Wednesday, May 1, 2013

'உடம்பை வளைத்தேன் உயிர் வளர்த்தேனே’ - நவீனத் திருமூலரின் திருவாசகம் இப்படித்தான் இருக்கும். நன்றாக உடலை வளைத்து நெளித்து செய்யும் உடற்பயிற்சிதான் நம் உடலைக் கட்டுக்கோப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. சரிவிகித உணவு மற்றும் முறையான உடற்பயிற்சிக்கு உடலைப் பழக்கப்படுத்திவிட்டால், மிடுக்கான தோற்றத்தையும், நோய்நொடி இல்லாத வாழ்வையும் பெறலாம்.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க எல்லோருக்குமே ஆசைதான் என்றாலும், சிலர் மட்டுமே அதற்கான முயற்சிகளில் முழுமையாக ஈடுபட்டு இறுதி எல்லைக்கோட்டை வெற்றிகரமாகத் தாண்டுகின்றனர். வீட்டுக்கு அருகில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் உறுப்பினராகச் சேர்வதில் ஆரம்பித்து, அதற்கெனப் பிரத்யேக உடை, காலணி என ஒவ்வொன்றையும் ஆசைஆசையாக வாங்குவது எனப் பலருக்கு ஓப்பனிங் எல்லாம் அமர்க்களமாகத்தான் இருக்கும். ஆனாலும், மூன்றே மாதங்களில் சிக்ஸ்பேக் எனச் சூளுரைத்து, மூன்று வாரங்களில் சிங்கிள்பேக்குடன் ஒதுங்கிவிடுவார்கள் இவர்கள். பாதியிலேயே இவர்கள் பயிற்சியை நிறுத்திவிடுவதற்கு பணிச்சுமை, நேரமின்மை, எதிர்பார்த்த ரிசல்ட் உடனே கிடைக்காத விரக்தி எனக் காரணங்கள் பலவகை.

உடலுக்கு உறுதியை மட்டும் அல்ல, மனதுக்கும் உற்சாகத்தைப் பாய்ச்சும் உடற்பயிற்சியை ஒருசிலர் மட்டுமே ஆர்வம் குறையாமல் மேற்கொள்கின்றனர். ஆரோக்கியம் காக்க வேண்டும் எனில், வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சிகள் செய்யும் முறைகளையும், அதன் பலன்களையும் பளிச்செனத் தருகின்றனர் சென்னை சாந்தோமில் உள்ள ஃபீனிக்ஸ் ஃபிட்னெஸ் ஸ்டுடியோ உரிமையாளரும், ஃபிட்னெஸ் பயிற்றுநருமான ஸ்ரீமதி மற்றும் ஃபிட்னெஸ் ஆலோசகர் சி.லஷ்மிகுமார்.
இனி, இந்த உடற்பயிற்சி கையேடு உங்களுக்கான கைடு!
வாக்கிங், ஜாகிங் போன்ற எளிய பயிற்சிகளை மேற்கொண்டால் போதும் என்பது தவறு. சமையலுக்குப் புளிப்பு, உப்பு, காரம் எப்படி முக்கியமோ... அதுபோல உடற்பயிற்சிக்கு கார்டியோ மற்றும் எடைப் பயிற்சி மிகவும் அவசியம். பயிற்சிகளை ஏரோபிக் (கார்டியோ), நான்-ஏரோபிக் (எடைப் பயிற்சி) என இரண்டாகப் பிரிக்கலாம்.
ஏரோபிக் பயிற்சிகள் இதயம், நுரையீரல் போன்ற உடலின் உள்உறுப்புகளை வலுப்படுத்த மேற்கொள்ளப்படுகின்றன. நான்-ஏரோபிக் பயிற்சிகள் தசைகள் வலுப்பெற உதவுகின்றன. ஏரோபிக் பயிற்சிகளில் நடைப்பயிற்சி, மிதமான ஓட்டப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங் போன்றவை அடங்கும். எடைப் பயிற்சிகளில் ஸ்குவாட், லெக் பிரஸ், சீட்டட் கேபிள் ரோ போன்ற பயிற்சிகள் உள்ளன. வெறும் ஏரோபிக் பயிற்சிகள் செய்தால் மட்டும் போதாது. கூடவே, எடைப் பயிற்சியையும் இணைந்து செய்யும்போதுதான் கட்டுடல் கிடைக்கும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் உடற்பயிற்சி செய்வது என்பது சரியானதாக இருக்காது. முழு உடலுக்கும் செய்வதன் மூலமே உடலை ஃபிட்டாக வைத்திருக்க முடியும்.
உடற்பயிற்சிகளும் உறுதியான பலன்களும்...
வார்ம் அப்:

உடற்பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பு வார்ம் அப் பயிற்சிகள் அவசியம். வார்ம் அப் என்றதும் நிறையபேர் ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை நினைத்துக்கொள்கின்றனர். இது தவறு. ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சியானது தசைகளை நீட்டுகிறது. ஓய்வாக இருக்கும் நம்முடைய தசைகளுக்குத் திடீரெனக் கடினமான பயிற்சி அளிக்கும்போது உள்காயங்கள் ஏற்படலாம். எனவே, வார்ம் அப் பயிற்சிகள் செய்துவிட்டுத்தான் உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். அவ்வப்போது பயிற்சிகளுக்கு இடையே ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சி செய்வது மேலும் நல்ல பலனைத் தரும்.
நடைப்பயிற்சி:

நாள் ஒன்றுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது போதுமானது. நடக்கும்போது மூச்சிரைப்பு இருந்தாலும், அருகில் இருப்பவர்களுடன் சகஜமாகப் பேசும் அளவுக்கு நடைப்பயிற்சியின் வேகம் இருக்கவேண்டும். அப்போதுதான் இதயத்துடிப்பு சீரான அளவில் இருக்கும். ட்ரெட்மில்லில் நடைப்பயிற்சி செய்யும்போது நம்முடைய இதயத்துடிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். வயதுக்கு ஏற்ப இதயத்துடிப்பு இருக்கும் வகையில் ட்ரெட்மில் வேகத்தைச் சரிபடுத்திக்கொள்ளமுடியும்.
ஸ்குவாட்ஸ் (Squats):

பயிற்சிகளின் அரசன் என்று புகழப்படும் பயிற்சி இது. இந்தப் பயிற்சிக்கு, பார்பெல் (Barbell)என்ற எடை தூக்கும் கருவி தேவை. பார்பெல் பிடியை பின்தோள்பட்டையில் தாங்கிப் பிடிக்க வேண்டும். கழுத்தில் தாங்கக்கூடாது. கால்கள் தோள்பட்டை அளவுக்குச் சற்று விரிந்தநிலையில் வைக்க வேண்டும். மூச்சை ஆழமாக உள்இழுத்து கீழே உட்காருவது போன்ற நிலைக்குக் கால்முட்டியை மடக்கிச் செல்ல வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
இந்தப் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது. தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.
லெக் பிரஸ் (Leg press)

பிரத்யேக லெக் பிரஸ் இயந்திரத்தில் அமர வேண்டும். இந்த இயந்திரத்தின் எடைகொண்ட மேடையைக் கால்களால் தாங்கிப்பிடிக்க வேண்டும் (இந்த நிலையில் இந்த மேடையில் எடை எதுவும் இருக்காது). பின்னர், நம் கால்கள் தாங்கிக்கொள்ளும் வகையில் மேடையின் 'லாக்'கை அகற்ற வேண்டும். இப்போது மேடையின் முழு எடையும் நம் கால்கள் தாங்கும் வகையில் இருக்கும். மூச்சை உள் இழுத்தபடி, கால்முட்டியை மடக்கி மேடையை கீழே கொண்டு வர வேண்டும். சில நொடிக்குப் பிறகு, மூச்சை வெளியே விட்டபடி, பாதங்களால் அந்த மேடையே மேலே உயர்த்த வேண்டும். இந்தப் பயிற்சியை மேற்கொள்வதன்மூலம் தொடைகள் நன்றாக வலுவடையும்.
குறிப்பு: பாதங்கள் எடையைத் தாங்குவதற்கு முன்பு, சரியான அளவில்தான் எடை உள்ளதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்துகொண்டு, 'லாக்'கை அகற்றுவது நல்லது.
பார்பெல் ரோயிங் ((barbell rowing):

உடலை வளைத்து, இரண்டு கைகளாலும் பார்பெல்லை பிடித்து கால் கீழ்மூட்டு வரை தூக்க வேண்டும். இந்த நிலையில், கைகள் மடங்கக்கூடாது. நேராக இருக்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுத்தபடி பார்பெல்லை இடுப்பு வரை மேலே உயர்த்த வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி, மெதுவாக பார்பெல்லை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். பயிற்சியாளர் பரிந்துரைக்கும் அளவுக்கு இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதன் மூலம் முதுகுத் தசைகள் நன்றாகப் பலம் பெரும்.
குறிப்பு: முதுகு தண்டு பிரச்னை உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.
சீட்டட் கேபிள் ரோ (Seated cable row)

முதுகுத் தசைகளுக்கு வலு அளிக்கும் பயிற்சி. பிரத்யேக ஜிம் கருவியில் அமர்ந்து மூச்சை உள்ளிழுத்தபடி அதில் உள்ள கயிற்றைப் பிடித்து இழுக்க வேண்டும். இழுக்கும்போது எந்தச் சிரமமும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, கைப்பிடியை வயிறு வரை கொண்டுசெல்ல வேண்டும். பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பொறுமையாக அதை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இதில் பயிற்சிக்கு ஏற்ப எடையை அதிகரித்துக்கொள்ளலாம்.
ஒன் ஆர்ம் டம்பெல் ரோ (One arm dumbbell row)

சற்று உயரமான சமதளப் படுக்கையின் இரண்டு பக்கங்களிலும் டம்பெல்களை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையைச் சமதளப் படுக்கையில் நேராக வைக்க வேண்டும். இடது காலை மடித்த நிலையில் படுக்கையில் வைக்க வேண்டும். இப்போது வலது கையால் டம்பெல்லைத் தூக்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி வலது கைமுட்டியை மடித்து டம்பெல்லை மேலே உயர்த்த வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று இடது பக்கத்தில் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் நடுமுதுகுத் தசை, பைசெப்ஸ், தோள்பட்டைத் தசைகள் வலுப்பெறும்.
சீட்டட் மெஷின் செஸ்ட் பிரஸ் (seated machine
chest press)

இதற்கென இருக்கும் பிரத்யேக இயந்திரத்தில் நேரான நிலையில் அமர வேண்டும். முன்பக்கம் உள்ள அதன் கைப்பிடிகளைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இதுதான் பயிற்சியின் ஆரம்ப நிலை. இப்போது மார்புத் தசையை இறுக்கியவாறு கைப்பிடியை சற்று முன்னோக்கித் தள்ள வேண்டும். ஒரு விநாடி மார்புத் தசைகளுக்கு இறுக்கிவிட்டு, பிறகு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சி, மார்புத் தசையை வலுவாக்கும்.
டம்பெல் ஃபிளை (dumbbell flyes)

தட்டையான பெஞ்சில் படுக்க வேண்டும். இரண்டு கைகளிலும் டம்பெல் உயர்த்திப் பிடிக்க வேண்டும். நம் முதுகும், தலையும் படுக்கையில் வசதியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கால்களைத் தரையில் ஊன்றிய நிலையில் வைத்திருந்து, மெதுவாக கைமூட்டை பக்கவாட்டில் இறக்கிக் கொண்டுவர வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். எடை அதிகம் உள்ள டம்பெல்சைப் பயன்படுத்தாமல் குறைந்த எடையைப் பயன்படுத்துவதன் மூலம் தோள்பட்டைக் காயத்தைத் தவிர்க்கலாம். இந்தப் பயிற்சியும் மார்புத் தசையை வலுவாக்கும்.
பார்பெல் கர்ல் (barbell curls)

தோள்பட்டை அகலத்துக்குக் பார்பெல்லை தொடைகளுக்கு அருகில் பிடிக்க வேண்டும். முன்பக்கம் தூக்கும் வகையில் இந்தப் பிடிப்பு இருக்க வேண்டும். உங்கள் கைமுட்டி மடங்கக் கூடாது. மூச்சை உள்ளிழுத்தபடி முட்டியை மடித்து பார்பெல்லை மார்பு வரை உயர்த்த வேண்டும். பார்பெல் மார்பை நெருங்கியதும் உங்கள் பைசெப்ஸை நன்றாக இறுகவைத்து மூச்சை வெளியேவிட்டபடி, மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பைசெப்ஸ் தசைகளை நன்றாக உறுதிப்படுத்தும்.
பெக் டெக் ஃபிளைஸ் (pec deck flyes)

