் சேர்ந்தாள். அவளைப் பார்த்தபோது துர்க்காவுக்குச் சிரிப்பாக வந்தது. 20 வயது இருக்கும். உருண்டையாக இருந்தாள். உடம்பில் எந்தப் பாகத்தை எவ்வளவு ஆழமாகக் கிள்ளினாலும், அவள் எலும்பைத் தொட முடியாது. மூன்று மாதக் கடும் பயிற்சியில் தசைகள் கரைந்து உடம்பு முறுகிவிட்டது. அவளைப் போர்க்களத்துக்கு துர்க்கா அனுப்பியது இல்லை. அருள்மதியின் அம்மா ஆங்கில ஆசிரியை. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அருள்மதிக்கு நல்ல புலமை. கணினியில் பயிற்சி இருந்ததால், அவளைத் தகவல் தொழில்நுட்பத்தில் துர்க்கா பயன்படுத்தினார். கணினி மூடியில் தன் தாயிடம் இருந்து வந்த கடிதத்தின் ஒரு வசனத்தை வெட்டி ஒட்டி இருப்பாள் அருள்மதி. தாய்க்கு அவள் ஒரே ஆசை மகள். 'Please come home. There is only one you!’ கணினியைத் திறக்கும்போது எல்லாம் தாயின் ஞாபகம் வரும். தாயைப் பிரிந்த கடைசி நாள், தாயின் வயிற்றில் குறுக்காகத் தலைவைத்துப் படுத்து இருந்ததை நினைப்பாள். தாய் அவளைக் கொஞ்சுவது இல்லை. கழுத்தை ஆழமாக முகர்ந்து பார்ப்பதோடு சரி. போர்ச் செய்திகளைத் தினமும் கணினி மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புகையில், தாயின் நினைவு வந்து விடும். அத்துடன், வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்ற விவரங்களை அன்றாடம் திரட்டித் தருவது அவள் பொறுப்பு. ஒரு வாரத்திலேயே காட்டு வாழ்க்கைக்குப் பழகிவிட்டாள். நடக்கும்போது ஒரு சருகு அசையாது, சுள்ளி முறியாது. துர்க்கா ஓய்வாக இருக்கும் சமயங்களில், முக்கிய மான மொழிபெயர்ப்புகளை அருள்மதி எடுத்து வருவது உண்டு. பின்னர், அதுபற்றிப் பேசுவார்கள். முடிந்ததும் பாம்பு சுருள் அவிழ்ப்பதுபோல, ஓசையின்றி எழுந்து அருள்மதி செல்வாள்.



சிறு வயதிலேயே துர்க்காவுக்கு, மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் என்று இயற்கையில் ஓர் ஈர்ப்பு. தாவரவியல் பாடங்களை முதலிலேயே படித்து, ஆசிரியையிடம் வகுப்பில் கேள்விகளாகக் கேட்டபடி இருப்பாள். பறவைகளில், அவளுக்கு ஆர்வம் அப்போதே தொடங்கிவிட்டது. மருத்துவம் படிப்பது என்று தீர்மானித்தாள். ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போது, பஸ்ஸில் இருந்து இறங்கியவள் வீட்டுக்கு வரவில்லை. எல்லோரும் தேடினார்கள். அடுத்த நாள் என்ன பாடம் என்று ஆசிரியையிடம் கேட்டு அதைப் படிப்பதற்கான புத்தகங்களுடன் பள்ளியில் இருந்து புறப்பட்டவள், என்னஆனாள் என்பது தெரியவில்லை. பிறகுதான் செய்தி பரவியது. அவள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள் என்று! யாரோ அவளிடம் கேட்டபோது அவள் சொன்ன பதில், 'எல்லோரும் பந்தியில் உட்கார்ந்தால், பரிமாறுவதற்கு யாராவது வேண்டாமா?’



கிளிநொச்சி விழுந்த அன்று, துர்க்கா, அருள்மதிக்குச் சொன்னது நினைவுக்கு வந்தது. 'நீ ஆயுதத்தைத் தொடக் கூடாது. வரலாற்றைச் சொல்வதற்கு எங்களுக்கு ஒருவர் வேண்டும்!’ அருள்மதி, 'இதற்குத்தானா இவ்வளவு பயிற்சி எடுத்தேன்?’ என்றாள். ஒரு பாறையில் இருந்து இன்னோர் ஆபத்தான பாறையின் மேல் பாய்வதற்கு முன்னர் ஆயத்தம் செய்வதுபோல துர்க்கா தயங்கினார். 'நான் போரில் இறந்தால், என் உடல் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது. உயிருடன் என்னைப் பிடித்தால், என்னை எப்படிப் பாதுகாப்பது என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய இறந்த உடல் அவர்கள் கையில் அகப்பட்டால், அதற்கு என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியும். என் உடலின் மேல் அவர்கள் கைகள் ஊர்வதை, என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நீ எப்படியாவது என்னைப் புதைத்துவிடு. அல்லது எரித்துவிடு. எது அந்த நேரத்துக்குச் சுலபமோ... அதைச் செய்!’



போரிலே பங்கு பெறக் கூடாது என்று துர்க்கா சொன்னது அருள்மதிக்குப் பெரிய ஏமாற்றதைத் தந்தது. 'சரி, ஆனந்தபுரம் போர் திட்டத்தையாவது சொல்லுங்கள். விவரம் எனக்குத் தெரிய வேண்டாமா?’ என்றாள் அருள்மதி. 'உரிய நேரம் வரும்போது, நீயாகவே தெரிந்துகொள்வாய். அவசரப்படாதே’. 'கிழக்குப் பக்கம் என்று கூறுகிறீர்கள். எவ்வளவு தூரம் கிழக்குப் பக்கமாக முன்னேற வேண்டும்?’ என்று கேட்டாள் அருள்மதி. 'கிழக்குப் பக்கம் முடியும் மட்டும். அல்லது அவர்கள் எங்களை நிறுத்தும் மட்டும்!’



அந்த நேரம் பார்த்து கை ரேடியோ சடசடவென ஒலித்தது. சங்கேத வார்த்தைகள். அருள்மதிக்கு ஒன்றும் புரியவில்லை. துர்க்கா கோபமானது மட்டும் தெரிந்தது. பின் பக்கத்தைக் காட்டிக்கொண்டு துர்க்காவிடை பெறாமல் நடந்தார். அதுவே கடைசிச் சந்திப்பு!



ஜெயதீசனை, துர்க்காவால் மறக்க முடியாது. அவரைப் பார்த்தவுடனேயே சிரிப்பு வரும். காலையில் முதல் வேலையாக ஒரு கையால் கீழே நழுவும் கால் சட்டையைப் பிடித்தபடி, மறு கையில் பனம் பழங்களை எங்கேயோ போய் பொறுக்கிக்கொண்டு வருவார். அவை சிறுமிகளுக்கு. ஜெயதீசனுடன் யாருமே கோபிக்க முடியாது. எங்கே எல்லாம் போகக் கூடாதோ, அங்கே எல்லாம் போவார். அவருடைய நாடு ஆஸ்திரேலியா. தன்னுடைய நாட்டைவிட்டு வந்து, அநாதைக் குழந்தைகளுக்காக அவர்களுடன் வாழ்ந்தார். எல்லோரும் கழித்துவிட்ட ஒரு பழைய காரில் மாற்றங்கள் செய்து, அதை ஆமணக்கு விதை எண்ணெயில் ஓடுகிற மாதிரி தயாரித்து இருந்தார். அதற்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆமணக்கு செடிகளைப் பயிரிட்டு வளர்த்தார். அவர் பெரிய விஞ்ஞானி, சேவையாளர், பரோபகாரி, குழந்தைகளுக்கு மகிழ்ச்சி நேரம் ஒதுக்கி, ஆடல் பாடல் என்று அவர்களைச் சந்தோசப்படுத்தினார். கடந்த இரண்டு வாரங்களாக அவரைப்பற்றிய ஒரு தகவலும் இல்லை. குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முள்ளிவாய்க்காலை விட்டு நகர்ந்தாரா என்பது தெரியவில்லை.



நாலு வருடங்களுக்கு முன்னர் தலைவரு டைய 51-வது பிறந்த நாள் வந்தபோது, துர்க்கா ஆச்சர்யமான ஒரு பரிசு தந்தார். 16 வருடங்களாகக் காடுகளில் அலைந்து திரிந்து எடுத்த 100 விதமான பறவைகளின் படங்களை அச்சடித்து தட்டியில் ஒட்டி, அதன் கீழே பறவைகளின் பெயர்களை எழுதி, 'ஈழத்துப் பறவைகள்’ என்று தலைப்பிட்டு தலைவரிடம் நேரே கொடுத்தார். அந்தத் தடவை தலைவர் துர்க்காவையும் விசேடப் பயிற்சியில் இருந்த சில பெண் போராளிகளையும், சந்திப்புக்கு அழைத்திருந்தார். பயிற்சியில் இருந்த ஓர் இளம் பெண், அவளுடைய பெயர் மாலதியோ என்னவோ, வெகுவான கூச்சத்துடன் அமர்ந்திருந்தாள். ஒரு பூனை வந்து, அவ்வளவு பேர் இருக்க, மாலதியின் மடியில் ஏறி உட்கார்ந்தது. மாலதி பயத்தில் நெளிந்துகொண்டு இருந்தாள். தலைவர் பார்த்துச் சிரித்துவிட்டு, 'புலி பூனைக்குப் பயப்பிடுவதா?’ என்று சொன்னார். பின்னர், பூனையை வாங்கி கூட்டம் முடிவுக்கு வரும் வரை, தன் மடியில் வைத்துத் தடவியபடியே இருந்தார்.



துர்க்கா கொடுத்த பரிசைத் திறந்து பார்த்ததும் திடுக்கிட்டார். 'நன்றி... நன்றி. இத்தனை பறவைகளா? எனக்குத் தெரியவில்லையே?’ என்று தலைவர் வியந்தார். ஒவ்வொரு பறவையின் பெயரையும் உரத்துச் சொன்னார். மைனா, வாலாட்டி, தையல்காரி, பிலாக்கொட்டை, சிட்டுக்குருவி, தகைவிலான், புளினி, வானம்பாடி, புறா, குயில், மரங் கொத்தி, கரிக்குருவி, குக்குறுப்பான், செண்பகம், நாகணவாய் என்று அவர் சொல்லிக்கொண்டே வர... எல்லோரும் அதிசயமாகப் பார்த்தார்கள். '100 பறவைகளை மாத்திரம்தான் நான் படம் பிடித்துஇருக்கிறேன். ஆனால், 240 பறவை வகைகள் இருக்கின்றன’ என்றார் துர்க்கா. தலைவர், 'இவை எல்லாம் எங்கள் பறவைகள். சுதந்திரமானவை. தடையின்றி அவை எங்கேயும் பறக்கலாம்’ என்று பெருமையோடு சொன்னார். சிரிதேவி குறுக்கிட்டு ஒரு பறவையைச் சுட்டிக்காட்டி, 'இது என்ன பறவை? புதுசாக இருக்கிறதே’ என்றாள். துர்க்கா பதில் சொல்வதற்குள், தலைவர் சிரிதேவியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு 'இது தெரியாதா? 6 மணிக் குருவி, காலை 6 மணிக்குச் சத்தம் போடும்’ என்றார். எல்லோர் கண்களும் தலைவர் பக்கம் திரும்பின. 'சிரிதேவி காலை 6 மணிக்கு எழும்பினாத்தானே தெரியும்!’ என்று அவர் சொன்னதும், எல்லோரும் சிரித்து அந்த இடம் கலகலப்பானது. எத்தனையோ சந்திப்புகள். ஆனால், அந்தச் சம்பவத்தை மாத்திரம் துர்க்காவினால் மறக்க முடிய வில்லை.



ரேடியோவில் அறிவிப்பாளராகச் செயல்பட்டவர் இறைவன். தினம் அவருக்குக் கிடைக்கும் இரண்டு மணி நேரத்தில், செய்தி வாசிப்பதோடு சுவையான தகவல்களையும் கூறி, அந்த ரேடியோ நேரத்தை உபயோகம் உள்ளதாக மாற்றிவிடுவார். அவருக்கு இஸ்ரேல் நாட்டு முன்னாள் போர்த் தளபதி மோசே தயான் மீது அளவற்ற பற்று. அவரைப்பற்றிய ஏதாவது கதை ஒன்றைச் சொன்ன பிற்பாடுதான், இறைவன் அன்றைய நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவார். மோசே தயான், ஓர் இளைஞனாக பிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றியபோது, ஒரு கண்ணை இழந்தவர். ஒருநாள் விதிக்கப்பட்ட வேகத்துக்கு மேலாக கார் ஓட்டிக்கொண்டு போனபோது, போலீஸ் அவரைப் பிடித்துவிட்டது. அவர் சொன்ன பதில், 'எனக்கு ஒரு கண்தான் இருக்கிறது. நான் எதைப் பார்ப்பது ரோட்டையா அல்லது வேகம் காட்டும் கருவி யையா?’ போலீஸ் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டது. இப்படி சின்னச் சின்ன தகவல்களைத் தருவார்.



சில போராளிகள் இறைவனைப் பரிகசிப் பார்கள். 'இஸ்ரேல் தளபதி பற்றி புகழ் பாடுகிறீர்கள். இஸ்ரேலின் கிபீர் விமானம்தான் இரண்டு மடங்கு ஒலி வேகத்தில் பறந்து குண்டுகளைப் போட்டு எங்கள் மக்களைக் கொல்கிறது. கிபீர் என்றால், இளம் சிங்கம் என்று பொருள். சிங்கக் கொடி ராணுவம் இளஞ் சிங்கங்களை எங்கள் மீது ஏவிவிடுகிறது. நீங்கள் அவரைப் போற்றுகிறீர்கள்!’ அதற்கு இறைவன் சொல்வார், 'உங்கள் கேள்விக்குப் பதிலும் மோசே தயான் சொன்னதுதான். ஒரு ராட்சத கோலியாத்தை வெல்ல சிறு பையன் தாவீது போதும்!’



முள்ளிவாய்க்காலில் அன்று மறுபடியும் அகிலாவைப் பார்த்ததும் துர்க்கா திடுக்கிட்டார். அவள் சொல்வழி கேட்காதவள். எவ்வளவு சொல்லியும், அவள் கூடாரத்துக்குத் திரும்பிப் போகவில்லை.



'அக்கா, 6 மணிக் குருவியைப் பார்த்தேன்’ என்றாள். 'பொய் சொல்லாதே. அது வலசை போற குருவி. இந்த மாதம் அது இங்கே இருக்க முடியாது!’



'இல்லை அக்கா. எனக்குத் தெரியும் வாருங்கோ’ என்று கூட்டிப்போனாள். அவள் சொன்னது உண்மைதான். கட்டையான நீல வால் குருவி. மேலுக்கு பச்சை, கீழுக்கு சிவப்பு உடம்பு. வெள்ளைக் கழுத்து, சப்பாத்து லேஸ் துளைபோல சின்னக் கண்கள். அத்தனை அழகான குருவியை மரத்திலே கண்டதுதான். நிலத்திலே அவ்வளவு சமீபத்தில் துர்க்கா பார்த்தது இல்லை. அது இலைகளைத் தள்ளி புழுக்களைக் கொத்தித் தின்றுகொண்டு இருந்தது.



'ஏன் அக்கா திகைச்சுப்போய் நிற்கிறீங்கள்?’



'பாவம் இது. தவறிப்போய்விட்டது. இதன் ஆங்கிலப் பெயர் Indian Pitta. ஒவ்வொரு வருடமும் இமயமலைக்குப் பறந்து, அங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பின்னர் பனிக் காலம் ஆரம்பிக்கும்போது, இங்கே வந்துவிடும். இந்த வருடம் எப்படியோ அது தனித்துவிட்டது.’ 'கூட்டத்தோடு பறக்கவில்லையா? அப்ப என்ன நடக்கும்?’



'இந்த நிலத்தில் அப்படி ஒரு பற்று ஆக்கும். பார், எங்களைவிட்டுப் போக விருப்பம் இல்லை. ஓடிப் போய் என்னுடைய கேமராவை எடுத்து வாறியா?’- துர்க்கா பேசி முடிக்கு முன்னர், அகிலா எடுத்தாள் ஓட்டம். அவள் திரும்பி வந்தபோது குருவி பறந்துவிட்டது.



'எங்கே அக்கா குருவி?’



'இங்கேதான் எங்கேயோ... அது தனியா மாட்டிவிட்டது. இந்த வெயில் சூட்டில் அது நிச்சயம் செத்துப்போகும். ஐயோ பாவம்’ என்றார். இரண்டு இமைகளும் சந்திக்கும் இடம் ஈரமாகியது. 'அது தப்பிவிடும் அக்கா. பயப்பிடாதையுங்கோ’ என்றாள் அகிலா, எதோ பெரிய ஆள்போல.



ஒவ்வொருவராகத் தன் அணியில் இருந்தவர்களை, துர்க்கா இழந்துகொண்டு வந்தார். ஒரு கணினி செய்ய வேண்டியதை அகல்மதி செய்வாள். கழுத்து எலும்பு தெரியும் ஒல்லி யான தேகம். அதிவேகமாக ஓடக்கூடியவள். சொற்களைக் கையினால் மறைத்துக்கொண்டு தான் பேசுவாள். அந்தக் காலத்து விதூஷகன் போல துர்க்காவுக்கு சிரிப்பு மூட்டுவதுதான் அவள் வேலை. அவள் சிரித்தால் போதும், விடிவதைப்போல அந்த இடத்தில் ஒளி உண்டாகும். திட்டத்தை துர்க்கா விளக்கியதும், போராளிகள் தங்கள் தங்கள் கடிகாரங்களைச் சரிபார்த்துக்கொண்டார்கள். ஒரு ரகசியப் பொறியை நோக்கி ராணுவக் கவச வாகனங்களைத் திருப்பிவிடுவதுதான் உத்தி. பீரங்கிக் குண்டுகள் வந்து விழும் திசையையும், அவற்றின் இரைச்சலையும், வேகத்தையும் வைத்து எவ்வளவு தூரத்தில் ராணுவம் நகருகிறது. எந்தத் திசை நோக்கிச் செல்கிறது, இலக்கை அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் போன்ற விவரங்களைக் கணிப்பதில் அகல்மதி தேர்ச்சி பெற்றவள். அன்று இரண்டு கவச வாகனங்களை அழித்து இருந்தார்கள். எந்த நேரமும் உற்சாகமாக இருப்பவள் அன்று என்னவோ மாதிரி இருந்தாள். 'அக்கா, வெற்றி கிட்டுமா?’ என்றாள். தொண்டையில் நிறையச் சொற்கள் சேர்ந்துவிட்டதால், அது அடைத்துப்போய்க் கிடந்தது. துர்க்கா அவளை உற்றுப் பார்த்து அடிக்கடி தலைமைப் பீடம் சொல்லும் வாசகத்தைச் சொன்னார். 'வெற்றி முக்கியம் இல்லை. அவர்கள் தோல்விதான் முக்கியம்!’ துர்க்கா வாய் திறந்து பேசி முடிந்ததும், கிபீர் விமானத்தில் இருந்து குண்டு வெளிச்சமாக வந்து விழுந்தது. ஒரு கணத்துக்கு முன்னர் அகல்மதி கையில் ஏ.கே 47 துப்பாக்கியுடனும், தூரக் கண்ணாடியுடனும் நின்றாள். அடுத்த கணம் பெரும் குழிதான்கிடந்தது. அவள் இருந்த சுவடு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. சூழ்ந்த புகை மூட்டத்தில் சதை எரியும் மணம் ஒன்றே துர்க்காவுக்கு மிஞ்சியது.