இதற்கென உள்ள பிரத்யேகக் கருவியில் நேராக அமரவேண்டும். அதன் கைப்பிடிகளை பிடித்துக்கொண்டு, தோள்பட்டையை நேராக வைக்க வேண்டும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடி, கைப்பிடியை மெதுவாகப் பக்கவாட்டில் தள்ளிக் கொண்டுசென்று தோள்பட்டைக்கு நேராகக் கொண்டுவர வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வர வேண்டும். இதுவும் மார்புத் தசையை வலுவாக்கும் பயிற்சி.
டம்பெல் ஷோல்டர் பிரஸ் (dumbbell shoulder press)

இரண்டு கைமுட்டிகளையும் மடக்கிய நிலையில் தோள்பட்டை அருகில் டம்பெல்ஸை வைத்திருக்க வேண்டும். கால்களைத் தோள்பட்டை அளவுக்கு சற்று அகட்டி வைக்க வேண்டும். அப்படியே கைகளை உயர்த்தி டம்பெல்ஸை தலைக்கு மேல் கொண்டு செல்ல வேண்டும். சில விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தோள்பட்டைத் தசைகள் வலுவடையும்.
லேட்ரல் ரெய்ஸ் (lateral raise)

டம்பெல்ஸ் பயன்படுத்திச் செய்யக்கூடிய பயிற்சி இது. கைகளில் சற்று எடை குறைந்த டம்பெல்ஸை பிடித்து நேராக நிற்க வேண்டும். இப்போது டம்பெல்ஸைப் பக்கவாட்டில் தோள்பட்டை அளவுக்கு உயர்த்த வேண்டும். இந்த நிலையில் உங்கள் கைமுட்டியை சற்று மடக்கிவைக்க வேண்டும். சில நொடிகளில் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
வெளித் தோள்பட்டை சதை வலுவடையவும், தோள்பட்டை அகலமானதாகக் காட்டவும் இந்தப் பயிற்சி உதவும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது தோள்பட்டை, கவசம் பூட்டியதுபோல கம்பீரமாக இருக்கும்.
லெக் எக்ஸ்டென்ஷன் (leg extension)

கால் வைக்கும் 'பேடு'க்குள் உங்கள் கால்களை நுழைக்க வேண்டும். கைப்பிடிகளை நன்கு பிடித்துக்கொள்ள வேண்டும். அடுத்து அந்த பேடில் அழுத்தத்தைக் கொடுத்து மேலே உயர்த்த வேண்டும். இந்த நிலையில் கால்கள் நேராக இருப்பது வரை உயர்த்திவிட்டு ஒன்று இரண்டு நொடிகளுக்குப் பிறகு, பழைய நிலைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சியானது முன்தொடையைப் பலப்படுத்தும்.
லெக் கர்ல் (leg curl)

இதற்கென உள்ள பிரத்யேகக் கருவியில், குப்புறப் படுத்து கால்களை உயர்த்தும் 'பேடு'க்குள் கால்களை நுழைக்க வேண்டும். கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, கால்களை பின்னோக்கி நகர்த்தி எடையை மேலே உயர்த்த வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வர வேண்டும். இது பின்தொடையை வலுவாக்கும்.
க்ரஞ்சஸ் (crunches)

சமதளத்தில் படுத்து, கால்முட்டியை மடக்கிய நிலையில் உயர்த்த வேண்டும். கைகளை நெற்றிக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தநிலையில் இருந்து, சற்று தலையையும், முன் உடலையும் கால்களை நோக்கி உயர்த்த வேண்டும். இப்படி 10 முறை செய்ய வேண்டும்.
இதனால், வயிற்றுத் தசைகள் உறுதியடைந்து அழகிய வடிவம் பெறும்.
ஸ்டாண்டிங் சைட் லெக் ரெய்ஸ்
(standing side
leg raise)

ஒரு நாற்காலி அல்லது சுவருக்குமுன் நின்றுகொள்ளுங்கள். வலதுகாலை சற்றுப் பக்கவாட்டில் உயர்த்த வேண்டும். பிறகு, இயல்புநிலைக்குத் திரும்பி, இடது காலில் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். இதேபோன்று 12 முதல் 15 முறை செய்ய வேண்டும். இதனால், தொடைத் தசை வலுப்பெறும்..
மெடிசின் பால் டுவிஸ்ட் (medicine ball twist):

இந்தப் பயிற்சிக்காக மெடிசின் பால் என்ற பிரத்யேகப் பந்து தேவை. பல்வேறு எடைகளில் இந்த பந்துகள் கிடைக்கின்றன. முதலில் கால்களைத் தோள்பட்டை அளவுக்கு அகற்றிய நிலையில் நிற்க வேண்டும். இருகைகளாலும் மெடிசின் பந்தை பிடித்துக்கொள்ள வேண்டும். இடுப்பு நேராக இருக்கும்படி வைத்துக்கொண்டு, மெதுவாக மேல்உடலை வலதுபக்கமாக 45 டிகிரிக்குத் திருப்ப வேண்டும். இந்த நிலையில், உங்கள் கால்மூட்டுகள் திரும்பக் கூடாது. பின்னர் பழைய நிலைக்குத் திரும்பி, இடது பக்கமும் இதேபோல் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் இடுப்புப் பகுதி வலுவடையும்.
ஸ்விஸ் பால் க்ரஞ்ச்
(swiss ball crunch):

சுவிஸ் பந்தின் மேல் படுக்க வேண்டும். கைகளை நெற்றியின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். கால்களை நன்றாகத் தரையில் ஊன்றிக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் இருந்து வயிற்றுப் பகுதியை இறுக்கமாக்கி (டைட் செய்து) மேல்உடலை சற்று மேலே உயர்த்த வேண்டும். சில நொடிகளுக்குப் பிறகு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். வயிற்றுப் பகுதிக்கான பயிற்சி இது.
கூல் டவுன் பயிற்சிகள்:

பயிற்சிகள் அனைத்தும் முடிந்ததும் அப்படியே ஓய்வெடுக்கக்கூடாது. உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வு நிலைக்குக் கொண்டுவந்த பிறகே ஓய்வெடுக்க வேண்டும். அப்படி இல்லாமல், உடனடியாகவே பிற வேலைகளைச் செய்யத் தொடங்குவது தவறு.
இதற்காகப் பெரிதாக எதுவும் மெனக்கிடத் தேவை இல்லை. பயிற்சிகள் முடிந்ததும் சில நிமிடங்கள் பயிற்சி செய்த இடத்தைச் சுற்றி வரலாம். வலது கையைத் தலைக்கு மேல் உயர்த்தி காதைத் தொடும்படி கொண்டுவரலாம். இடது கையை வலது கையின் முட்டியைத் தொடும்படி வைத்து ஓய்வு அளிக்கலாம். இதனால், தீவிரமாக இருக்கும் இதயத் துடிப்பும், ரத்த ஓட்டமும் மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பும்.
உடற்பயிற்சி பற்றிய உரமான தகவல்கள்
 பயிற்சியாளரின் உதவியுடன் முறையாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலத்தைச் சேர்க்குமே தவிர, பாதிப்பைத் தராது. தொடைப் பகுதிக்காகச் செய்யப்படும் பயிற்சிகள் கடினமானவை. அதனால், சிலர் கடினமான தசைப்பயிற்சிகளை விரும்ப மாட்டார்கள். அது தவறு.
 சிலர் இடுப்புக்கு மேல்பகுதி பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டு, தொடைப்பயிற்சியை வேண்டாம் என்பார்கள். இதன் மூலம் வலுவான தசைகளைக் கொண்ட, இடுப்புக்கு மேல்பகுதியை தாங்கும் சக்தி கால்களுக்கும், தொடைகளுக்கும் இல்லாமல்போகும். குச்சி போன்ற தோற்றத்தை அளிக்கும். இதுவும் முற்றிலும் தவறானது.
 சிலர் ஆர்ம்ஸ் மட்டும் வலுவாக இருந்தால்போதும் என நினைத்து, அதற்கான பயிற்சிகளை மட்டுமே செய்வார்கள். இந்த அணுகுமுறையும் தவறானது. ஆர்ம்ஸ்க்கு மட்டும் பயிற்சிகள் செய்து மற்ற தசைகளுக்குப் பயிற்சிகளைச் செய்யாமல்விட்டால் அது சீரற்ற உடல் தோற்றத்தைத் தரும். எனவே எல்லாத் தசைகளுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டியது அவசியம்.
 பாடிபில்டர்களுக்கான பயிற்சிகள் இது என எதுவுமே இல்லை. எல்லாப் பயிற்சிகளையும் ஆண், பெண் இருபாலரும் செய்யலாம். ஒரு பாலினத்தினருக்கு மட்டும் எனத் தனியாக எந்தப் பயிற்சியும் இல்லை.
 உடலின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொழுப்பு இருக்கிறது என்று அதற்குரிய பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டாலும், கொழுப்பைக் குறைத்துவிட முடியாது. மொத்த உடலுக்குமான பயிற்சிகள் செய்யும்போதுதான், உடலில் உள்ள மொத்த கொழுப்பும் கரையும்.
 ஜிம்முக்கு செல்லும் முன்பு சுத்தமாகச் சாப்பிடாமல் இருக்கவும் கூடாது. வயிறுமுட்ட சாப்பிடவும் கூடாது. நாம் எந்தப் பயிற்சிகளைச் செய்யப்போகிறோம், அதற்கு எந்த அளவுக்கு எரிபொருள் தேவை என்பதை அறிந்துகொண்டு, எடையைக் குறைக்கப்போகிறோமா, அதிகரிக்கப்போகிறோமா என்பதையும் கருத்தில்கொண்டு அதற்கேற்ப உணவுகளை உட்கொண்டுவிட்டு, ஜிம்முக்குச் செல்ல வேண்டும்.
 இந்த நேரத்தில்தான் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த நேரமும் பயிற்சிகள் செய்யலாம்.
 பயிற்சிகளை ஆரம்பிக்கும் முன்னர் சாப்பிடுவதைபோல பயிற்சி முடிந்த பிறகும், நீங்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகளின் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு உணவுகளை உட்கொள்ளலாம். அவை புரதச் சத்து நிறைந்த உணவாக இருத்தல் சிறப்பு.
தவறான கருத்துக்களை தவிர்ப்போம்
 உடற்பயிற்சிகளைச் செய்வதால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும் என ஒரு மாயை இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. முறையற்ற பயிற்சிகளால் எலும்புகளில் உட்காயம் எற்படலாம். முறையாக செய்யும் பயிற்சிகள் உயரத்தை எந்த வகையிலும் பாதிக்காது. உயரத்தை நிர்ணயிப்பது உங்கள் மரபணுக்கள்தான்.
 பெண்கள், அனைத்து வகையான பயிற்சிகளையும் செய்தால் ஆண்களைப்போல தசை வளர்ச்சி பெறுவார்கள் என்பது தவறு. இன்னும் சொல்லப்போனால், முறையான பயிற்சியாளர் இருந்தால் பெண்கள் கருவுற்ற நிலையிலும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
 உடற்பயிற்சி செய்தால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம். ஆணுறுப்பும் ஒரு தசைதான். முறையான உடற்பயிற்சிகளால் ஆணுறுப்பிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து வலுப்பெறுமே தவிர, பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை. மருத்துவரின் அனுமதி இன்றி வரம்புமீறி ஹார்மோன் மருந்துகள் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். உலகப் புகழ் உடற்கட்டழகன் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேகருக்கு நான்கு குழந்தைகள். தீவிர எடைப்பயிற்சியில் ஈடுபடுபவர், தங்களின் பயிற்சியாளர் மற்றும் உணவு ஆலோசகரின் அனுமதியைப் பெற்று தரமான நிறுவனங்களில் இருந்து வரும் சிறப்பு உணவுகளைத் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.
 எந்த சிறப்பு உணவைப் பயன்படுத்துவதற்கு முன்பும் அது உங்கள் உடலுக்கு ஏற்றதா, இலக்கை அடைய சரியான தேர்வா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.உடற்பயிற்சிகள் செய்தால் முடி உதிரும் என்பதும் தவறான கருத்து.
 பயிற்சிகள் செய்யும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என சிலர் நினைப்பார்கள். அது தவறு. பயிற்சிகள் செய்யும்போது நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். அதைச் சமன்படுத்த போதுமான அளவில் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். குளிர்ந்த நீர் மட்டும் குடிக்கக் கூடாது. இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.
 'வியர்த்தால்தான் கொழுப்பு குறையும், ஃபேன், ஏ.சி எல்லாம் வேணாம்ப்பா’ என சிலர் வியர்க்க வியர்க்கப் பயிற்சிகளைச் செய்வார்கள். அது தவறு. பயிற்சிகளை மேற்கொள்ளும் இடம் நல்ல காற்றோட்ட வசதியுடன்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம் பிடரிப் பகுதியில் வியர்வை சேராமல் ஒரு துணிகொண்டு அடிக்கடி துடைத்துக்கொள்வது நல்லது.
- பா.பிரவீன்குமார், உ.அருண்குமார், படங்கள்: எம்.உசேன்
மாடல்கள்: 'தம்பி’ பார்த்தசாரதி, வினோத், கலைச்செல்வன், தீபன், சசிகுமார், வித்யா முரளி, பாண்டியன்
இடம்: பீனிக்ஸ் பிட்னெஸ் ஸ்டூடியோ, சாந்தோம்.
Previous Article
Next Article

Friday, December 28, 2012

அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்!!

அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்!!

இரைப்பையும், சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம்.

செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.

குடல் புண் தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

செய்ய வேண்டியவைகள்: குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், அதிக தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம்.

யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும்.

முறையாக இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும். வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும். மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது.

குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடும்.


Monday, May 30, 2011

வெளிநாட்டில் வாழ்க்கை.........




வெளிநாட்டில் வாழ்க்கை சொகுசாய் இருப்பது போல் தோன்றும்.

ஆனால் ஓர் இழப்போ துக்கமோ வரும் வேளையில் சேர்ந்து அழ ஆளில்லாமல் துவளும்போது தெரியும் வெளிநாட்டில் வாழ்வதில் உள்ள வலி.

நான் இந்த வலியை உணர்ந்தும் இருக்கிறேன், ஆனால் தெளிவாக இந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டு வர முயன்றதில்லை.

அதை கீதா ரவிச்சந்திரன் என்பவர் தனது இழப்பு என்கிற பதிவில் செய்திருக்கிறார்.



இத்தகைய இழப்புக்கள் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகளை யாரிடம் சொல்லி புரிய வைக்க முடியும்?

நாம் நேரில் செல்லவில்லை என்ற காரணத்தினால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அர்த்தமில்லை. மனித இழப்புக்களுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவது எவ்வளவு தூரம் ஆறுதல் அளிக்கும்?


Monday, May 16, 2011

கம்ப்யூட்டர் செய்திகள்........

கேள்வி: அலுவலகக் கம்ப்யூட்டரில் சில பெர்சனல் பைல்களை, ஆடியோ, வீடியோ பைல்களைச் சில வாரங்களுக்கு சேவ் செய்து வைத்திட விரும்புகிறேன். இவற்றை மற்றவர்களின் கண்களில் பயன்படாமல் பாதுகாப்பது எப்படி? விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 3 யுடன் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ளது.


-பெயர் தராத வாசகர், திருப்பூர்.

பதில்: நீங்கள் பெயர் தரவில்லை என்றாலும், இந்த கேள்வி பல வகைகளில் கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வந்துள்ளன. எனவே பதில் அளிக்கிறேன். பைல்களை மறைத்து வைக்க சில தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் பாதுகாப்பானவை என்று 100% சொல்ல முடியாது. எனவே விண்டோஸ் சிஸ்டம் தரும் உதவியைப் பார்க்கலாம். விண்டோஸ் (டாஸ்) கட்டளைகளில் Attrib என்ற கட்டளை இதற்கு உதவும். Attrib என்பது ஒரு பைலுக்கு நாம் தரும் பண்புகளைக் குறிக்கும். இவை Read only, Hidden and System attributes என வகைப்படும்.

முதலில் கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட் ரேட்டராக லாக் இன் செய்து கொள்ளுங்கள். மறைக்க வேண்டிய பைல்களை எல்லாம் ஒரு போல்டரில் போட்டு வைக்கவும். அது E: ட்ரைவில் Personal என்ற பெயரில் இருக்கட்டும். எந்த பெயரையும் தரலாம். பின் Start பட்டன் அழுத்தி ரன் பாக்ஸில் CMDஎன டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி (command prompt)கிடைக்கும். இங்கு நீங்கள் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய மறைத்து வைத்திட வேண்டும் என்று திட்டமிடுகின்ற போல்டரின் பெயரை அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். இங்குள்ள எடுத்துக் காட்டின்படி அந்த கட்டளைச் சொற்கள் “attrib +s +h E:\Personal” என இருக்க வேண்டும். (மேற்கோள் குறிகள் டைப் செய்யப்படக் கூடாது) இந்த கட்டளை உங்கள் Data போல்டரை உ டிரைவில் மறைத்து வைத்திடும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம். இவ்வாறு மறைத்து வைத்திருப்பதை “Show hidden files and folders” என்ற கட்டளை கொடுத்தெல்லாம் பார்க்க முடியாது. இதனைப் பின்னர் வேண்டும் என்று எண்ணுகையில்“attrib s h D:\Data” , எனக் கட்டளை கொடுக்க வேண்டும். அப்போது இந்த போல்டர் காட்டப்படும்.



கேள்வி: வை-பி இயக்கம் குறித்து விளக்கம் தரவும். ஒரே மாதிரியான சாதனங்களைத் தான் இந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இணைக்க முடியுமா? வெவ்வேறு வகையான சாதனங்களையும் இணைக்க முடியும் என்றால் வழி என்ன?

-எஸ். சம்சுதீன், கோயம்புத்தூர்.

பதில்: இதற்கான பதிலை முன்பு ஒருமுறை கம்ப்யூட்டர் மலரில் தந்துள்ளேன். இருப்பினும் தாங்கள் கூடுதலாகக் கேட்ட சில விஷயங்களையும் இணைத்து இங்கே விளக்குகிறேன்.

வை-பி (WiFi– Wireless Fidelity) என்பது ஒரு வகையான நெட்வொர்க். தொழில் நுட்ப ரீதியாகச் சொல்வ தென்றால் இதை 802.11 நெட்வொர்க் என அழைப்பார்கள். இந்த நெட்வொர்க்கில் பல டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும். கம்ப்யூட்டர்கள், டிஜிட்டல் கேமராக்கள், மியூசிக் பிளேயர்கள், மொபைல் போன்கள் ஏன் சில இடங்களில் டிவிக்கள் கூட இதில் இயங்கும். எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டர் வை-பி யில் இயங்கக் கூடியது என்றால் வை-பி நெட்வொர்க் இயங்கும் இடத்தில், இதனை ஹாட் ஸ்பாட் என அழைப்பார் கள், உங்களால் இன்டர்நெட்டில் நுழைந்து இயங்க முடியும். இத்தகைய ஹாட் ஸ்பாட்கள் இன்று விமான நிலையங்கள், காபி ஷாப்கள், இரயில்வே ஸ்டேஷன்கள் போன்ற இடங்களில் உள்ளன. பொதுமக்களுக்கு இந்த இடங்களில் வை-பி இணைப்பு இலவசமாகவே கிடைக்கிறது. இந்த தொழில் நுட்பம் பலர் ஒருவருக்கொருவர் தங்களை இணைத்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது. WiFi எனப்படும் இந்த சொல் தொடர் WiFi Alliance என்ற நிறுவனத்தால் நமக்குக் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து பலவகை டிஜிட்டல் சாதனங்களை வை-பி இணைவு பெற்றது எனச் சான்றளித்து வருகிறது. அதாவது இந்த சான்றிதழ் பெற்ற எந்த ஒரு சாதனமும் அ தேபோல் சான்றிதழ் பெற்ற இன்னொரு சாதனத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக நீங்கள் எச்.பி. நிறுவனத்திடம் இருந்து வை-பி இணைவு தன்மையுடன் கூடிய லேப் டாப் வாங்கியிருக்கலாம். சோனியிடமிருந்து இதே தன்மையுடன் கூடிய டிஜிட்டல் கேமரா வாங்கியிருக் கலாம். இந்த இரண்டும் வை-பி நெட்வொர்க் இயங்கும் இடத்தில் எந்த வயர் தொடர்பும் இன்றி இணைப்பு பெற்று இயங்கும்.



கேள்வி: பயர் வால் பாதுகாப்பு கம்ப்யூட்டரில் உள்ளது. ஆனால் பல வேளைகளில், இதனால், செயல்படுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே வேகமாகச் செயல்பட வேண்டும் என எண்ணுகையில் இதன் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்த முடியுமா? அதற்கான செட்டிங்ஸ் என்ன?

-சே. அன்புக்குமார், மதுரை.

பதில்: பயர்வால் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் வேகத்தை மட்டுப் படுத்துகிறது என்று நீங்கள் எண்ணினால் அதன் இயக்கத்தினை தேவையற்ற போது நிறுத்தி வைக்கலாம்; பின் தேவைப்படும்போது இயக்கலாம். அதற்கான செட்டிங்ஸ் இதோ.

1. Start மெனு சென்று Control Panel செல்லவும்.

2. பின் Network Connections என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

3. பாப் அப் ஆகும் விண்டோவில் Local Area Connection என்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Properties டேப் மீது கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டேப்களில் Properties டேப் தேர்ந்தெடுத்து பின் Advanced Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இனி பயர்வால் தேவை என்றால் “Protect my computer and network by limiting or preventing access to this computer from the Internet’ என்பதில் செக் செய்திடவும். பயர்வால் தேவை இல்லை என்றால் இந்த டிக் மார்க்கை எடுத்துவிடவும். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

5. நீங்கள் விண்டோஸ் பயர்வால் பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள விண்டோஸ் பயர்வால் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் On (Recommended) என்பதனைத் தேர்ந் தெடுக்கவும். பயர்வால் இயக்கம் தேவை இல்லை என்றால் Off (Not Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்







விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள் அனைவருமே ஏதாவது எர்ரர் செய்தியினை, நாள்தோறும் சந்தித்திருப் பார்கள். விண்டோஸ் இயக்கத்தில் எங்கு பிரச்னை உள்ளது என்று இந்த செய்திகள் நமக்குக் காட்டுகின்றன. சற்று விபரம் புரிந்தவர்கள் அதனைப் படித்து புரிந்து அதற்கேற்ற வகையில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள் கிறார்கள். பலர் இங்கே எர்ரர் இருக்கின்றது தெரிந்து என்ன செய்ய? இது போல செய்திகள் வராமல் இருந்தாலே நல்லது என்று நினைக் கிறார்கள். அவர்களுக்கான தகவல் இது. இது போன்ற செய்திகள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு களைப் பார்க்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவில் My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.

2.அடுத்து மெனுவில் System Properties விண்டோ திறப்பதற்காக Properties பிரிவில் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இந்த அட்வான்ஸ்டு டேப்பில் கிடைக்கும் விண்டோவில் Error Reporting என ஒரு பட்டன் கிடைக்கும்.

5.இப்போது எர்ரர் ரிபோர்ட்டிங் விண்டோ கிடைக்கும். பின் இதில் Disable Error Reporting என்று இருப்பதனை செலக்ட் செய்திடவும். இதனைக் கிளிக் செய்தால் அனைத்து எர்ரர் செய்திகளும் காட்டப்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் உள்ள எர்ரர் செய்திகள் காட்டப்படும். எதுவும் வேண்டாமப்பா! ஆளை விடுங்க!! என்று எண்ணுபவரா நீங்கள். அப்படி என்றால் But notify me when critical errors occur என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள்.

6. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி எர்ரர் செய்திகள் நீங்கள் செட் செய்தபடி மட்டுமே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் இருக்கும்







கர்சர் பெரிதாக வேண்டுமா?

உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் கர்சர் பெரியதாகவும், உங்களுடைய கம்ப்யூட்டரில் சிறியதாகவும் இருக்கிறதே என்று உங்களுக்குக் கவலையாக உள்ளதா? சற்றுப் பெரியதாக கர்சர் இருந்தால் தேவலாம் என்று எண்ணுகிறீர்களா? இந்த ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஸ்டார்ட் பட்டனை முதலில் அழுத்தி அதிலிருந்து மேலெழும் கட்டத்தில் செட்டிங்ஸ் மற்றும் கண்ட்ரோல் பேனல் (Settings, Control Panel.) செல்லவும். அதில் மவுஸ் ஐகான் (Mouse icon) என்றிருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள பாயிண்ட்டர்ஸ் (Pointers) என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு ட்ராப் பாக்ஸ் கிடைக்கும். அதன் தலைப்பாக “Scheme.” என்ற சொல் இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் இயக்கும் விண்டோஸ் தொகுப்பிற்கேற்ற வகையில் Windows Standard (extra large) (system scheme) அல்லது Windows Standard (large) (system scheme) என ஒன்று இருக்கும். இதில் எந்த திட்டம் உங்கள் கணிப்பொறியில் இருந்தாலும், அது வழக்கமான கர்சரைக் காட்டிலும் சற்றுப் பெரிய கர்சரையே கொடுக்கும். மேலும் பல வகையான கர்சர்களை அங்கு பார்க்கலாம். தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி கர்சர் நீங்கள் தேர்ந்தெடுத்த அளவில், வகையில், தோற்றத்தில் இருப்பதனைக் காணலாம்.