அடுத்த பெரிய இழப்பு, செவ்வானம். அவளும் மற்றவர்களைப்போல வெளிநாட்டுக்குப் போயிருந்தால், இன்றைக்கு ஒரு புகழ்பெற்ற மருத்துவராகி, நிறையப் பணம் சம்பாதித்துக்கொண்டு இருந்திருப்பாள். எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் போக மறுத்து, போரிலே காயம்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகத் தங்கிவிட்டாள். அவளுக்கு மிஞ்சிப்போனால், 27 வயதுதான் இருக்கும். கெக்கரிக்காய் போன்ற நேரான உடம்பு. ஒரு வளைவுகளும் இல்லை. காதிலே ஓட்டை உண்டு, தோடு கிடையாது. மூக்கிலே துளை உண்டு. மூக்குத்தி கிடையாது. விரலிலே நகம் உண்டு. பூச்சு பூச மாட்டாள். ஒரு நாளில் 18 மணித் தியாலத்துக்குக் குறையாமல் வேலை செய்தாள். நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பி அவளுக்கு ஒரு மடிக்கணினி அனுப்பி இருந்தான். ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல அதைத் தூக்கிக்கொண்டு, இரண்டு நாட்களாக அலைந்தாள். எப்படித் திறப்பது என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை. ஒருநாள் அருள் மதியிடம் இரவு 10 மணிக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வந்தாள். எல்லா விசயங்களை யும் ஒரே நாளில் கற்றுவிட வேண்டும் என்ற அவா. கம்ப்யூட்டரில் அவள் எழுதிய முதல் கடிதத்துக்கு இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. ஜெனரேட்டர் நேரம் முடிந்து விட்டபடியால், கடிதத்தை அடுத்த நாள் அனுப்பலாம் என்று மூடிவைத்தாள். அவள் அடித்த கடிதம் கம்ப்யூட்டரில் கிடந்தது. அதிகாலை ஆஸ்பத்திரிக்கு உடுத்திப் போனாள். போன சிறிது நேரத்திலேயே கொத்துக் குண்டு ஒன்று ஆஸ்பத்திரியின் மேலே விழுந்து 40 பேர் பலியானார்கள். அதில் செவ்வானமும் ஒருத்தி. ஒரு மரக்கொப்பு முறிந்ததுபோல நடுவிலே முறிந்துபோய்க் கிடந்தவளைப் பார்க்க முடியவில்லை. இறந்தவர்களில் 20 பேர் குண்டு விழாவிட்டா லும், இறந்துபோயிருப்பார்கள் என்று பேசிக் கொண்டார்கள். செவ்வானம் இறந்த செய்தியைத் தொலைபேசியில் நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பிக்கு அறிவித்தார்கள். இரண்டு நாள் கழித்து அவள் எழுதி கம்ப்யூட்டரில் சேமித்துவைத்த கடிதத்தை மின்னஞ்சலில் அவனுக்கு அனுப்பிவைத்தாள் அருள்மதி.



பிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றி அதி உயர் விருதுகளைப் பெற்றவர் ஆண்டி மக்நாப். அவருடைய இரண்டு புத்தகங் களை மொழிபெயர்ப்பில் தலைமைப் பீடம் படித்திருந்தது. ஒன்று, Bravo Two Zero. அடுத்தது, Immediate Action. துர்க்காவும் இயன்ற மட்டும் அவற்றை இரவிரவாகப் படித்து முடித்து விடுவார். ஆண்டி மக்நாபில் பற்று அப்படித்தான் ஏற்பட்டது. அருள்மதி பகுதி பகுதியாக மொழிபெயர்த்தது, Col. James Mrazek என்ற அமெரிக்கர் எழுதிய The Art of Winning Wars என்ற புத்த கத்தைத்தான். அதன் 5-வது அதிகாரத்தை மொழிபெயர்க்கச் சொல்லி, அவசர கட்டளை ஒரு நடு இரவில் வந்தது. அருள்மதி இரவிரவாக மொழிபெயர்த்து, கையினால் எழுதி அதை கம்ப்யூட்டரில் அச்சடிக்கக்கூட நேரம் இன்றி அப்படியே சுரேஷ் மாஸ்ரரிடம் கொடுத்து அனுப்பினாள். அந்த மொழிபெயர்ப்பில் சொல்லப்பட்ட ஒரு வசனம் துர்க்காவினால் மறக்க முடியாது. 'போர்கள், ஆயுத பலத்தினால் அல்ல, புத்தியினால் வெல்லப்படுகின்றன!’



20 வருடப் போர் வாழ்க்கையில் துர்க்கா பல போராளிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் லெப். கேர்ணல் மொழியரசி போன்ற ஒரு போராளியைக் கண்டது கிடையாது. அபூர்வமானவர். அழகான தோற்றம்கொண்ட அவருக்கு ஒரு கால் கிடையாது. பதிலுக்கு கரடுமுரடான ஒரு மரக்கால் பொருத்தி இருந்தது. போர்க்களத்திலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ தான் எந்த விதத்திலும் குறைவுபட்டதாக அவர் உணர்ந்தது இல்லை. குளிக்கப் போனால், ஒரு மணித்தியாலம் மற்றவர்கள் அவருக்காக ஒதுக்குவது வழக்கமாகிவிட்டது. ஒட்டி வெட்டி மிச்சமாய் இருந்த கூந்தலை எண்ணெய்வைத்து ஊறவிட்டு, சீயக்காயுடன் செவ்வரத்தம் பூக்களையும் அரைத்துப் பூசி ஒரு பாட்டம் முழுகிவிட்டு, பின்னர் வாசனை சோப் போட்டு மீண்டும் ஒரு தடவை குளிப்பார். விருந்துக்குப் புறப்பட்டதுபோல முகத்தை ஒப்பனை செய்வார். 'சாம்பிராணிப் புகை வேண்டுமா, அக்கா’ என்று யாராவது இளம் பெண் சீண்டினால், மரக்காலைக் காட்டுவார். மற்றவர் கள் ஞாபகப்படுத்தினால் ஒழிய, அவருக்கு தான் போராளி என்பது மறந்துபோகும். விடிந்து, அன்றைய நாள் தொடங்கிய பிறகு ஒரு தடவையாவது தன் அம்மாவின் றால் குழம்பைப்பற்றிப் பேசாமல் அவரால் இருக்க முடியாது.



ஒருநாள் துர்க்கா கேட்டார், 'மொழி, என்ன அலங்காரம் உச்சமாயிருக்கிறது. உம்முடைய எதிரிகளைத் துப்பாக்கியால் விழுத்தப் போகிறீரா அல்லது இமை வெட்டினால் சரிக்கப்போகிறீரா?’



'பாவம். என் அழகைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது. என்னுடைய பிகே துப்பாக்கி 1,500 மீட்டர் தூரத்திலேயே அவர்களைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடும்.’



'அப்படியானால் இவ்வளவு செவ்வரத்தம் பூக்களை ஏன் வீணாக்குகிறீர்?’



'எனக்குத்தான். என் தலைக்காகத்தான் அவை பூக்கின்றன!’



போர் என்றதும் அங்கே ஏதோ றால் குழம்பு பரிமாறுகிறார்கள் என்ற நினைப்புதான். பாதி துள்ளுவார். மற்றவர்களைத் தள்ளிவிட்டு முன்னுக்கு நிற்பது மொழியரசிதான். போர் முடிவதற்கு முன்னர் இரவு தொடங்கிவிடக் கூடும் என்பதுபோலச் செயலாற்றுவார். துப்பாக்கியைத் தூக்கிச் சுடும் அந்த நேரத்திலும் விரலால் துப்பலைத் தொட்டு புருவத்தை நேராக்க மறக்க மாட்டார். எதையாவது அவசரமாகச் செய்துவிட்டுத்தான் மூளையைப் பாவிப்பார்.



'மொழி, எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீர்?’ என்று துர்க்கா கோபிப்பார்.



'எதுக்குப் பயப்பட வேணும்? கடவுளுக்குத்தான் என்னைக் கூப்பிட வேண்டிய நேரம் தெரியும்!’



'அது சரி, நீர் ஏன் கடவுளுக்கு உதவி செய்கிறீர்?’ என்று துர்க்கா கடிந்துகொள்வார்.



'எல்லாம் வெல்லும், அக்கா.’



'எல்லாம் வெல்லும்!’



லெப். கேர்ணல் மொழியரசி டக்டக்கென்று மரக்காலை நிலத்திலே உதைத்து நடந்து போவார். அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்டது.



ஆனந்தபுரம் போர் யுக்தியை இரண்டு வாரகாலமாகத் திட்டமிட்டார்கள். 1,000 போராளிகள் பங்கு பெற்ற இந்த நகர்வில், இடப்புற அணியின் பொறுப்பை பிரிகேடியர் துர்க்கா ஏற்றிருந்தார். அவருக்குத் துணையாக வாகை ஒன்று, வாகை இரண்டு போரணிகள் இருந்தன. இணைப் படையாக அவருக்குப் பின்னால் பிரிகேடியர் விதூஷாவின் படை நின்றது. வலப் பக்கத்து நுனியில் பிரிகேடியர் மணிவண்ண னும், பிரிகேடியர் தீபனும் இருந்தனர். நடுவில் பொறுப்பாக நின்றது கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும். போர் தொடங்கிய சிறிது நேரத்தில், கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும் உள்வாங்கும் அதே சமயம், இடம் வல அணிகள் மடிந்து எதிரியை வளைத்துப் பிடித்து விட வேண்டும். 2,200 வருடங்களுக்கு முன்னர் ஹனிபால் பயன்படுத்திய அதே யுத்தி. போர்த் தளவாடங்கள், 50 கலிபர்கள், உந்து கணை செலுத்திகள், ஆர்ட்டிலறிகள், மோர்ட்டார்கள், யந்திரத் துப்பாக்கிகள் எனச் சகலதும் தயார் நிலையில் இருந்தன.