கண்ட்ரோல் + இஸட்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் தாங்கள் அவசரத்தில் செய்த தவறை உடனடியாக நிவர்த்தி செய்திட, அதாவது செய்த தவறை ஒரு விளைவும் இல்லாமல் ஆக்கிட கண்ட்ரோல் + இஸட் கீ சேர்க்கையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதனைப் பெரும்பாலும் வேர்ட் தொகுப்பில் பயன்படுத்துபவர்களே அதிகம். அதில் மட்டுமே இந்த கீகள் சேர்க்கை பயன்படும் எனப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த கீ சேர்க்கை விண்டோஸின் அனைத்து பயன்பாட்டுத் தொகுப்புகளிலும் செயல்படும். எடுத்துக் காட்டாக, டெஸ்க் டாப் திரையில் ஐகான் ஒன்றைப் பதிக்கிறீர்கள். அதனை வைத்தது தவறு என்று அடுத்த கணம் எண்ணினால், உடனே கண்ட்ரோல் + இஸட் கீகளை அழுத்துங்கள். ஒட்டி வைத்த ஐகான் மறைந்து போகும். விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரிலும் இது செயல்படும். எடுத்துக்காட்டாக பைல் ஒன்றை அழிக்கிறீர்கள். பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும் என , அதனை மீட்க எண்ணினால் ரீசைக்கிள் பின் தேடிப் போக வேண்டாம். கண்ட்ரோல் + இஸட் கீகளை அழுத்தவும். பைல் உடனே கிடைக்கும். ஆனால் நீங்கள் பைலை அழிக்கும்போது, ரீசைக்கிள் பின் தொட்டிக்கு அது போகக் கூடாது என எண்ணி ஷிப்ட் கீயைச் சேர்த்து அழுத்தியிருந்தால் கண்ட்ரோல் +இஸட் கீயை அழுத்தினாலும் பைல் கிடைக்காது.



டூல் பார் பட்டன்கள்

உங்கள் டூல் பாரில் உள்ள பட்டன்கள் சிறியதாக உள்ளதே என்று கவலையாக உள்ளதா? அவற்றைப் பெரியதாக வைத்து இயக்க விருப்பமா? கீழே குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுங்கள். டூல்ஸ் (Tools) மெனு செல்லவும். அங்கு (Customize) என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ஏதேனும் டூல்பாரில் வலதுபுறமாக மவுஸைக் கிளிக் செய்திடவும். அதன்பின் வரும் பிரிவுகளில் (Customize) ஐத் தேர்ந்தெடுக் கவும். பின் கிடைக்கும் விண்டோவில் (Options tab) பிரிவில் பார்த்தால் அங்கு (Large Icons) என்ற சொற்களுக்கு எதிரே ஒரு சிறிய கட்டம் கிடைக்கும். அதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். உடனே பட்டன்கள் அனைத்தும் பெரியதாக இருக்கும். டெக்ஸ்ட் அப்படியே தான் இருக்கும். இந்த பட்டன் அளவு உங்களுக்குப் பிடித்தால் குளோஸ் (Close) பட்டனைக் கிளிக் செய்திடவும். இனி பட்டன் புதிய அளவிலேயே இனி இருக்கும். இது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். மீண்டும் பழைய அளவிலேயே இருக்கும். இதில் ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த செயல்பாட்டினை எந்த விண்டோஸ் தொகுப்பில் மேற்கொண்டாலும், அது அனைத்து விண்டோஸ் தொகுப்பிலும் எதிரொலிக்கும். எடுத்துக்காட்டாக வேர்ட் தொகுப்பில் மேற்கொண்டாலும், பிற எக்ஸெல் போன்ற ஆபீஸ் தொகுப்புகளிலும் இந்த பெரிய பட்டன்கள் கிடைக்கும்.











Thursday, May 5, 2011

ரூபம்.(சிறுகதை)








இவன் வீட்டின் வாசற்படியை அடைந்தபோது, வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ஷே உரையாற்றிக்கொண்டு இருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு, தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான்.



'உங்களைக் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் வாழவைப்பது, என்னுடைய பொறுப்பு. நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன்’ என ராஜபக்ஷே தமிழில் பேசிக்கொண்டு இருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்ஷேவின் முகம் நிறைத்து இருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும், நவீனமாகவும், துல்லியமான ஒலி அமைப்புடனும், அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை, சவூதியில் இருந்து அனுப்பி இருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டிக்கிடந்தது





இவன் சிறுவனாக இருந்தபோது, அம்மாவிடம் ஒரு தொலைக்காட்சி வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்து இருக்கிறான். இறந்துபோன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களுக்கு வருமானம். அந்தப் பணத்தில்தான், அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினி இல்லாமல், பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி இருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி பார்க்க வருவார்கள். அக்காவுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வம் இல்லை. ஆனால், இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால், அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண் கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா 'வீட்ட போகலாமா?’ என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் ரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேநீரும் அவித்த பனங் கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால், தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான்.



இவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத் தாளை ஒட்டி, நடுவே கத்தரித்து, பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக்கொண்டு இருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும், தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கே இருந்த 'மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, இவன் வசியத்தில் விழுந்தவன்போல் இருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதே இல்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை, ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டு இருப்பதுபோல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சில சமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருப்பான். ஒலி மட்டும் வந்தாலும், படக் காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும்போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண் இமைக்காமல் பல நிமிடங்கள் பார்த்துக்கொண்டு இருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றுதான் இவனுக்குத் தேவையானது. அதில் இருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும்போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான்.



பக்கத்து வீட்டுக்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்து இருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்து இருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத் தெரு இருந்தது. அந்த நெடுஞ்சாலையில் ராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். ராணுவ வாகனங்கள் தூரத்தில் வரும் ஒலி கேட்ட உடனேயே, கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையில் இருந்து விலகி ஓடிவிடுவார்கள். ராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும்போது, சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வது இல்லை. அது வெறுமனே எச்சரிக்கைவெடி யாகத்தான் இருக்கும். ராணுவம் ஒரு போதும் நெடுஞ்சாலையில் இருந்து விலகி, கிராமத்துக்குள் நுழைந்தது இல்லை.



கடைத் தெரு மூடிக்கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டுக்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கி இருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால், இப்போது இவனை நாற்காலியில் உட்காரு மாறு வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேநீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள்தான். அவசரத்துக்கு, சீனி, தேயிலை என இரு பக்கமும் கைமாற்றும் நடப்பது உண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக்கொள்வது என்றால், கூச்சமாக இருக்கும். தொலைக்காட்சி விஷயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான்.



தீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போனபோது, உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா, ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன், கையில் இருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா, இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு, ஓர் அழகிய துணி உறையைத் தைக்கச் செய்து, அதனைக்கொண்டு தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப் பைக்குள் இப்போது தீப்பெட்டி கள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக் காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக் கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்து இருந்தான்.



பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்து இருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா 10 தடவைகள் கூப்பிட்ட பின்பு, குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு வந்து, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்துவிடுவான். இதனால் ஒன்றும் இவனது படிப்பு பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் இவன் முன்னணி மாணவனாகவே இருந்தான். அக்காவிடம் ஒருநாள் தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி, 'எங்கிட வாத்திமாரவிட இது பிரயோசனமானது’ என்றான்.



பல்கலைக்கழக அனுமதி, சொற்ப மதிப்பெண்களால் தவறிப்போனது. கொஞ்சம் மனம் சோர்ந்துபோனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும், அறையில் இருந்த விளக்கை அணைத்துவிட்டு, இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருப்பான். அம்மா அவ்வப்போது வந்து 'இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப்போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது.



இவனுக்கு 20 வயதானபோது அந்தக் கிராமத்துக்குள் ராணுவம் முதல் தடவையாக நுழைந்தது. ராணுவம் வரும் செய்தி கேட்டு, சனங்கள் வீடுகளில் இருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு, உயிர் தப்பச் சிதறி ஓடினார்கள். அக்கா, அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து, நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால், இவனும் அம்மாவும் நகரத்துக்குப் போவது என்று முடிவு எடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளுக்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக்கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று, நகரத்துக்குச் செல்லும் வாகனம் ஒன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றிவிட்டு, இவன் வாகனத்தை சைக்கிளில் பின் தொடர்ந்தான்.



நகரத்துக்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்தில் இருந்த உறவினரின் கடை ஒன்றுக்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு, நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். 4 மணி நேரப் பயணத்தில் 20 சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன், அங்கு இருந்து வயல் வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான்.



இரவாகிக்கொண்டு இருந்தாலும் காட்டின் மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையில் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது.



இவன் காட்டுக்குள்ளால் நடந்து வந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ, இவனுக்குக் 'கானகன்’ என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை 'யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால், அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்துக்குள் கதை இருந்தது.



போரிடவே பிறந்தவன்போல இவன் இருந்தான். இவனது இடது கண்ணுக்குத் திட்டமிடல் என்றும், வலது கண்ணுக்குத் துணிச்சல் என்றும் பெயர். இவனது இடது காலுக்கு நிதானம் என்றும், வலது காலுக்கு வேகம் என்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்து இருக்கிறான். இவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும், தனி ஆளாகப் போராடித் தளம் திரும்பி இருக்கிறான். கடைசியில், விமானக் குண்டு வீச்சு ஒன்றில் வேகம் எனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது.



ஊன்றுகோலின் உதவியுடன் இவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவுக்கோ அக்காவுக்கோ தான் கால் இழந்த செய்தி தெரியா மல் பார்த்துக்கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோதுகூட இவன் அம்மாவைப் பார்க்கப் போக வில்லை. இவன் இருக்கும் இடமும் அம்மாவுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான்.



ஒரு வருடத்துக்குப் பின்பு, புலிகளின் தொலைக்காட்சியில்தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்ததுபோல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப் பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.



புலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராக இருந்தான். அவற்றில் 'விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணி நேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சி யில் தொகுத்து வழங்குவான். பாடல்களுக்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன.



சாந்தன் ஒருமுறை இவனிடம் 'என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார்.



வழித் தெருவில் இவனை மக்கள் காணும்போது இவனைச் சூழ்ந்துகொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும்போது உட்கார்ந்துகொண்டு இருப்பதால், இவனுக்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது, அவர்களது கண்கள் இருண்டுபோயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி முகர்ந்தார்கள். இழந்துபோன குழந்தைகள் அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கலாம்.



இவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். 'இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிடப் பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என இவனது உதடுகள் முணுமுணுக்கும்.



சமாதானக் காலத்தில் வன்னியில் இருந்து இசைக் குழு ஒன்று அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது, நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன்தான் அவசியம் வர வேண்டும் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்டபோது, இவனுக்கு அருகில் இருந்த பாடகன் 'கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா?’ என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில், பாடகன், 'குடிக்கிறதில ஒண்டுமில்ல... ஆனால்,குரலுக் குக் கூடாதெல்லா...’ என முனகிவிட்டு, இருக்கையில் சாய்ந்துகொண்டான்.



அய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டுக்குச் சாப்பிட வர வேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக, இவனைத் தங்களது வீட்டுக்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளில் இவன் மேடைகளில் தோன்றும்போது எல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரல் இட்டார்கள்.







அங்கு இருந்து திரும்பும்போது விலை உயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின்போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையில் எடுத்து, 'இதை எனக்குத் தருவாயா?’ என அதிகாரி கேட்டபோது, அதை அதிகாரியே எடுத்துக்கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான்.



முகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். இவனுக்கு என்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரீஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸ்ஸில் ஓர் அட்டையும் கிடைத்து இருந்தன. பாரீஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டு இருந்தது. அவற்றில் எழுதப்பட்டு இருந்தவற்றுக்காக அல்லாமல், அந்த அட்டைகளின் அழகுக்காக அவற்றைக் கிழித்துப் போட மனம் அற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான்.



முகாமில் இருந்த தோழர்களுக்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான்.



நந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரண் அடையும் முடிவை எடுத்தபோது, இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவும் இல்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும், அணி சிதறி மக்களுக்குள் கரைந்துபோனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பம் இல்லை. அதை மடியில் செருகிக்கொண்டு, நந்திக் கடல் ஓரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து ராணுவத் தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் செல்ல, ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக, ஒரு படகில் 20 பேர் வரை தயாராக இருந்தார்கள். ராணுவத்திடம் இருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும்போது படகு புறப்படுவதாகத் திட்டம்.



இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்துவிட்டு, ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்று இருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான்.



படகு கரையை அடையும்போதுதான், கரையிலேயே வரிசையாக ராணுவ வீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக்கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும், 'ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்!’ என்ற உத்தரவு வந்தது. இவர்கள், 'அய்யா, நாங்கள் பொதுமக்கள்’ எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது, கரையில் இருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல் நீர் துடித்துச் சிதறியது.



ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு, அவர்களது உடல்களிலே வெடி பொருட்கள் கட்டப்பட்டு இருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோ மீற்றர் நடத்திச் சென்ற ராணுவம், அங்கு இருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர் களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது.



இவன் தலையைக் குனிந்தவாறே இருந் தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டு இருந்தது. குழந்தைகள் தாகத்தாலும், பசியாலும், வெப்பத்தாலும் அழுதபோது, அவர்களது தாய்மார்களால் 'பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன.



வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது, இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர, இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்து இருந்தபோது, இவனது தோளைத் தொட்டு ஒரு ரகசியக் குரல் 'கானகன்’ என அழைத்தது.



சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது, ஒரு ராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக்கொண்டு நின்றான். தரையில்கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே, மறு கையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு, இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான்.



தகரங்களால் அடைக்கப்பட்டு இருந்த அந்தச் சிறிய அறைக்குள்தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்டபோது, ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். 'உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலன் இல்லை என்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்த வரை உண்மைகளைப் பேசிவிடாமல் இருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற்போயின.



விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டு இருந்தது. சுற்றி நின்ற ராணுவத்தினர் சிலர், இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறு இருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோது எல்லாம், ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. 'கானகன்தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்’ என ஓர் அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும், படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன.



தரையோடு தரையாக நகர முடியாதுகிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோலச் சுற்றி நின்று, தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது கேள்விகளுக்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்காரவைத்துவிட்டு, அசையவிடாமல் பிடித்துக்கொண்டே, இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியில் இருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையை 'கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து, இவனது கையில் கொடுத்து, அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவதுபோல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத் துண்டு ரத்தம் வடிய... அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு போனது.



அடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலில் இருந்த ரத்தம் வாந்தியாக வெளியேறிக்கொண்டு இருந்தது. இவன் புனர் வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறே இருந்தான். இந்தப் புனர் வாழ்வு முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 200 சரண் அடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். நோயால் இறந்த ஆறு பேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக, புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். 200 என்ற எண்ணிக்கை குறையாமல் ராணுவத்தினர் பார்த்துக்கொண்டார்கள்.



இவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது. அவர்களில் ஒருவன் தனது ஆடைகளைக் கழற்றி வீசுவதிலேயே குறியாக இருந்தான். அதற்காக ராணுவத்தினரிடம் ஒவ்வொரு நாளும் உதைபட்டான். அவன் அங்கு இருந்து விடுதலையாவதற்காக நாடகம் போடுகிறான் என ராணுவ அதிகாரி சொன்னான்.



இவர்களில் தெரிவு செய்யப்பட்ட 50 பேர்களுக்குப் பயிற்சி அளிக்க ஒரு மன நல மருத்துவர் வந்தார். அவர் மனச் சோர்வில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என உரை யாற்றிக்கொண்டு இருக்கும்போதே இவன் குறுக்கிட்டு, 'இங்கிருந்து விடுதலையாகி வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சியாயிருப்போம் என நினைக்கிறேன்’ என்றான். மருத்துவர் எது சொன்னாலும் இவன் விட்டேற்றியாக அவரைத் தட்டிக் கழித்தான். கடைசியில் மருத்துவர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிட்டார். அடுத்த பயிற்சி வகுப்பை ராணுவத்தினருக்கு எடுக்கவிருப்பதால், முன்னாள் போராளிகளுக்கான முதல் நாள் பயிற்சி வகுப்பை இத்துடன் முடித்துக்கொள் ளலாம் என்று மருத்துவர் சொன்னார்.



சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து அங்கு இருந்து விடுதலையான முதலாவது அணியில் இவனும் இருந்தான். அந்த அணியில் அவயங்களை இழந்தவர்கள் மட்டுமே இருந்தனர். புதிய வேட்டியும் சட்டையும் ராணுவத்தினரால் வழங்கப்பட்டன. முகாமில் விழா நடத்தி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்னாள் போராளிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



இவனை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தார். அம்மாவின் முகம் முழுவதும் சிரிப்புத் தொற்றியிருந்தது.



அக்காவுக்குக் கல்யாணமாகி அவள் நகரத்தில் குடியிருந்தாள். இவ்வளவு நாட்களும் அம்மா, அக்காவுடனேயே தங்கியிருந்தாள். அம்மா, தன்னை அக்காவின் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்வதாக இவன் எண்ணினான். ஆனால், அம்மா இவனைக் கிராமத்து வீட்டுக்கு அழைத்து வந்தாள்.



வீடு உருக்குலைந்து இருந்தது. கதவுகளையும் நிலைகளையும்கூடத் திருடிச் சென்று இருந்தார்கள். வாசலுக்கும் ஜன்னலுக்கும் அம்மா துணியால் திரை செய்துபோட்டார். இவனது அறைக்குள் ஒரு மேசையும், நாற்காலியும், படுக்கையும் வாங்கிப் போட்டார். இவன் அந்த அறைக்குள்ளேயே அடைந்துகிடந்தான். வீட்டுக்குப் போனால், மகிழ்ச்சி உருவாகும் என மனநல மருத்துவரிடம் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்த்தான்.



கடைத் தெருவே மாறியிருந்தது. முன்பு இவன் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் 'மீனா கபே’, இப்போது 'லங்கா கபே’ ஆகியிருந்தது. அதை ராணுவத்தினர் நடத்திக்கொண்டு இருந்தனர். இப்போதும் அங்கே இடையறாது தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. இவன் தலையைக் கவிழ்ந்தவாறே அதைக் கடந்து சென்றான். கடைத் தெருவில் எல்லோருமே தன்னைப்போலவே தலையைக் குனிந்தவாறே நடந்துகொண்டு இருப்பதாக இவனுக்குத் தோன்றியது. தற்செயலாகச் சந்தித்த கண்களில் அச்சத்தை மட்டுமே இவன் பார்த்தான்.



அம்மா இவனுக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்காகப் பணம் திரட்டிக்கொண்டு இருந்தார். காலைப் பொருத்தி நான் எங்கே போகப் போகிறேன். அந்தப் பணத்தில் ஒரு தொலைக்காட்சி வாங்கினாலாவது, அறைக்குள் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கலாம் என நினைத்தான். ஆனால், அவ்வாறு கேட்பது அம்மாவைப் புண்படுத்தக்கூடும் என்பதால், இவன் வெறுமனே அறைக்குள் அடைந்துகிடந்தான். வாரம் ஒருமுறை ராணுவச் சாவடிக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மட்டுமே வெளியே போனான்.



அன்று மாலையில் பக்கத்து வீட்டில் இருந்து பாட்டுச் சத்தம் வந்துகொண்டு இருந்தது. மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக்கொள்வதே என மன நல மருத்துவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. கண்களை மூடிக்கொண்டு படுத்து இருந்தான். பொழுது பட்டதும் ஊன்று கோலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவன் பக்கத்து வீட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறிய போது, உள்ளே இருந்த தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ஷே உரையாற்றிக்கொண்டு இருந்தார். சற்று நேரத்தில் தொலைக்காட்சி திடீர் என நிறுத்தப்பட்டது.



வீட்டுக்காரர் வாசலுக்கு வந்து இவனைப் பார்த்தார். இவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னான். வீட்டுக்காரர் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவாறே, அவர்கள் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றார். இவன் கையை வாசற்படியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி எழுந்து சுவரில் சாய்த்துவைத்திருந்த ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு படி இறங்கும்போது, வீட்டுக்காரர், 'கானகன், நீ இஞ்ச வந்து போனால், ஆமியால எங்களுக்கும் பிரச்னை வரும்’ என்று முணுமுணுத்தது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.



வீதியில் நின்று சட்டைப் பையில் இருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்க முயன்றான். கை நடுங்கிக்கொண்டு இருந்தது. நான்காவது தீக்குச்சியிலேயே பற்றவைக்க முடிந்தது. இந்தப் பழக்கம் தடுப்பு முகாமில் இருந்தபோது வந்திருந்தது. அம்மா காலையில் ஒரு கட்டு பீடி வாங்கிக் கொடுப்பார்.



வாயில் பீடியை வைத்தவாறே நடந்தான். இவனது ரவி என்ற பெயரை வீட்டுக்காரர் மறந்து, இவனைக் கானகன் என அவர் அழைத்தது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பீடியை இழுத்துக்கொண்டே நடந்தான். விடுதலையாகி வந்து இவ்வளவு நாளாகியும், அக்காவோ, அத்தானோ, தன்னை இதுவரை வந்து பார்க்காதது திடீர் என இவனுக்கு உறைத்தது.



நடுநிசியில் அம்மா எழுந்து கை விளக்கை எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து, இவனது அறையை நோக்கிப் போனார். ஒவ்வொரு நாளும் அம்மா இவ்வாறு சென்று பார்ப்பார். இவன் தூங்கிக்கொண்டு இருப்பது அவருக்கு நிம்மதியாக இருக்கும்.



அம்மா இவனது அறையின் வாசலில் நின்று இவனது படுக்கை இருந்த திசையில் விளக்கைப் பிடித்தபோது, படுக்கை காலியாக இருந்தது.



அம்மா பதற்றத்துடன் அறையின் மூலை ஒன்றுக்கு வெளிச்சத்தைத் திருப்பினார். அங்கே அவன் சுவரோடு சாய்ந்து தரையில் ஆடாமல் அசையாமல், சிலைபோல உட்கார்ந்து இருந்தான். அம்மா, அவனது முகத்துக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது, அவனது கண்கள் மேசையையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்தார்.



அம்மா மேசைக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது, மேசையில் ஒரு தீப்பெட்டி நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அம்மா திடீர் என வெடித்துப் பெருங் குரலெடுத்து அழத் தொடங்கினார். இவன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து இருந்தான். இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டு இருந்தன!







Tuesday, April 26, 2011

எல்லாம் வெல்லும்.





பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா வது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்க மாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்தார். முந்தைய நாள் போரில் மிஞ்சிய புகை மணம் காற்றிலே நிறைந்துகிடந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அவர் முள்ளிவாய்க்காலில் இருந்ததை நினைத்துப் பார்த்தார். இத்தனை அழிவு இவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட்டது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது.







முள்ளிவாய்க்காலில் காலையில் எழும்பியதும் துர்க்காவின் கண்ணில் படுவது அகிலா என்ற சிறுமிதான். வழக்கம்போல் அரை மணி நேரம் யோகாசனம் செய்த பின்னர், மேஜர் சோதியாவின் படத்துக்கு மெழுகுத் திரி கொளுத்தி வணங்குவார். ஒரு சுற்று நடந்து கூடாரங்களைப் பார்வையிடுவார். சிலர் இன்னமும் தூக்கத்தில் இருப்பார்கள். சிலர் எழுந்து தேநீர் தயாரிப்பார்கள். அகிலாவுக்குக் குண்டு விழுந்து ஒரு கை போய்விட்டது. அதிலே கட்டுப் போட்டு இருந்தார்கள். அவள் ஒருவிதக் கவலையும் இல்லாமல், குனிந்து புற்களுக்கு இடையில் ஏதோ ஒரு பூச்சியைத் துரத்திக்கொண்டு இருந்தாள். துர்க்காவைக் கண்டதும் விறைப்பாக நின்று, 'துர்க்காக்கா’ என்று மகிழ்ச்சி பொங்கக் கத்தி, மிஞ்சி இருந்த இடது கையால் ஒரு சல்யூட் அடித்தாள். 'இங்கே நிற்கக் கூடாது. ஓடு ஓடு’ என்றார். 'எல்லாம் வெல்லும், அக்கா’ என்றாள் உற்சாகமாக. 'எல்லாம் வெல்லும்’ என்று துர்க்காவும் ஒரு சல்யூட் வைத்தார்.



அகிலா, நித்தியா, அபிராமி, சுகன்யா, கன்னிகா, குழலி எல்லோரும் காயம் பட்டவர்கள். கை இல்லாமலும், கால் இல்லாமலும், கண் போயும் கட்டுக்களோடு வாழப் பழகிய சிறுமியர். அவர்கள் போர் முனையில் தங்கக் கூடாது. மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை அங்கே இருக்க அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. குண்டு வீச்சில் பெற்றோரை இழந்தவர்கள். உறவு என்று சொல்ல ஒருவருமே இல்லை அவர்களுக்கு. நித்தியாவுக்கு இரண்டு கண்களிலும் கட்டுப் போட்டு இருந்தது. குண்டு வீச்சும், எறிகணையும், துப்பாக்கிச் சூடும் ஆறு மணித் தியாலங்கள் தொடர்ந்து நடந்து அப்போது தான் ஓய்வுக்கு வந்திருந்தது. தினம் இரண்டு மணி நேரம் ஜெனரேட்டர் போடப்பட்டு, அந்த நேரம் சனங்கள் அத்தியாவசியமான காரியங்களைச் செய்யப் பழகிக் கொண்டார்கள்.