துர்க்கா இடப்புறத்து முனையில் முன்னேறினார். அவருடைய துணைப்படை கள் அவரை ஒட்டியபடி நகர்ந்து பாரியத் தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவுக்காகக் காத்து நின்றபோது, ராணுவத்தின் தாக்குதல்கள் தொடங்கின. ஆகாயத்தில் இருந்து குண்டுகள் விழுந்து அணியைச் சிதறடிக்க முயன்றன. அவற்றை எல்லாம் சட்டை செய்யாமல், துர்க்கா முன்னேறிக்கொண்டு இருந்தார். திடீரென்று சடசடவென இடப்புறம் இருந்து குண்டுகள் பாய்ந்து வந்தபோது, துர்க்கா துணுக்குற்றார். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. லெப். கேர்ணல் மோகனா, இடது புறத்தில் நின்றார். உடம்பின் ஓர் அங்கம் போலாகிவிட்ட மோகனாவின் துப்பாக்கி இலக்கில் அசையாமல் நேராக நின்றது. துர்க்கா திரும்பிப் பார்த்தபோது, மோகனாவின் பாதி தலையைக் காணவில்லை. இலங்கை ராணுவமும் பெரிய போர் திட்டத்தை வகுத்திருந்தது. இரவிரவாக நடர்ந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அது பெட்டியடித்திருந்தது. போராளிகளின் படை அதற்குள் சிறைபட்டிருப்பது அப்போது தான் துர்க்காவுக்குத் தெரிய வந்தது.



அருள்மதி 10 நாட்களுக்கு முன்னர் மொழிபெயர்த்து கையினால் எழுதி அனுப்பிய அமெரிக்க கேர்ணல் ரசேக்கின் ஐந்தாவது அதிகாரத்தை தலைமைப் பீடத்திடம் சுரேஷ் மாஸ்ரர் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அது முக்கியமான மொழிபெயர்ப்பு. மோகனாவின் சிவப்பு ரத்தம் ஊர்ந்து வந்து துர்க்காவின் சப்பாத்தை நனைத்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்து நேரத்தைப் பார்த்தார். திசைகாட்டி பொருத்தப்பட்ட அந்தக் கஸியோ கைக்கடிகாரம், தலைமைப் பீடம் அவருக்குப் பரிசாகக் கொடுத்தது. இனியும் தாமதிக்க முடியாது. அவர்கள் தீர்மானித்த நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. அந்தத் திடல் 100 அடி உயரம்தான் இருக்கும். இரண்டே நிமிடங்களில் அதன் மீது ஏறிவிடலாம். 20 வருடப் பயிற்சி இந்தத் தருணத்துக்காகத்தான். ஒரேயரு கட்டளைதான் தேவை. எல்லோரும் பின்வாங்கி இன்னொரு சமருக்குத் தயார் செய்யலாம். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழிவை எதிரிகளுக்கு உண்டாக்கலாம்.



கை ரேடியோவில் அவ்வளவு நேரமாக எதிர்பார்த்திருந்த கட்டளை கடைசியில் வந்தது. மூன்றே மூன்று சங்கேத வார்த்தைகள்தான். 'அதிகம் இழந்தவர்கள் தோற்றவர்கள்!’ சுருக்கமான, தெளிவான உத்தரவு. துர்க்காவின் உடலில் இதற்கு முன்னர் ஒரு முறையும் அனுபவித்திராத மாற்றம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமான அட்ரனலீன் அவர் உடம்பில் பாய்ந்து சுவாச வேகம் கூடி, அந்தரத்தில் மிதப்பதுபோல ஆனார். அவர் காதுக்குள் இருதயம் அடித்தது. ஆயிரம் யானை பலம் உண்டானதுபோன்ற உணர்வு. முன்னே கால் வைத்தால்போதும், ஒருபோதும் திரும்ப முடியாத ஒரு கட்டத்துக்குள் அவர் நுழைந்துவிடுவார். அவருடைய இருதயத்தின் இரண்டு துடிப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் பாய்ந்து, அவருடைய ஆயுளையும் 1,000 போராளிகளின் ஆயுளையும், ஒரு தேசத்தின் ஆயுளையும் தீர்மானிக்கப்போகும் அந்த ஓர் அடியை துர்க்கா வைத்தார்.



எதிரிகளின் நாலு டாங்கிகளும் எட்டு கவச வாகனங்களும் புள்ளிகளாகத் தெரிந்தன. தனித்தனியாக ஆடிய கை விரல்களால் துர்க்கா ஷி97 துப்பாக்கியைத் தொட்டுத் தூக்கினார். சற்று நிதானித்து, நேராக்கி குறிபார்த்து விசையை அமுக்கினார். எதிரிகள் விழுந்துகொண்டே இருந்தார்கள். இனி, அவர் நிறுத்தப்போவது இல்லை. யாராவது அவரை நிறுத்தினால் ஒழிய.



ராணுவத்தின் வலப் பக்க முனையும் இடப் பக்க முனையும் நகர்ந்து இடைவெளியைக் குறுக்கி வந்தபோது, இலங்கை ராணுவத்தினர் தங்கள் படையில் ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ள ஆரம்பித்தார்கள். இப்படி ஒரு மூடத்தனமான நகர்வு ஒருவரும் எதிர்பார்க்காதது. இதைச் சாதகமாக்காமல் விடுவது அதனிலும் கூடிய மூடத்தனம். ராணுவம், தங்கள் படையைக் கொல்லும் அதே வேகத்தில், போராளிகளையும் கொன்றது. எங்கேயோ இருந்து இலக்குவைத்து சுடப்பட்ட குண்டு ஒன்று துர்க்காவைத் தாக்கியது அவருக்குத் தெரியவில்லை. உதிரம் நெற்றியிலே வழிந்து, கழுத்திலே இறங்கி, நெஞ்சை நனைத்தபோது குனிந்து பார்த்தார்!



அன்றைய நாள் 2009... ஏப்ரல் 4-ம் தேதி. போர் நின்றபோது, போராளிகளில் 700 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். இலங்கை ராணுவத்தின் இழப்பு 3,000 பேருக்கு மேலாக இருந்தது. அந்த விவரம் துர்க்காவுக்கு என்றென்றைக்குமே தெரியப்போவது இல்லை.



அவர் துப்பாக்கியைக் கையிலே இறுக்கிப் பிடித்தவண்ணம் புரண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி கிடந்தார். அது சொல்ல முடியாத தூய வெண் நிறத்தில் காணப்பட்டது. ஓர் அபூர்வமான நறுமணம் மூக்கைத் துளைத்தது. மேஜர் சோதியாவும், லெப். கேர்ணல் செல்வியும் கண்களுக்குத் தெரிந்தனர். அருள்மதிக்கு விடை சொல்லாமல் புறப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது. வெகுதூரத்தில் பூட்ஸ் ஒலிகளும் மனிதக் குரல்களும் கேட்டன.



பிரிகேடியர் துர்க்கா மரணத்தைத் தழுவும் முன்னர் கடைசியாகப் பார்த்தது, ஆகாயத்தை மறைத்து 100 பறவைகள் சிறகடித்துப் பறந்த காட்சியை. அவருடைய கண்கள் அந்தக் கூட்டத்தில் 6 மணிக் குருவியைத் தேடின!






Thursday, April 21, 2011

''திரும்பி வருவேன் அம்மம்மா என்றான்... வரவேயில்லை!''





''ரெண்டு பக்கெற் உப்பு அம்பது ரூபாதான்ஞ் வாங்குங்கோ அக்கா'' என்று இறைஞ்சுகின்றன அவர்களின் கண்கள். எட்டு, பத்து வயது மதிக்கத் தக்க இரண்டு சிறுவர்கள். வெயிலில் அலைந்து கறுத்து வாடிய முகங்கள். பிஞ்சுக் கைகளை இழுக்கும் உப்புப் பொதிகளின் சுமை.



'அப்பா, அம்மா ரெண்டு பேரும் இல்லை. கடைசிச் சண்டையிலை செத்துப் போயிட்டினம்.'



இதை அவன் எங்கோ பார்த்துக்கொண்டு, மரத்துப்போன முகத்தோடு சொல்கிறான். பெற்றோர் கோயிலுக்கோ, கடைக்கோ போய்இருப்பதைச் சொல்வதுபோன்ற தொரு தொனி.



மேலும், முள்ளி வாய்க்கால் பேரனர்த்தத்தை அவர்கள் 'கடைசிச் சண்டை’ என்றுதான் சொல்கிறார் கள். அந்தச் சிறுவர்களிடம் துயரக் கதை ஒன்று இருக்கிறது. கேட்பதற்கு அஞ்சி அந்தக் கண்களில் இருந்து தப்பித்து ஓடுகிறோம். அவர்களைப் போலவே, ஈழத்தில் உள்ள அனை வரிடமும் துயரம் செறிந்த கதைகள் பல நூறு உண்டு.







'என்னுடைய கணவரும் மூத்த மகனும் மாத்தளனில் கொல்லப்பட்டார்கள். சின்ன மகனை, முகாமில் இருந்து ராணுவம் பிடித்துப் போய் பூஸா சிறையில்வைத்து இருக்கிறார்கள். இரண்டாவது மகன், நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்டான். அவனைத் தேடி நான் ஒவ்வொரு முகாமாக அலைந்து திரிகிறேன். எவர் எவருடைய கால்களிலோ, விழுந்துப் பார்க்கிறேன். ஒரு பயனும் இல்லை.' - தனித்து நிற்கும் அந்தப் பெண்மணி நைந்து போன சேலைத் தலைப்பினால் கண்களைத் துடைத்துக்கொள்கிறார். சிறையில் இருக் கும் கடைசி மகனைப் பார்ப்பதற் காக, அவர் அப்போது அவசரமாகக் கிளம்பிக்கொண்டு இருந்தார்.



'அவன் பெயர் ராஜு. குடும்பத் தில் பாசமுள்ள பிள்ளை. 'நான் திரும்பி வருவன் அம்மம்மாஞ்... கவலைப்படாதையுங்கோ’ என்று சொல்லிவிட்டுப் போனான். வரவே இல்லை. வீரச் சாவடைந்து விட்டதாகச் சொன்னார்கள். பார்த்து அழுவதற்கு அவனுடைய உடம்புகூடக் கிடைக்கவில்லை.' - முள்ளி வாய்க்காலில் மறைந்துவிட்ட தனது பேரனை நினைத்து விம்முகிறார் விசுவமடுவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து நல்லூரில் தற்காலி கமாகத் தங்கியிருக்கும் அந்த முதிய பெண்.



'இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்களுடைய காணி, மரங்கள் நிறைந்த சோலையாக இருந்தது. எவ்வளவோ சிரமப்பட்டு உழைத்து, கடன் வாங்கி வீட்டைக் கட்டினேன். எல்லோரும் வெளிக்கிட்டு ஓடியபோது, நாங்களும் ஓடினோம். திரும்பி வந்து பார்த்தபோது, அத்திவாரம் மட்டுமே மிஞ்சியிருக்கக் கண்டோம். சுவர்க் கற்களைக்கூடப் பெயர்த்தெடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். இன்று தறப்பாழ்களின் கீழ் வாழவேண்டி இருக்கிறது. ஆட்களற்ற வனாந்தரமாக எங்கள் ஊர் இருந்த காலத்தில், யானைகள் புகுந்து மரங்களை எல்லாம் அழித்துவிட்டன. பாம்புகள் புற்றெடுத்துக் குடி புகுந்துவிட்டன...' முன்னம் வாழ்ந்த காலங்களின் ஞாபகத்தில் ஏங்கிய விழிகளோடு வானத்தை அண்ணாந்து பார்க்கிறார் அந்தப் பெரியவர். அண்ணாந்த முகத்தில் இருந்து உருண்டு சரிகிறது ஒரு துளிக் கண்ணீர்.



வலது கை துண்டிக்கப்பட்டு இருக்க, இடது கையால் ஓங்கி ஓங்கி நிலத்தில் முளையடித்துக்கொண்டு இருக்கிறான் ஓர் இளைஞன். இறுகிய முகத்தில் சிரிப்பின் அடையாளமே இல்லை.



'எங்களுக்கு ஒருத்தரும் இல்லைஞ்... எங் களுக்கு ஒருத்தரும் இல்லை...' என்ற வார்த் தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் அந்த இளம்பெண். மே 2009-ல் நடந்தேறிய பேரனர்த்தத்தில், அவளது கணவன் செல்லடியில் சிக்கிச் சிதறிவிட்டான். 'லமினேட்’ செய்யப்பட்ட புகைப்படத்தில் தனது அப்பாவைக் காட்டு கிறது இரண்டரை வயதுக் குழந்தை.



ஏதோவொரு வகையில் போர் அனைவரையும் பாதித்து இருக்கிறது. பாதித்துக்கொண்டு இருக்கிறது. முன்னரைக் காட்டிலும் அதிக அளவிலான பிச்சைக்காரர்களைக் காண முடிகிறது. பேருந்து நிலையங்களில் அதீத ஒப்பனையுடன் நிற்கிறார்கள் சில பெண்கள். ராணுவத்தினர் பாலியல் பண்டங்களாகப் பயன்படுத்தி, தெருவில் வீசி எறியப்பட்ட பெண்களே அவர்கள். வறண்டு பறக்கும் தலை மயிரோடும் பொட்டில்லாத நெற்றியின் கீழ் இருண்ட கண்களோடும் கூடிய பெண்கள், குழந்தைகளைக் கைகளில் பிடித்தபடி அரச நிவாரணங்களுக்காக அலைந்துகொண்டு இருக்கிறார்கள். கை, கால் இழந்த அநேகரைத் தெருக்களில் கடந்து செல்ல நேரிடுகிறது.



எல்லா முகங்களிலும் சொல்லித் தீராத துயரம். வார்த்தைகளையும் புன்னகையையும் போர் தின்றுத் தீர்த்துவிட, வெறும் உடலங்களாக உலவிக்கொண்டு இருக்கிறார்கள். இறந்தவர்கள் இறந்துபோக, எஞ்சிய வர்கள் அந்த ஊழிக் கூத்தின் ஞாபகங்களில் இறுகிக் கிடக்கிறார்கள். இறந்த கால இழப்புகளுக்கும் நிகழ் கால இருப்புக்கான போராட்டமே ஈழத் தமிழர்களது இன்றைய வாழ்வு. இலங்கை அரசாங்கமோ, மீள் குடியேற்றம், புனர் நிர்மாணம், மறுவாழ்வு இன்ன பிற வார்த்தைகளைச் சலிக்காமல் உதிர்த்துக்கொண்டு இருக்கிறது.



இடுப்புக்குக் கீழ்ப் பகுதி சிதைந்துபோயிருக்க, நிலத்தில் வீழ்ந்துகிடந்து 'காப்பாற்றுங்கள்ஞ்... காப் பாற்றுங்கள்ஞ்...’ என்று கதறி அழுதவர்களைத் தூக்கி வர இயலாமல் சாவிடம் விட்டுவர நேர்ந்துவிட்ட குற்றவுணர்வை, எந்த நிவாரணத்தால் துடைத்தெறிய இயலும்? குண்டு விழுந்து கிணறான பள்ளத்துள் துண்டு துண்டாகச் சிதறிக்கிடந்தவர்களின் ஞாபகங் களை எந்தத் தறப்பாளைக்கொண்டு மூடுவது? பசிக் கொடுமை தாளாமல், தங்களை வளர்த்த மனிதர்களின் பிணங்களையே பிய்த்துத் தின்ற வளர்ப்பு நாய்களின் ஊளைச் சத்தத்தை எந்தச் சங்கீதத்தால் மறக்கடிக்க முடியும்? விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப் பட்ட தமது உறவுகள் திரும்பி வருவர் வருவர் என்று, முள் கம்பி வேலிகளைப் பற்றியபடி காத்திருந்து ஏமாந்த கண்களுக்கு எந்த நிவாரணத்தால் மருந்திட இயலும்?







ஆனால், ஞாபகங்களை அழிப்பதன் வழியாக முழுமையான வெற்றியைத் துய்க்க முடியும் என்பதை இலங்கை அரசாங்கம் தெரிந்துவைத்து இருக்கிறது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில், அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது பேரினவாதம். முன்னொரு காலத்தில் 'கலாசார நகரம்’ என்று கொண்டாடப்பட்டதும், கல்வியில் சிறந்தது எனப் போற்றப்பட்டதுமான யாழ் நகரம்... இன்று கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு இன்ன பிற சீர்கேடுகள் மலிந்த இடமாகிவிட்டது.



'விடுதலைப் புலிகள் இயக்கம் எல் லோரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்ததாகச் சிலர் குற்றம் சாட்டுகிறார் கள். ஆனால், புலிகள் இல்லாத குறையை இப்போது உணர்கிறோம். எங்களுடைய இளைய சமுதாயம் கட்டுப்பாடுகள் அற்ற, தான்தோன்றித் தனமான, வன்முறை மிகுந்த சமுதாயமாக மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அடிதடிகள், குழுச் சண்டைகள் சர்வசாதாரணமாகிவிட்டன' எனக் குறைப்பட்டுக்கொள்கிறார் நடுத்தர வயது மனிதர் ஒருவர். கவர்ச்சிகரமான புதிய பெயர்களுடன் சண்டைக் குழுக்கள் ஊருக்கு ஊர் உதயமாகி இருக்கின்றன. ராணுவமோ, காவல் துறையோ, அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதன் வழியாக வன்முறையை ஊக்குவிக்கின்றன. அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் பக்கம் சாய்ந்துவிடுகின்றன.



இளைஞர்கள் மத்தியில் விடுதலை உணர்வு திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சிறு நகரங்களில்கூட களியாட்ட விடுதிகள், மதுச் சாலைகளை சாதாரணமாகக் காண முடிகிறது. இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் ஒருவருடனான தொடர்பு, தங்களது வாழ்க்கைத் தரத்தை, வளத்தை உயர்த்திவிடும் என்று நம்பும் அளவுக்கு தமிழ் இளை ஞர்களில் சிலர் மூளைச் சலவை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.



மே 2009-ல் நடந்தேறிய பேரழிவுக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களும் இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குப் போய் விட்டார்கள்.



'வவுனியாவில் முட்கம்பி முகாமுக்குள் அடிப்படை வசதிகளே இல்லாமல் அடைத்துவைத்து இருந்தார்கள். மீள் குடியேற்றம் என்று சொல்லி மீண்டும் வன்னிக்கு அழைத்து வந்து பள்ளிக் கூடங்களில் திரும்பவும் அகதிகளாக அமர்த்தினார்கள். இரண்டு மாதங்களுக் குப் பிறகு, சில மரச் சலாகைகளையும் தறப்பாழையும் தந்து எங்களது நிலத்தில் குடியிருக்க அனுமதித்து இருக்கிறார்கள். இங்கே எந்த ஒரு வசதியும் இல்லை. எங்கள் நிலத்தில் இருக்கிறோம் என்ப தைத் தவிர, வேறு ஒன்றுமே இல்லை' - பெருமூச்செறிகிறார் ஒரு பெண்.