சில வேளைகளில் துர்க்கா நினைப்பது உண்டு, குண்டுகள் விழும்போது நேராகப் பதுங்கு குழிகள் மேல் விழுந்தால் நல்லாஇருக்கும் என்று. ஒரு பிரச்னையும் இன்றி இறந்துபோகலாம். அந்தப் பதுங்கு குழியைச் சிறுமியர்தான் நிறைத்திருந்தனர். இரண்டு கைகள் போன மேனகாவும் அங்கேதான் இருந்தாள். ஒரு முறை கிபீர் இரைந்துகொண்டு தாழப் பறந்து வந்தது. மூன்று வயதுக் குழந்தைகூட அது கிபீர் விமானம் என்று சத்தத்தை வைத்தே சொல்லிவிடும். அதனுடைய வேகம் ஒலியின் வேகத்தைப்போல இரண்டு மடங்கு. விமானம் போன பின்னரே அதன் ஒலி வந்து சேரும். விமானத்தின் பேரிரைச்சலில் கத்திப் பேசினாலும், கேட்காது. சிறுமிகள் பதுங்கு குழிகளுக்குள் நீச்சல் குளத்துக்குள் குதிப்பதுபோலப் பாய்ந்துவிட்டார்கள். பக்கத்தில் குண்டு விழுந்து மண் எல்லாம் சரிந்து மூடிவிட்டது. ஆழமான குழி அது. நாலு பேர் அவசர அவசரமாகக் கிண்டியதில் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. அப்படியும் சுவர்ணலதா மூச்சுத் திணறி இறந்துவிட்டாள். எப்பவும் திருநீறு பூசி, பொட்டுவைத்து, இரட்டைப் பின்னலுடன் சிரித்தபடி இருக்கும் சிறுமி அவள். காலையில் எழுந்தவுடனேயே சீப்பைத் தூக்கிக்கொண்டு, 'அக்கா... அக்கா’ என்று யாராவது பெரிய பெண்ணைத் தேடித் திரிவாள், தலையை இழுத்துவிடச் சொல்லி.



தினம் மின்சாரம் வேலை செய்யும் இரண்டு மணி நேரத்தில் முக்கியமான செய்திகளை மக்களுக்காக ஒலிபரப்பினார்கள். வெளி நாடுகளுக்குச் செய்திகளும், தகவல்களும், படங்களும் அனுப்பப்பட்டன. பதுங்கு குழியில் காயம்பட்டு வேதனையோடு முனகிக்கொண்டு இருந்த குழந்தைகள், விஜய் நடித்து வெளிவந்த 'சிவகாசி’ படத்தை டி.வி-யில் பார்த்தார்கள். பசியையும் வேதனையையும் மறந்து, அவர்கள் படத்தில் ஆழ்ந்துபோய் இருந்ததைப் பார்த்தபோது, துர்க்காவுக்கு மனதைப் பிசைந்தது. எந்தத் தாய்மார் பெற்ற பிள்ளைகளோ... அவர்களுக்கே தாயின் முகம் மறந்துவிட்டது. அடுத்த நேர உணவு என்னவென்று தெரியாது. அது எங்கே இருந்து கிடைக்கும் என்பதும் தெரியாது. குண்டு எங்கே விழும், அப்போது யார் யார் மிஞ்சுவார்கள் என்பதும் தெரியாது. இரண்டு கைகளும் போய் மெலிந்து, இழுத்து இழுத்து மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் கன்னிகா சொல்கிறாள், 'அக்கா, தள்ளி நில்லுங்கோ, படத்தை மறைக்காமல்!’



துர்க்கா வானத்தை நிமிர்ந்து பார்த்தார். சூரியன் அன்றைய நாளைத் தயக்கத்துடன் துவங்கினான். மரங்கள் புகைமூட்டமாகத் தெரிந்தன. கால நிலை, பகல் மப்பாகவும், பின்நேரம் மழையாகவும் இருக்கும் என்று அவருக் குப் பட்டது. முழங்காலை மடித்து சப்பாத்துக் கயிற்றை இழுத்துக் கட்டினார். இடைப்பட்டியை மூன்றாவது ஓட்டை மட்டும் இறுக்கிய பின்னர் தொப்பியைத் தலை மேல் அணிந்தார். கைத் துப்பாக்கியை உறையினுள் செருகினார். 'ரெடியாக இரு’ என்று சொல்வதுபோல, செக்கண்டுக்கு 700 மீட்டர் வேகத்தில் சுடக்கூடிய ஷி97 யப்பான் துப்பாக்கியை ஆதரவாகத் தொட்டுத் தன் இருப்பை உணர்த்தினார்.



குறி சுட்டுத் திறனில் அவர் பல முறை பரிசு பெற்றவர். தீச் சுவாலை நடவடிக்கையின்போது வயிற்றிலே குண்டுபட்ட பிறகும் அந்தத் துப்பாக்கி அவரைக் கைவிடவில்லை. அந்த நிலையிலும் 1,500 மீட்டர் தூரத்தில் அவருடைய துப்பாக்கி பல தடவை குறி தப்பாமல் சுட்டது. இரண்டு வார காலமாக அரிசிக் கஞ்சியை மாத்திரம் சாப்பிட்டு வந்ததில், அவர் உடல் மெலிந்து போய் இருந்தது. ஆனால், வலிமை குன்றவில்லை. அண்ணாந்து பார்த்தபோது, ஒரு பறவையைக்கூடக் காண முடியவில்லை. ஒரு பறவையின் சத்தமாவது கேட்கிறதா என்று காது கூர்ந்து கேட்டார். போர் தொடங்குவதற்கு முன்னால் அந்த நேரம் எத்தனை பறவைகளின் ஒலி வானத்தை நிரப்பியிருக்கும்! எல்லாமே இடம் பெயர்ந்துவிட்டன என எண்ணினார். முதலில் இடம்பெயர்வது பறவைகள், பின்னர் மிருகங்கள், கடைசியில்தான் மனிதர்கள்.



அவரிடம் இருந்த நைக்கான் கேமராவினால் துர்க்கா நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளைப் படம் பிடித்திருந்தார். தன்னுடைய மடிக் கணினி யில் படங்களைச் சேமித்து, அவற்றைப்பற்றிய விவரமான குறிப்புகளையும் எழுதியிருந்தார். பறவைகளின் நிறங்கள், ஒலிகள், பழக்கவழக்கங் கள், உணவு என அவர் அவதானித்த அத்தனை தகவல்களையும் எழுதிப் பாதுகாத்தார். இந்தத் தகவல்களையும், படங்களையும், ஒலிகளையும், ஒரு நாளைக்கு காணொளித் தகடாக வெளியிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். அவ்வப் போது கம்ப்யூட்டரில் பதிந்துவைத்தவற்றை வெளிநாட்டுக்குப் பாதுகாப்புக்காக அனுப்பவும் அவர் தவறவில்லை.



அருள்மதி போராளியாக விருப்பப்பட்டு, ஒருநாள் தானாக வந்து அவர்களுடன் சேர்ந்தாள். அவளைப் பார்த்தபோது துர்க்காவுக்குச் சிரிப்பாக வந்தது. 20 வயது இருக்கும். உருண்டையாக இருந்தாள். உடம்பில் எந்தப் பாகத்தை எவ்வளவு ஆழமாகக் கிள்ளினாலும், அவள் எலும்பைத் தொட முடியாது. மூன்று மாதக் கடும் பயிற்சியில் தசைகள் கரைந்து உடம்பு முறுகிவிட்டது. அவளைப் போர்க்களத்துக்கு துர்க்கா அனுப்பியது இல்லை. அருள்மதியின் அம்மா ஆங்கில ஆசிரியை. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அருள்மதிக்கு நல்ல புலமை. கணினியில் பயிற்சி இருந்ததால், அவளைத் தகவல் தொழில்நுட்பத்தில் துர்க்கா பயன்படுத்தினார். கணினி மூடியில் தன் தாயிடம் இருந்து வந்த கடிதத்தின் ஒரு வசனத்தை வெட்டி ஒட்டி இருப்பாள் அருள்மதி. தாய்க்கு அவள் ஒரே ஆசை மகள். 'Please come home. There is only one you!’ கணினியைத் திறக்கும்போது எல்லாம் தாயின் ஞாபகம் வரும். தாயைப் பிரிந்த கடைசி நாள், தாயின் வயிற்றில் குறுக்காகத் தலைவைத்துப் படுத்து இருந்ததை நினைப்பாள். தாய் அவளைக் கொஞ்சுவது இல்லை. கழுத்தை ஆழமாக முகர்ந்து பார்ப்பதோடு சரி. போர்ச் செய்திகளைத் தினமும் கணினி மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புகையில், தாயின் நினைவு வந்து விடும். அத்துடன், வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்ற விவரங்களை அன்றாடம் திரட்டித் தருவது அவள் பொறுப்பு. ஒரு வாரத்திலேயே காட்டு வாழ்க்கைக்குப் பழகிவிட்டாள். நடக்கும்போது ஒரு சருகு அசையாது, சுள்ளி முறியாது. துர்க்கா ஓய்வாக இருக்கும் சமயங்களில், முக்கிய மான மொழிபெயர்ப்புகளை அருள்மதி எடுத்து வருவது உண்டு. பின்னர், அதுபற்றிப் பேசுவார்கள். முடிந்ததும் பாம்பு சுருள் அவிழ்ப்பதுபோல, ஓசையின்றி எழுந்து அருள்மதி செல்வாள்.



சிறு வயதிலேயே துர்க்காவுக்கு, மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் என்று இயற்கையில் ஓர் ஈர்ப்பு. தாவரவியல் பாடங்களை முதலிலேயே படித்து, ஆசிரியையிடம் வகுப்பில் கேள்விகளாகக் கேட்டபடி இருப்பாள். பறவைகளில், அவளுக்கு ஆர்வம் அப்போதே தொடங்கிவிட்டது. மருத்துவம் படிப்பது என்று தீர்மானித்தாள். ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போது, பஸ்ஸில் இருந்து இறங்கியவள் வீட்டுக்கு வரவில்லை. எல்லோரும் தேடினார்கள். அடுத்த நாள் என்ன பாடம் என்று ஆசிரியையிடம் கேட்டு அதைப் படிப்பதற்கான புத்தகங்களுடன் பள்ளியில் இருந்து புறப்பட்டவள், என்னஆனாள் என்பது தெரியவில்லை. பிறகுதான் செய்தி பரவியது. அவள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள் என்று! யாரோ அவளிடம் கேட்டபோது அவள் சொன்ன பதில், 'எல்லோரும் பந்தியில் உட்கார்ந்தால், பரிமாறுவதற்கு யாராவது வேண்டாமா?’



கிளிநொச்சி விழுந்த அன்று, துர்க்கா, அருள்மதிக்குச் சொன்னது நினைவுக்கு வந்தது. 'நீ ஆயுதத்தைத் தொடக் கூடாது. வரலாற்றைச் சொல்வதற்கு எங்களுக்கு ஒருவர் வேண்டும்!’ அருள்மதி, 'இதற்குத்தானா இவ்வளவு பயிற்சி எடுத்தேன்?’ என்றாள். ஒரு பாறையில் இருந்து இன்னோர் ஆபத்தான பாறையின் மேல் பாய்வதற்கு முன்னர் ஆயத்தம் செய்வதுபோல துர்க்கா தயங்கினார். 'நான் போரில் இறந்தால், என் உடல் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது. உயிருடன் என்னைப் பிடித்தால், என்னை எப்படிப் பாதுகாப்பது என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய இறந்த உடல் அவர்கள் கையில் அகப்பட்டால், அதற்கு என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியும். என் உடலின் மேல் அவர்கள் கைகள் ஊர்வதை, என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நீ எப்படியாவது என்னைப் புதைத்துவிடு. அல்லது எரித்துவிடு. எது அந்த நேரத்துக்குச் சுலபமோ... அதைச் செய்!’



போரிலே பங்கு பெறக் கூடாது என்று துர்க்கா சொன்னது அருள்மதிக்குப் பெரிய ஏமாற்றதைத் தந்தது. 'சரி, ஆனந்தபுரம் போர் திட்டத்தையாவது சொல்லுங்கள். விவரம் எனக்குத் தெரிய வேண்டாமா?’ என்றாள் அருள்மதி. 'உரிய நேரம் வரும்போது, நீயாகவே தெரிந்துகொள்வாய். அவசரப்படாதே’. 'கிழக்குப் பக்கம் என்று கூறுகிறீர்கள். எவ்வளவு தூரம் கிழக்குப் பக்கமாக முன்னேற வேண்டும்?’ என்று கேட்டாள் அருள்மதி. 'கிழக்குப் பக்கம் முடியும் மட்டும். அல்லது அவர்கள் எங்களை நிறுத்தும் மட்டும்!’



அந்த நேரம் பார்த்து கை ரேடியோ சடசடவென ஒலித்தது. சங்கேத வார்த்தைகள். அருள்மதிக்கு ஒன்றும் புரியவில்லை. துர்க்கா கோபமானது மட்டும் தெரிந்தது. பின் பக்கத்தைக் காட்டிக்கொண்டு துர்க்காவிடை பெறாமல் நடந்தார். அதுவே கடைசிச் சந்திப்பு!



ஜெயதீசனை, துர்க்காவால் மறக்க முடியாது. அவரைப் பார்த்தவுடனேயே சிரிப்பு வரும். காலையில் முதல் வேலையாக ஒரு கையால் கீழே நழுவும் கால் சட்டையைப் பிடித்தபடி, மறு கையில் பனம் பழங்களை எங்கேயோ போய் பொறுக்கிக்கொண்டு வருவார். அவை சிறுமிகளுக்கு. ஜெயதீசனுடன் யாருமே கோபிக்க முடியாது. எங்கே எல்லாம் போகக் கூடாதோ, அங்கே எல்லாம் போவார். அவருடைய நாடு ஆஸ்திரேலியா. தன்னுடைய நாட்டைவிட்டு வந்து, அநாதைக் குழந்தைகளுக்காக அவர்களுடன் வாழ்ந்தார். எல்லோரும் கழித்துவிட்ட ஒரு பழைய காரில் மாற்றங்கள் செய்து, அதை ஆமணக்கு விதை எண்ணெயில் ஓடுகிற மாதிரி தயாரித்து இருந்தார். அதற்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆமணக்கு செடிகளைப் பயிரிட்டு வளர்த்தார். அவர் பெரிய விஞ்ஞானி, சேவையாளர், பரோபகாரி, குழந்தைகளுக்கு மகிழ்ச்சி நேரம் ஒதுக்கி, ஆடல் பாடல் என்று அவர்களைச் சந்தோசப்படுத்தினார். கடந்த இரண்டு வாரங்களாக அவரைப்பற்றிய ஒரு தகவலும் இல்லை. குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முள்ளிவாய்க்காலை விட்டு நகர்ந்தாரா என்பது தெரியவில்லை.



நாலு வருடங்களுக்கு முன்னர் தலைவரு டைய 51-வது பிறந்த நாள் வந்தபோது, துர்க்கா ஆச்சர்யமான ஒரு பரிசு தந்தார். 16 வருடங்களாகக் காடுகளில் அலைந்து திரிந்து எடுத்த 100 விதமான பறவைகளின் படங்களை அச்சடித்து தட்டியில் ஒட்டி, அதன் கீழே பறவைகளின் பெயர்களை எழுதி, 'ஈழத்துப் பறவைகள்’ என்று தலைப்பிட்டு தலைவரிடம் நேரே கொடுத்தார். அந்தத் தடவை தலைவர் துர்க்காவையும் விசேடப் பயிற்சியில் இருந்த சில பெண் போராளிகளையும், சந்திப்புக்கு அழைத்திருந்தார். பயிற்சியில் இருந்த ஓர் இளம் பெண், அவளுடைய பெயர் மாலதியோ என்னவோ, வெகுவான கூச்சத்துடன் அமர்ந்திருந்தாள். ஒரு பூனை வந்து, அவ்வளவு பேர் இருக்க, மாலதியின் மடியில் ஏறி உட்கார்ந்தது. மாலதி பயத்தில் நெளிந்துகொண்டு இருந்தாள். தலைவர் பார்த்துச் சிரித்துவிட்டு, 'புலி பூனைக்குப் பயப்பிடுவதா?’ என்று சொன்னார். பின்னர், பூனையை வாங்கி கூட்டம் முடிவுக்கு வரும் வரை, தன் மடியில் வைத்துத் தடவியபடியே இருந்தார்.



துர்க்கா கொடுத்த பரிசைத் திறந்து பார்த்ததும் திடுக்கிட்டார். 'நன்றி... நன்றி. இத்தனை பறவைகளா? எனக்குத் தெரியவில்லையே?’ என்று தலைவர் வியந்தார். ஒவ்வொரு பறவையின் பெயரையும் உரத்துச் சொன்னார். மைனா, வாலாட்டி, தையல்காரி, பிலாக்கொட்டை, சிட்டுக்குருவி, தகைவிலான், புளினி, வானம்பாடி, புறா, குயில், மரங் கொத்தி, கரிக்குருவி, குக்குறுப்பான், செண்பகம், நாகணவாய் என்று அவர் சொல்லிக்கொண்டே வர... எல்லோரும் அதிசயமாகப் பார்த்தார்கள். '100 பறவைகளை மாத்திரம்தான் நான் படம் பிடித்துஇருக்கிறேன். ஆனால், 240 பறவை வகைகள் இருக்கின்றன’ என்றார் துர்க்கா. தலைவர், 'இவை எல்லாம் எங்கள் பறவைகள். சுதந்திரமானவை. தடையின்றி அவை எங்கேயும் பறக்கலாம்’ என்று பெருமையோடு சொன்னார். சிரிதேவி குறுக்கிட்டு ஒரு பறவையைச் சுட்டிக்காட்டி, 'இது என்ன பறவை? புதுசாக இருக்கிறதே’ என்றாள். துர்க்கா பதில் சொல்வதற்குள், தலைவர் சிரிதேவியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு 'இது தெரியாதா? 6 மணிக் குருவி, காலை 6 மணிக்குச் சத்தம் போடும்’ என்றார். எல்லோர் கண்களும் தலைவர் பக்கம் திரும்பின. 'சிரிதேவி காலை 6 மணிக்கு எழும்பினாத்தானே தெரியும்!’ என்று அவர் சொன்னதும், எல்லோரும் சிரித்து அந்த இடம் கலகலப்பானது. எத்தனையோ சந்திப்புகள். ஆனால், அந்தச் சம்பவத்தை மாத்திரம் துர்க்காவினால் மறக்க முடிய வில்லை.



ரேடியோவில் அறிவிப்பாளராகச் செயல்பட்டவர் இறைவன். தினம் அவருக்குக் கிடைக்கும் இரண்டு மணி நேரத்தில், செய்தி வாசிப்பதோடு சுவையான தகவல்களையும் கூறி, அந்த ரேடியோ நேரத்தை உபயோகம் உள்ளதாக மாற்றிவிடுவார். அவருக்கு இஸ்ரேல் நாட்டு முன்னாள் போர்த் தளபதி மோசே தயான் மீது அளவற்ற பற்று. அவரைப்பற்றிய ஏதாவது கதை ஒன்றைச் சொன்ன பிற்பாடுதான், இறைவன் அன்றைய நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவார். மோசே தயான், ஓர் இளைஞனாக பிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றியபோது, ஒரு கண்ணை இழந்தவர். ஒருநாள் விதிக்கப்பட்ட வேகத்துக்கு மேலாக கார் ஓட்டிக்கொண்டு போனபோது, போலீஸ் அவரைப் பிடித்துவிட்டது. அவர் சொன்ன பதில், 'எனக்கு ஒரு கண்தான் இருக்கிறது. நான் எதைப் பார்ப்பது ரோட்டையா அல்லது வேகம் காட்டும் கருவி யையா?’ போலீஸ் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டது. இப்படி சின்னச் சின்ன தகவல்களைத் தருவார்.



சில போராளிகள் இறைவனைப் பரிகசிப் பார்கள். 'இஸ்ரேல் தளபதி பற்றி புகழ் பாடுகிறீர்கள். இஸ்ரேலின் கிபீர் விமானம்தான் இரண்டு மடங்கு ஒலி வேகத்தில் பறந்து குண்டுகளைப் போட்டு எங்கள் மக்களைக் கொல்கிறது. கிபீர் என்றால், இளம் சிங்கம் என்று பொருள். சிங்கக் கொடி ராணுவம் இளஞ் சிங்கங்களை எங்கள் மீது ஏவிவிடுகிறது. நீங்கள் அவரைப் போற்றுகிறீர்கள்!’ அதற்கு இறைவன் சொல்வார், 'உங்கள் கேள்விக்குப் பதிலும் மோசே தயான் சொன்னதுதான். ஒரு ராட்சத கோலியாத்தை வெல்ல சிறு பையன் தாவீது போதும்!’



முள்ளிவாய்க்காலில் அன்று மறுபடியும் அகிலாவைப் பார்த்ததும் துர்க்கா திடுக்கிட்டார். அவள் சொல்வழி கேட்காதவள். எவ்வளவு சொல்லியும், அவள் கூடாரத்துக்குத் திரும்பிப் போகவில்லை.



'அக்கா, 6 மணிக் குருவியைப் பார்த்தேன்’ என்றாள். 'பொய் சொல்லாதே. அது வலசை போற குருவி. இந்த மாதம் அது இங்கே இருக்க முடியாது!’



'இல்லை அக்கா. எனக்குத் தெரியும் வாருங்கோ’ என்று கூட்டிப்போனாள். அவள் சொன்னது உண்மைதான். கட்டையான நீல வால் குருவி. மேலுக்கு பச்சை, கீழுக்கு சிவப்பு உடம்பு. வெள்ளைக் கழுத்து, சப்பாத்து லேஸ் துளைபோல சின்னக் கண்கள். அத்தனை அழகான குருவியை மரத்திலே கண்டதுதான். நிலத்திலே அவ்வளவு சமீபத்தில் துர்க்கா பார்த்தது இல்லை. அது இலைகளைத் தள்ளி புழுக்களைக் கொத்தித் தின்றுகொண்டு இருந்தது.



'ஏன் அக்கா திகைச்சுப்போய் நிற்கிறீங்கள்?’



'பாவம் இது. தவறிப்போய்விட்டது. இதன் ஆங்கிலப் பெயர் Indian Pitta. ஒவ்வொரு வருடமும் இமயமலைக்குப் பறந்து, அங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பின்னர் பனிக் காலம் ஆரம்பிக்கும்போது, இங்கே வந்துவிடும். இந்த வருடம் எப்படியோ அது தனித்துவிட்டது.’ 'கூட்டத்தோடு பறக்கவில்லையா? அப்ப என்ன நடக்கும்?’



'இந்த நிலத்தில் அப்படி ஒரு பற்று ஆக்கும். பார், எங்களைவிட்டுப் போக விருப்பம் இல்லை. ஓடிப் போய் என்னுடைய கேமராவை எடுத்து வாறியா?’- துர்க்கா பேசி முடிக்கு முன்னர், அகிலா எடுத்தாள் ஓட்டம். அவள் திரும்பி வந்தபோது குருவி பறந்துவிட்டது.



'எங்கே அக்கா குருவி?’



'இங்கேதான் எங்கேயோ... அது தனியா மாட்டிவிட்டது. இந்த வெயில் சூட்டில் அது நிச்சயம் செத்துப்போகும். ஐயோ பாவம்’ என்றார். இரண்டு இமைகளும் சந்திக்கும் இடம் ஈரமாகியது. 'அது தப்பிவிடும் அக்கா. பயப்பிடாதையுங்கோ’ என்றாள் அகிலா, எதோ பெரிய ஆள்போல.



ஒவ்வொருவராகத் தன் அணியில் இருந்தவர்களை, துர்க்கா இழந்துகொண்டு வந்தார். ஒரு கணினி செய்ய வேண்டியதை அகல்மதி செய்வாள். கழுத்து எலும்பு தெரியும் ஒல்லி யான தேகம். அதிவேகமாக ஓடக்கூடியவள். சொற்களைக் கையினால் மறைத்துக்கொண்டு தான் பேசுவாள். அந்தக் காலத்து விதூஷகன் போல துர்க்காவுக்கு சிரிப்பு மூட்டுவதுதான் அவள் வேலை. அவள் சிரித்தால் போதும், விடிவதைப்போல அந்த இடத்தில் ஒளி உண்டாகும். திட்டத்தை துர்க்கா விளக்கியதும், போராளிகள் தங்கள் தங்கள் கடிகாரங்களைச் சரிபார்த்துக்கொண்டார்கள். ஒரு ரகசியப் பொறியை நோக்கி ராணுவக் கவச வாகனங்களைத் திருப்பிவிடுவதுதான் உத்தி. பீரங்கிக் குண்டுகள் வந்து விழும் திசையையும், அவற்றின் இரைச்சலையும், வேகத்தையும் வைத்து எவ்வளவு தூரத்தில் ராணுவம் நகருகிறது. எந்தத் திசை நோக்கிச் செல்கிறது, இலக்கை அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் போன்ற விவரங்களைக் கணிப்பதில் அகல்மதி தேர்ச்சி பெற்றவள். அன்று இரண்டு கவச வாகனங்களை அழித்து இருந்தார்கள். எந்த நேரமும் உற்சாகமாக இருப்பவள் அன்று என்னவோ மாதிரி இருந்தாள். 'அக்கா, வெற்றி கிட்டுமா?’ என்றாள். தொண்டையில் நிறையச் சொற்கள் சேர்ந்துவிட்டதால், அது அடைத்துப்போய்க் கிடந்தது. துர்க்கா அவளை உற்றுப் பார்த்து அடிக்கடி தலைமைப் பீடம் சொல்லும் வாசகத்தைச் சொன்னார். 'வெற்றி முக்கியம் இல்லை. அவர்கள் தோல்விதான் முக்கியம்!’ துர்க்கா வாய் திறந்து பேசி முடிந்ததும், கிபீர் விமானத்தில் இருந்து குண்டு வெளிச்சமாக வந்து விழுந்தது. ஒரு கணத்துக்கு முன்னர் அகல்மதி கையில் ஏ.கே 47 துப்பாக்கியுடனும், தூரக் கண்ணாடியுடனும் நின்றாள். அடுத்த கணம் பெரும் குழிதான்கிடந்தது. அவள் இருந்த சுவடு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. சூழ்ந்த புகை மூட்டத்தில் சதை எரியும் மணம் ஒன்றே துர்க்காவுக்கு மிஞ்சியது.