'இந்த நிலம் இப்படியா இருந்தது?' என்று ஏக்கப் பெருமூச்செறியும் கண்களில் விரிகிறது பாம்புகளும் தலையும் உடலும் இழந்த அடிப்பனைகளும் வறண்ட பற்றைச் செடிகளும் நிறைந்த வனாந்தரம்.



கல்லறைகளின் மீது நிற்பதான நடுக்கம் கால்களில். வன்னியின் எந்தப் பகுதியைத் தோண்டினாலும், எலும்புகள், உக்கிக்கொண்டு இருக்கும் உடலங்கள், குருதிக் கறை படிந்த ஆடைகள், தலை மயிர், பற்கள் எனக் கொலையுண்டவர்களின் எச்சங்களைக் கண்டெடுக்க முடியும். பாரிய புதைகுழிகளைக் கொண்டமைந்ததாக இருக்கிறது வன்னி நிலம்.



தமிழர்களின் நிலை இவ்விதம் இருக்க, யாழ்ப் பாணமோ தென்னிலங்கைச் சிங்களவர்களின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் வணிகத் தளமாகவும் படிப்படியாக சிங்கள இராசதானிக் கோலம் பூண்டு வருகிறது. இவை போதாது என்று, யாழ்ப்பாணத்தில் தங்களுக்கு நிலங்கள் இருப்பதாகச் சொல்லியபடி, ஆவணங்களுடனும் பாதுகாப்புக்கு அடியாட்களு டனும் பேரினவாதிகள் வந்து இறங்கி இருக்கிறார் கள். அரச அங்கீகாரத்துடன், ஒத்துழைப்புடன் நிலக் கபளீகரம் நடைபெற்று வருகிறது. வன்னியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்கள், தறப்பாழ்களைத் தாண்டி இறங்கும் வெயிலிலும் கொட்டும் மழையி லும் அகதிகளாக அவதிப்பட்டுக்கொண்டு இருக்கி றார்கள்.



இவற்றை எல்லாம் ராஜபக்ஷே சகோதரர்கள் பிரமாண்டமான கட்-அவுட்களில் வெள்ளை வேட்டி, கோட் சூட் சகிதம் கம்பீரமாக நின்று பார்த்தபடி, சிரிப்பாய்ச் சிரிக்கிறார்கள். குடும்ப அரசியல், கருத்துச் சுதந்திர மறுப்பு, சொத்துக் குவிப்பு, ஊழல், அடியாள் அரசியல், செல்வாக்குக்கு சேவகம் என மற்றொரு தமிழகமாக 'மலர்ந்து’ வருகிறது இலங்கை!



ஈழத் தமிழர்கள் மட்டும் அல்லாது; அவர் தம் தெய்வங்களும் அகதிகளாக்கப்பட்டுவிட்டன. ஏ 9 பாதையில் இருந்த இந்து சிறு கோயில்கள் தகர்க்கப்பட்டு, அங்கு எல்லாம் புத்தர் 'குடியேற் றம்’ செய்விக்கப்பட்டுவிட்டார். செம்பருத்திக்குப் பதில் தாமரை மலர்கள்.



முறிகண்டிப் பிள்ளையார் இன்னமும் தப்பிப் பிழைத்திருக்கிறார். யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் சிங்களவர்கள் முறிகண்டியில் இறங்கி பிள்ளையாரை வணங்கிச் செல்கிறார்கள். அவர்களுக்கு அருகில் புழுக்களிலும் புழுக்களாக உணர்ந்தபடி நின்று வணங்கும்போது, இழக்கப்பட்ட முகங்கள் மனத் திரையில் ஒவ்வொன்றாகத் தோன்றி மறைகின்றன.



'எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகள் எங்கே?' என்று காட்டு மரங்கள் சஞ்சலித்துப் புலம் பும் வீதி வழி திரும்பிச் செல்கின்றோம்.



எல்லாம் கனவுபோல் இருக்கிறது. கண்களில் நிரந்தரமாக உறைந்துவிட்ட கொடுங்கனவு!


Monday, April 18, 2011

அல்சர் வியாதியிலிருந்து விடுபட............




உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் "கேஸ்டிரைடிஸ்" என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.



அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவலைப்படும் போதோ அல்லது பொறாமைப்படும் போதோ கூட மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் அல்சர் உண்டாகிறது.



மேலும் அல்சர் உருவாக சில கிருமிகளும் காரணமாக உள்ளன என்கிறது மருத்துவ உலகம். அது ஆன்ட்ரல் கேஸ்டிரைடிஸ். வழக்கமாக வயிற்றில் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது வலி குறையும். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடும் போது மீண்டும் வலி ஏற்படுகிறது. அல்சர் கிருமியை ஒழிப்பதற்கான மாத்திரை தான் அல்சர் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கும்.



தலைவலி உள்ளிட்ட உடல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி கடைகளில் வாங்கி சாப்பிடும் தவறான மருந்துகளின் காரணமாகவும் அல்சர் வர வாய்ப்புள்ளது. அப்படி அல்சர் வந்த பின்னர் அது பல தொந்தரவுகளை உண்டாக்குகிறது. மேல் மற்றும் நடுவயிறு, மார்பெலும்பின் பின்புறம் எரிவது போன்ற வலியினை ஏற்படுத்தும். பசியின் போது வலிக்கும். குமட்டல் போன்ற அறிகுறியையும் ஏற்படுத்தும்.



இதனால் வயிறு உப்பியது போலத் தோன்றி ஏப்பத்தை உருவாக்கும். வயிறு காலியாக இருக்கும் போது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அல்சர் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். இது போன்ற தொல்லைகள் சாப்பிட்ட பின்னர் மறைந்து மறுபடியும் உங்களைத் தொல்லை செய்யும். எப்படித் தடுக்கலாம்?



தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். சாப்பாட்டில் காரம் குறைக்கவும். அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும் மசாலா பொருட்களைக் குறைத்துக் கொள்ளலாம். வலி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதைத் தவிர்க்கவும். காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்களுக்கு தடா போடவும்.



புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தி விடலாம். வயிற்றை நீண்ட நேரம் காலியாக வைக்காமல் அவ்வப்போது குறைந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையாக இருந்தால் அல்சர் உருவாவதை தடுக்கலாம். அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.



மூலிகைகளைப் போல செயல்பட்டு வயிற்றுப் புண்ணை ஆற்றும் வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.



இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.



மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாட்டி வைத்தியம் அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.



அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.



ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

Monday, April 11, 2011

பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு.

இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவல்கள் காணாமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு மூலையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி இயங்கலாம்.


1. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் தாமாக அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து, மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை இந்த பைல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றை, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், தாமாகவே கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, பதியும் படி அமைக்க வேண்டும்.

2. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும்.

3. ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து, தேவைப்படும்போது இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்துடன் பாதுகாப்பு தரும் இத்தகைய புரோகிராம்களைத் தருகிறது.

4. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் தரும் புரோகிராமினைக் காட்டிலும் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.

5. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும்.

6. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@ virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

7. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும்.

8. விண்டோஸ் தன் இயக்கத்தின் போது, பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக் கின்றன என்று பார்த்து அவற்றின் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். சந்தேகப்படும் படியான புரோகிராம்கள் இருப்பின், உடனே அவற்றை நிறுத்தினால், சிஸ்டம் இயங்குவதற்கு அது தேவையா எனத் தெரிந்துவிடும்.

9. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே மைக்ரோசாப்ட் தளம் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்

10. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயல வில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.

11. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

12. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

13. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறிய அளவில் அதனை மாற்றிக் கொள்ளலாம்.

14. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளை கிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.

15. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.

16. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

17. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

18. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கள்.

19.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன் களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.

20. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகி றீர்களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’ என எஸ் சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

21. செக் பாயிண்ட்டின் புதிய ஸோன் அலார்ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுகாப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை அளிக்கிறது. பிரவுசருக்கும் உங்கள் கம்ப்யூட்டரில் அது ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகிறது.

22.முன்பெல்லாம் குக்கிகள் வழியாகத்தான் வைரஸ்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது குக்கிகள் நம் வேலையை இன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லை என்றால் நம் பெயரையும் தகவல்களை யும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு படுத்த வேண்டும். இருப்பினும் ஆண்ட்டி ஸ்பைவேர் தொகுப்பு மோசமான குக்கிகளை எடுத்து விடுவதால் அத் தொகுப்பு களை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

23. உருவாக்கும் ஒவ்வொரு பைலுக்கும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும். இதற்கான வழிகள் இப்போது ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ளன.

24. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.

25. பொதுவான கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளி யேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.

26. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail. com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

27. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.

28. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.

29. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர் பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.





அகதி அந்தஸ்துக் கோருகின்றவருக்கு புதிய கடவுச்சீட்டு வழங்கப்படமாட்டாது

 




வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு அந்த நாடுகளில் உள்ள தூதராலயங்கள் மூலமாக இனி கடவுச்சீட்டு வழங்குவதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துக் கோரியுள்ள இலங்கைப் பிரஜையொருவர், அதே நாட்டில் வசிக்கும் காலப்பகுதிக்குள் அவருக்கு இலங்கைக் கடவுச்சீட்டு வழங்கப்படமாட்டாது என்ற நடைமுறை கடந்த நான்காம் திகதி முதல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குத் தப்பியோடி அகதி அந்தஸ்துக் கோரும் நபர்கள் முதலில் தமது இலங்கைக் கடவுச்சீட்டை கிழித்தெறிந்து விட்டே தமக்கு இலங்கையில் வாழ முடியாதிருப்பதாக அந்நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்றனர்.



அதன் பின் அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் சரியான முறையில் இருக்குமிடத்து அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுகின்றது. அதன் பின் அவர்கள் புதிய இலங்கைக் கடவுச்சீட்டொன்றைப் பெற்று தமது வதிவிட விசாவை அதில் பதித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.



அவ்வாறு வதிவிட வீசாவை பதித்துக் கொள்வதற்காக புதிய பாஸ்போர்ட் பெற முனைபவர்களுக்கே இனிமேல் வெளிநாடுகளில் உள்ள தூதுவரலாயங்கள் மூலமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.



அதற்குப பதிலாக இலங்கைக்குச் செல்வதற்காக மட்டும் தற்காலிக அடையாள ஆவணம் வழங்கப்படும். அதனை எடுத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றே புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டு தாம் வாழும் நாடுகளின் வதிவிட வீசாவைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.



இலங்கையில் அச்சுறுத்தல் உள்ளதாலேயே அநேகமானவர்கள் அகதி அந்தஸ்துக் கோருகின்றனர் இலங்கை அரசோ அகதி அந்தஸ்து வழங்கப்பட்டால் அவர்கள் இலங்கைக்குச் சென்றே புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டு தாம் வாழும் நாடுகளின் வதிவிட வீசாவைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அர்வித்துள்ளமை அகதி அந்தஸ்துக் கோருகின்றவருக்கு மேலும் ஆபத்தே.





Send To Friend
செய்தியை வாசித்தோர்: 7035



Tuesday, March 29, 2011

ஷார்ட்கட் கீகளை அமைக்கலாம்........

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ் கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்தது. பல செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால் மவுஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று நோக்கி தேவையான இடத்தில் அமைத்து கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம்தான். இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்கு அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட்கட்கள் தான். ஷார்ட்கட் என்பது இரண்டு கீகள் இணைந்த ஒரு கட்டளை ஆகும்.


கீ போர்டு ஷார்ட்கட் என்பதில் குறைந்தது இரண்டு கீகள் இருக்கும். முதல் கீ (Modifier Key) மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு இருக்கும் செயல்பாட்டினை மாற்றி அமைக்கும் கீ. ஆல்ட், ஷிப்ட், கண்ட்ரோல் (Alt, Shift, Ctrl) கீகள் இத்தகைய கீகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்துடன் எழுத்து அல்லது எண்களுக்கான கீகள் இணைந்து செயல்பட்டு ஷார்ட் கட் கீ தொகுப்பினைத் தருகின்றன. இந்த தொகுப்பினைப் பயன்படுத்துகையில் கம்ப்யூட்டரில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பல ஷார்ட்கட் கீகள் உலகெங்கும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பொதுவானதாக இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக கண்ட்ரோல் + சி (Ctrl + C) காப்பி செய்வதற்கும், கண்ட்ரோல் + வி (Ctrl+V) பேஸ்ட் செய்வதற்கும் கண்ட்ரோல் + எஸ் (Ctrl+S) சேவ் செய்வதற்கும் அனைத்து நாடுகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ளன. சில புரோகிராம்களில் இவை வேறு படலாம்.

இந்த ஷார்ட்கட் கீகள் அனைத்தையும் ஒருவர் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் நாம் அடிக்கடி மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கான ஷார்ட்கட் கீகள் நாம் முயற்சி எடுக்காமலேயே நம் நினைவில் அமைந்து விடுகின்றன. ஒவ்வொரு கட்டளைக்குமான ஷார்ட்கட் கீயினை அந்த மெனுவில் கட்டளைச் சொல்லில் அடிக்கோடு இழுக்கப் பட்ட எழுத்தே ஷார்ட்கட் கீயில் பயன்படுத்தப்படும்.

இன்னொரு வழியும் உள்ளது. எடுத்துக் காட்டு மூலம் விளக்குகிறேன். ஸ்டார்ட் (Start) பயன்படுத்தி கிடைக்கும் மெனுவில் ஆல் புரோகிராம்ஸ் (All Progrmas) – அக்சஸரீஸ் (Accessories) – அட்ரஸ் புக் (Address Book) தேடிக் கண்டுபிடியுங்கள். இதை இயக்க லெப்ட் கிளிக் தருவீர்கள் அல்லவா? இப்போது ரைட் கிளிக் செய்திடுங்கள். விரியும் மெனுவில் கீழாக உள்ள பிரிவான புராபர்ட்டீஸ் (Properties) என்பதில் கிளிக் செய்திடுங்கள். புராபர்ட்டீஸ் டயாலக் பாக்ஸில் ஷார்ட்கட் கீ (Shortcut key) என ஒரு பாக்ஸ் இருக்கும். இந்த பாக்ஸில் நன் (None) என இருக்கும். இதில் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று பின் ஷிப்ட் (Shift) அழுத்தினால் அதில் கண்ட்ரோல்+ ஆல்ட் (Ctrl+Alt) கிடைக்கும். அதாவது அட்ரஸ் புக் புரோகிராம் திறப்பதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்பில் மாடிபையர் கீகள் இந்த இரண்டும் ஆகும். இனி அதனுடன் அ அழுத்துங்கள். பின் அப்ளை (Apply) அழுத்தி வெளியேறுங்கள். நீங்கள் இப்போது ஒரு ஷார்ட்கட் கீயினை உருவாக்கி விட்டீர்கள். இனி அட்ரஸ் புக் திறக்க கண்ட்ரோல் + ஆல்ட் + ஏ (Ctrl+Alt+A) அழுத்தினால் போதும்.

இந்த கீ தொகுப்பு ஏற்கனவே அமைக்கப்படாத புரோகிராம்கள் அனைத்திலும் இந்த ஷார்ட்கட் கீ செயல்படும். எடுத்துக்காட்டாக பேஜ் மேக்கர், வேர்ட், எக்ஸெல் போன்ற தொகுப்புகளில் இந்த ஷார்ட்கட் கீ யை அழுத்தினால் அட்ரஸ் புக் திறக்கப்படும். ஏனென்றால் இந்த கீ தொகுப்பினை வேறு எந்த கட்டளைக்கும் அந்த புரோகிராம்கள் பயன்படுத்த வில்லை. ஆனால் இந்த ஷார்ட்கட் கீ தொகுப்பினை ஒரு புரோகிராம் பயன்படுத்தி இருந்தால் இது அத்தொகுப்பில் எடுபடாது.

வேர்ட் தொகுப்பில் ஒரு ஷார்ட்கட் கீயினை ஏற்கனவே உள்ளதற்குப் பதிலாக அமைக்கும் விதம் குறித்துப் பார்க்கலாம். வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள சொற்களை எண்ணிச் சொல்ல தரப்பட்டுள்ள ஷார்ட்கட் கீ தொகுப்பு Alt+T+W. இதனை மிக எளிமையாக மாற்றவும் எப்படி ஷார்ட்கட் கீ தொகுப்பு உருவாக்கலாம் என்பதற்கும் கீழே குறிப்புகள் தரப்படுகின்றன. இதனை Alt+U ஆக மாற்றும் வழிகளைக் காணலாம்.

டூல்ஸ் மெனுவில் கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸ் திறந்தவுடன் கிடைக்கும் விண்டோவில் கமாண்ட்ஸ் (Commands) என்னும் டேபிள் கிளிக் செய்திடவும். இந்த பாக்ஸின் அடிப்பாகத்தில் கீ போர்டு (Keyboard) என்னும் பட்டன் கீழாகக் காணப்படும். அதனைக் கிளிக் செய்திடவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் பெட்டியில் டூல்ஸ் (Tools) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது பக்கம் கமாண்ட்ஸ் (Commands) கட்டத்தில் ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால் டூல்ஸ் வேர்ட் கவுண்ட் (Tools Word Count) என்று ஒரு கட்டளை இருக்கும். கீழாக பிரஸ்நியூ ஷார்ட்கட் கீ (Press New Shortcut key) என்பதில் கிளிக் செய்து பின் Alt கீயையும் க் கீயையும் டைப் செய்திடவும். அருகே இருக்கும் அசைன் (Assign) பட்டனில் கிளிக் செய்து பின் ஓகேயில் என்டர் தட்டி அனைத்து பாக்ஸ்களையும் மூடுங்கள். இனி சொற்கள் எண்ணுவதற்கு Alt + U ஷார்ட் கட் கீகளாக அமையும்.

இது போல ஏற்கனவே இருக்கும் செயல்பாடுகளுக்கு ஷார்ட்கட் கீகளை நமக்கு எளிதாகவும் நாம் விரும்பும் வகையிலும் அமைக்க முடியும்.

பொதுவாகக் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் இந்த ஷார்ட் கட் கீகளை அறிந்து வைத்திருப்பது நல்லது. இவற்றைத் தெரிந்து கொள்ளும்போதுதான் நாம் வீணாக எவ்வளவு நேரத்தைச் செலவு செய்திருக்கிறோம் என்பதனை உணர்வோம். எடுத்துக்காட்டாக சில நேரங்களில் தெரியாமல் கேப்ஸ் லாக் (Caps Lock) அழுத்தி விட்டு அவசரமாக மானிட்டரைப் பார்க்காமல் ஏதேனும் நூல் அல்லது ஏட்டினைப் பார்த்து டைப் செய்கையில் THERE EXIST A DIFFERENT SOLUTION WHICH MANY OF US DO NOT KNOW என அனைத்தையும் பெரிய எழுத்தில் டைப் செய்திருப்போம். பின் தவறை உணர்ந்து மீண்டும் டைப் செய்வோம். அப்போது தெரியாது இதனைச் சரி செய்திடும் வழி ஷிப்ட் + எப் 3 கீயில் (Shift + F3) தரப்பட்டிருப்பது. சரி செய்திட வேண்டிய சொற்களைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட் + எப்3 கீயை அழுத்தினால் இந்த சொற்கள் இரு வேறு சரியான வழிகள் தரும். அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம். ஏற்கனவே சேவ் ஆன ஒரு பைலை வேறு ஒரு பெயரில் சேவ் செய்திட பைல் மெனு கிளிக் செய்து பின் சேவ் அஸ் என்ற பிரிவைக் கிளிக் செய்து வரும் டயலாக் பாக்ஸில் வேறு ஒரு பெயர் தருவோம். ஆனால் இதனை F12 கீ அழுத்தி செயல்படுத்தலாம்.

ஷார்ட்கட் கீகள் நம் வழக்கமான பணியை விரைவாக முடிக்க உதவும் திறவுகோல்களாகும். எப்போது மெனு கட்டளைகளைச் செயல்படுத்தினாலும் அதனைச் சற்று உற்று நோக்குங்கள். நீங்கள் இந்த கட்டளைகளுக்காக கர்சரைக் கொண்டு சென்றாலே அதன் ஷார்ட் கட் கீ என்ன? என்று காட்டப்படும். அடிக்கடி பயன்படுத்தும் மெனு கட்டளைகளுக்கான ஷார்ட்கட் கீகளை நினைவில் வைத்து எளிதாகப் பயன் படுத்தி விரைவாகச் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.





Tuesday, March 8, 2011

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்: தெரிஞ்சாகனும் சாமி !



09 March, 2011 by admin

நேற்று முன்தினம் அனுராதபுரம் நொச்சியாகமப் பகுதியில் மாலை 4.00 மணியளவில் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறி வாத்தி அவர்களின் வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவரே கூறியுள்ளார். 2 கைக் குண்டுகள் வீசப்பட்டதாகவும், துப்பாக்கிப் பிரயோகங்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு நின்றுவிடாது, தமிழ் அரசியல் எதிரிகளே அவர் வாகனத்தைத் தாக்கியதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதுவரை சேதத்துக்கு உள்ளான அவரது வாகனத்தின் படங்கள் எதுவும் இணையத்தில் வந்ததாகத் தெரியவில்லை. அவர் சயிக்கிள் பசிசளிக்கும் போதும், பப்பு செட் கொடுக்கும் போதும், மற்றும் புத்தங்களை ஏழைக்கு வழக்கும் போதும் படம் படமாக எடுத்து வெளியிட்ட பல இணையங்கள், தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தின் புகைப்படங்களை ஏன் எடுத்துப் போடவில்லை என்பது பெரும் சந்தேகமாக உள்ளது.



இதில் இதரக் கட்சிகள், அரசியல் அமைப்புகள், தனி மனிதர்கள் என பலரும் இத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது இன்றுவரை ஆதாரபூர்வமாக ஏன் வெளிவரவில்லை. எப்போதும் ஒரு கமராவோடும், கையடக்க கணணியோடும் செல்லும் சிறி வாத்தி அவர்கள் ஏன் தனது வாகனத்தை படம் எடுத்து இணையங்களுக்கு அனுப்பவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தேசிய தலைவரின் தாயார் அன்னை பார்வதி அம்மாள் இறந்ததைக் கூட பிரேக்கிங் செய்தியாகப் போடாமல் சாதாரன செய்தியாப் போட்ட ஒரு இணையம், தற்போது சிறி வாத்தி வாகனம் தாக்கப்பட்டதை பிரேக்கிங் செய்தியாகப் போட்டு மகிழ்ந்தது.



அது சரி ! சும்மாவா சொன்னார்கள் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று ! நடக்கட்டும், இத் தகவலை நாம் எழுதியுள்ளதால் இனி சில இணையங்கள் விரைவாகச் செயல்பட்டு அப்படங்களை எடுத்துப் போடுவார்களோ தெரியவில்லை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

Monday, March 7, 2011

கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்....???

கம்ப்யூட்டருக்கு அறிமுகமாகிச் சில காலம் தான் ஆகிறதா? நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள்.


CTRL+C (Copy): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட; காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.

CTRL+X (Cut): தேர்ந்தெடுத்தடெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட; நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் இருக்கும் அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

CTRL+V (Paste): ஏற்கனவே தேர்ந்தெடுத் ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட; இதற்குப் பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.

CTRL+Z (Undo): சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.

DELETE (Delete): எதனையும் அழித்துவிட; இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் தேட வேண்டும்; தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.

SHIFT+DELETE: நிரந்தரமாக அழித்துவிட; இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள் பின்னுக்குப் போகாது.

F2 key: பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட

CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல

CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல

CTRL: இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.

CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல

SHIFT: இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.

ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்தியபின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

CTRL+A: அனைத்தும் செலக்ட் செய்திட

F3 key: பைல் அல்லது போல்டரைத் தேட

ALT+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப் படும்; இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ALT+F4: அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்;

ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் திறக்கப்படும்.

CTRL+F4: ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.

ALT+TAB: திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும்; எந்த புரோகிராம் தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.

ALT+ESC: டாஸ்க் பாரில் திறக்கப் பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் செல்லும்; தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.

CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க

F10 key: ஒரு மெனுபாரினை இந்த கீ இயக்கத் தொடங்கும்.

ESC: அப்போதைய செயல்பாட்டினைக் கேன்சல் செய்திடும்.









Saturday, February 19, 2011

நெருங்குகிறது சிபிஐ; நெருக்குகிறது காங்....

நெருங்குகிறது சிபிஐ; நெருக்குகிறது காங்.



இந்தியாசெய்தி


Monday, February 14th, 2011


தமிழக அரசியலில் நாளும் ஒரு திடுக்கிடும் திருப்பங்கள் நடந்து வருகின்றன.


சென்னையில் காங்கிரஸ் பேராளர்கள் திமுக தலைவரைச் சந்தித்துக் கூட்டணி இடங்கள் பற்றி பேசிய வேளையில், டெல்லி யில் மேலிட காங்கிரஸ் விஜயகாந் தின் தேமுதிகவுடன் பேச்சு நடத்திய தாகத் தகவல் சாதனங்கள் கூறின.


இதையடுத்து, எதை நம்வுவது என்று புரியாமல் அரசியல்வாதிகள் முதல் தொண்டர்கள்வரை எல் லாரும் குழம்புவதாகத் தெரிகிறது.


காங்கிரஸ் கட்சியுடன் கூடிய கூட்டுக்காகத் தனது பெரும் புள்ளி ராசாவை பலியாக்கத் திமுக முன் வந்துள்ளது.


முன்னாள் அமைச்சர் ராசா கைதாகி இருந்தாலும் கூட்டணி யில் பாதிப்பு இல்லை என்று இரு கட்சிகளும் நாள்தோறும் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றன.


என்றாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் சிபிஐ புலனாய்வு அமைப்பு, ராசாவைக் கடந்து திமுகவுக்குள் நுழைவதை அந்தக் கட்சி விரும்பவில்லை.


ஆனால் சிபிஐ அமைப்பு முதல் வர் கருணாநிதியின் வீட்டுக் கதவு வரை வந்துவிட்டது என்று நம்பப் படுகிறது. கலைஞர் டிவியின் உரிமையாளர்களில் ஒருவரும் திமுக தலைவரின் புதல்வியுமான கனிமொழியிடம் விரைவில் தீவிர விசாரணை நடக்க இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலை ஏற்படும்பட்சத்தில் திமுகவின் பொறுமை பெரும் சோதனைக்கு உட்டுபத்தப்படும் என்றும் அதன் விளைவாகத் திமுக கடும் சித்தப்போக்கைக் கைக் கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் உறவை முறிக்கும் நிலைகூட ஏற் படக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.


திமுக இந்த முடிவை எடுத்தால் காங்கிரஸ் கட்சிக்குத் திரிசங்கு சொர்க்கம் நிலைதான் ஏற்படும்.


இதனைத் தவிர்த்துக்கொள்ள காங்கிரஸ் தயாராகிறது என்றும் திமுக கைவிடும் பட்சத்தில் தேமுதிக, பாமகவுடன் கூட்டணி சேரலாம் என்று காங்கிரஸ் காய் களை நகர்த்துகிறது என்றும் டெல்லியில் தகவல் சாதனங்கள் தெரிவிக்கின்றன.


அதேவேளையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தொடர திமுக வின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு அவசியமாக இருக்கிறது.


ஆகையால் ஸ்பெக்ட்ரம் விவ காரத்தில் வசமாகச் சிக்கி இருக் கும் திமுகவை தன் கைப்பாவை யாக ஆக்கிக் கொள்ள காங்கிரஸ் முயல்கிறது என்று தெரிகிறது.


தமிழகத் தேர்தலில் திமுகவை கைவிட காங்கிரஸ் தயாராக இல்லை. திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறவே காங் கிரஸ் வியூகங்களை அரங்கேற்று கிறது என்று சென்னையில் தகவல் கள் தெரிவிக்கின்றன.


கூட்டணியில் 80 இடங்களை காங்கிரஸ் கேட்கிறது என்றும் கூட்டணி வென்றால் திமுக - காங்கிரஸ் கூட்டு அரசு அமையும் என்று இப்போதே திமுக அறிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ்காரர் கள் கோரிக்கை விடுகிறார்கள்.


திமுகவோ, காங்கிரசைக் கைவிடவும் முடியாமல் அந்தக் கட்சிக்கு அது கேட்கும் அளவுக்கு இடங்களை ஒதுக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பைப் போல் தவிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


தமிழக அரசியலில் திமுக எத்தனையோ சுனாமிகளைச் சந்தித்து தப்பி இருக்கிறது.


ஆனால் இப்போது அடிக்கும் காங்கிரஸ் சுனாமியில் அந்தக் கட்சி சிக்கிவிட்டது என்னமோ உண்மை. இருந்தாலும் எதை யாவது பலிகடாவாக்கி திமுக தப்பிவிடும் என்று கட்சியினர் சொல் கிறார்கள். அந்த பலிகடா காங்கிரஸ் கட்சியாகக் கூட இருக் கலாம் என்பது அரசியல் கவனிப் பாளர்கள் கருத்து. .