அடுத்த பெரிய இழப்பு, செவ்வானம். அவளும் மற்றவர்களைப்போல வெளிநாட்டுக்குப் போயிருந்தால், இன்றைக்கு ஒரு புகழ்பெற்ற மருத்துவராகி, நிறையப் பணம் சம்பாதித்துக்கொண்டு இருந்திருப்பாள். எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் போக மறுத்து, போரிலே காயம்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகத் தங்கிவிட்டாள். அவளுக்கு மிஞ்சிப்போனால், 27 வயதுதான் இருக்கும். கெக்கரிக்காய் போன்ற நேரான உடம்பு. ஒரு வளைவுகளும் இல்லை. காதிலே ஓட்டை உண்டு, தோடு கிடையாது. மூக்கிலே துளை உண்டு. மூக்குத்தி கிடையாது. விரலிலே நகம் உண்டு. பூச்சு பூச மாட்டாள். ஒரு நாளில் 18 மணித் தியாலத்துக்குக் குறையாமல் வேலை செய்தாள். நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பி அவளுக்கு ஒரு மடிக்கணினி அனுப்பி இருந்தான். ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல அதைத் தூக்கிக்கொண்டு, இரண்டு நாட்களாக அலைந்தாள். எப்படித் திறப்பது என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை. ஒருநாள் அருள் மதியிடம் இரவு 10 மணிக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வந்தாள். எல்லா விசயங்களை யும் ஒரே நாளில் கற்றுவிட வேண்டும் என்ற அவா. கம்ப்யூட்டரில் அவள் எழுதிய முதல் கடிதத்துக்கு இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. ஜெனரேட்டர் நேரம் முடிந்து விட்டபடியால், கடிதத்தை அடுத்த நாள் அனுப்பலாம் என்று மூடிவைத்தாள். அவள் அடித்த கடிதம் கம்ப்யூட்டரில் கிடந்தது. அதிகாலை ஆஸ்பத்திரிக்கு உடுத்திப் போனாள். போன சிறிது நேரத்திலேயே கொத்துக் குண்டு ஒன்று ஆஸ்பத்திரியின் மேலே விழுந்து 40 பேர் பலியானார்கள். அதில் செவ்வானமும் ஒருத்தி. ஒரு மரக்கொப்பு முறிந்ததுபோல நடுவிலே முறிந்துபோய்க் கிடந்தவளைப் பார்க்க முடியவில்லை. இறந்தவர்களில் 20 பேர் குண்டு விழாவிட்டா லும், இறந்துபோயிருப்பார்கள் என்று பேசிக் கொண்டார்கள். செவ்வானம் இறந்த செய்தியைத் தொலைபேசியில் நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பிக்கு அறிவித்தார்கள். இரண்டு நாள் கழித்து அவள் எழுதி கம்ப்யூட்டரில் சேமித்துவைத்த கடிதத்தை மின்னஞ்சலில் அவனுக்கு அனுப்பிவைத்தாள் அருள்மதி.



பிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றி அதி உயர் விருதுகளைப் பெற்றவர் ஆண்டி மக்நாப். அவருடைய இரண்டு புத்தகங் களை மொழிபெயர்ப்பில் தலைமைப் பீடம் படித்திருந்தது. ஒன்று, Bravo Two Zero. அடுத்தது, Immediate Action. துர்க்காவும் இயன்ற மட்டும் அவற்றை இரவிரவாகப் படித்து முடித்து விடுவார். ஆண்டி மக்நாபில் பற்று அப்படித்தான் ஏற்பட்டது. அருள்மதி பகுதி பகுதியாக மொழிபெயர்த்தது, Col. James Mrazek என்ற அமெரிக்கர் எழுதிய The Art of Winning Wars என்ற புத்த கத்தைத்தான். அதன் 5-வது அதிகாரத்தை மொழிபெயர்க்கச் சொல்லி, அவசர கட்டளை ஒரு நடு இரவில் வந்தது. அருள்மதி இரவிரவாக மொழிபெயர்த்து, கையினால் எழுதி அதை கம்ப்யூட்டரில் அச்சடிக்கக்கூட நேரம் இன்றி அப்படியே சுரேஷ் மாஸ்ரரிடம் கொடுத்து அனுப்பினாள். அந்த மொழிபெயர்ப்பில் சொல்லப்பட்ட ஒரு வசனம் துர்க்காவினால் மறக்க முடியாது. 'போர்கள், ஆயுத பலத்தினால் அல்ல, புத்தியினால் வெல்லப்படுகின்றன!’



20 வருடப் போர் வாழ்க்கையில் துர்க்கா பல போராளிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் லெப். கேர்ணல் மொழியரசி போன்ற ஒரு போராளியைக் கண்டது கிடையாது. அபூர்வமானவர். அழகான தோற்றம்கொண்ட அவருக்கு ஒரு கால் கிடையாது. பதிலுக்கு கரடுமுரடான ஒரு மரக்கால் பொருத்தி இருந்தது. போர்க்களத்திலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ தான் எந்த விதத்திலும் குறைவுபட்டதாக அவர் உணர்ந்தது இல்லை. குளிக்கப் போனால், ஒரு மணித்தியாலம் மற்றவர்கள் அவருக்காக ஒதுக்குவது வழக்கமாகிவிட்டது. ஒட்டி வெட்டி மிச்சமாய் இருந்த கூந்தலை எண்ணெய்வைத்து ஊறவிட்டு, சீயக்காயுடன் செவ்வரத்தம் பூக்களையும் அரைத்துப் பூசி ஒரு பாட்டம் முழுகிவிட்டு, பின்னர் வாசனை சோப் போட்டு மீண்டும் ஒரு தடவை குளிப்பார். விருந்துக்குப் புறப்பட்டதுபோல முகத்தை ஒப்பனை செய்வார். 'சாம்பிராணிப் புகை வேண்டுமா, அக்கா’ என்று யாராவது இளம் பெண் சீண்டினால், மரக்காலைக் காட்டுவார். மற்றவர் கள் ஞாபகப்படுத்தினால் ஒழிய, அவருக்கு தான் போராளி என்பது மறந்துபோகும். விடிந்து, அன்றைய நாள் தொடங்கிய பிறகு ஒரு தடவையாவது தன் அம்மாவின் றால் குழம்பைப்பற்றிப் பேசாமல் அவரால் இருக்க முடியாது.



ஒருநாள் துர்க்கா கேட்டார், 'மொழி, என்ன அலங்காரம் உச்சமாயிருக்கிறது. உம்முடைய எதிரிகளைத் துப்பாக்கியால் விழுத்தப் போகிறீரா அல்லது இமை வெட்டினால் சரிக்கப்போகிறீரா?’



'பாவம். என் அழகைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது. என்னுடைய பிகே துப்பாக்கி 1,500 மீட்டர் தூரத்திலேயே அவர்களைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடும்.’



'அப்படியானால் இவ்வளவு செவ்வரத்தம் பூக்களை ஏன் வீணாக்குகிறீர்?’



'எனக்குத்தான். என் தலைக்காகத்தான் அவை பூக்கின்றன!’



போர் என்றதும் அங்கே ஏதோ றால் குழம்பு பரிமாறுகிறார்கள் என்ற நினைப்புதான். பாதி துள்ளுவார். மற்றவர்களைத் தள்ளிவிட்டு முன்னுக்கு நிற்பது மொழியரசிதான். போர் முடிவதற்கு முன்னர் இரவு தொடங்கிவிடக் கூடும் என்பதுபோலச் செயலாற்றுவார். துப்பாக்கியைத் தூக்கிச் சுடும் அந்த நேரத்திலும் விரலால் துப்பலைத் தொட்டு புருவத்தை நேராக்க மறக்க மாட்டார். எதையாவது அவசரமாகச் செய்துவிட்டுத்தான் மூளையைப் பாவிப்பார்.



'மொழி, எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீர்?’ என்று துர்க்கா கோபிப்பார்.



'எதுக்குப் பயப்பட வேணும்? கடவுளுக்குத்தான் என்னைக் கூப்பிட வேண்டிய நேரம் தெரியும்!’



'அது சரி, நீர் ஏன் கடவுளுக்கு உதவி செய்கிறீர்?’ என்று துர்க்கா கடிந்துகொள்வார்.



'எல்லாம் வெல்லும், அக்கா.’



'எல்லாம் வெல்லும்!’



லெப். கேர்ணல் மொழியரசி டக்டக்கென்று மரக்காலை நிலத்திலே உதைத்து நடந்து போவார். அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்டது.



ஆனந்தபுரம் போர் யுக்தியை இரண்டு வாரகாலமாகத் திட்டமிட்டார்கள். 1,000 போராளிகள் பங்கு பெற்ற இந்த நகர்வில், இடப்புற அணியின் பொறுப்பை பிரிகேடியர் துர்க்கா ஏற்றிருந்தார். அவருக்குத் துணையாக வாகை ஒன்று, வாகை இரண்டு போரணிகள் இருந்தன. இணைப் படையாக அவருக்குப் பின்னால் பிரிகேடியர் விதூஷாவின் படை நின்றது. வலப் பக்கத்து நுனியில் பிரிகேடியர் மணிவண்ண னும், பிரிகேடியர் தீபனும் இருந்தனர். நடுவில் பொறுப்பாக நின்றது கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும். போர் தொடங்கிய சிறிது நேரத்தில், கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும் உள்வாங்கும் அதே சமயம், இடம் வல அணிகள் மடிந்து எதிரியை வளைத்துப் பிடித்து விட வேண்டும். 2,200 வருடங்களுக்கு முன்னர் ஹனிபால் பயன்படுத்திய அதே யுத்தி. போர்த் தளவாடங்கள், 50 கலிபர்கள், உந்து கணை செலுத்திகள், ஆர்ட்டிலறிகள், மோர்ட்டார்கள், யந்திரத் துப்பாக்கிகள் எனச் சகலதும் தயார் நிலையில் இருந்தன.



துர்க்கா இடப்புறத்து முனையில் முன்னேறினார். அவருடைய துணைப்படை கள் அவரை ஒட்டியபடி நகர்ந்து பாரியத் தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவுக்காகக் காத்து நின்றபோது, ராணுவத்தின் தாக்குதல்கள் தொடங்கின. ஆகாயத்தில் இருந்து குண்டுகள் விழுந்து அணியைச் சிதறடிக்க முயன்றன. அவற்றை எல்லாம் சட்டை செய்யாமல், துர்க்கா முன்னேறிக்கொண்டு இருந்தார். திடீரென்று சடசடவென இடப்புறம் இருந்து குண்டுகள் பாய்ந்து வந்தபோது, துர்க்கா துணுக்குற்றார். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. லெப். கேர்ணல் மோகனா, இடது புறத்தில் நின்றார். உடம்பின் ஓர் அங்கம் போலாகிவிட்ட மோகனாவின் துப்பாக்கி இலக்கில் அசையாமல் நேராக நின்றது. துர்க்கா திரும்பிப் பார்த்தபோது, மோகனாவின் பாதி தலையைக் காணவில்லை. இலங்கை ராணுவமும் பெரிய போர் திட்டத்தை வகுத்திருந்தது. இரவிரவாக நடர்ந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அது பெட்டியடித்திருந்தது. போராளிகளின் படை அதற்குள் சிறைபட்டிருப்பது அப்போது தான் துர்க்காவுக்குத் தெரிய வந்தது.



அருள்மதி 10 நாட்களுக்கு முன்னர் மொழிபெயர்த்து கையினால் எழுதி அனுப்பிய அமெரிக்க கேர்ணல் ரசேக்கின் ஐந்தாவது அதிகாரத்தை தலைமைப் பீடத்திடம் சுரேஷ் மாஸ்ரர் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அது முக்கியமான மொழிபெயர்ப்பு. மோகனாவின் சிவப்பு ரத்தம் ஊர்ந்து வந்து துர்க்காவின் சப்பாத்தை நனைத்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்து நேரத்தைப் பார்த்தார். திசைகாட்டி பொருத்தப்பட்ட அந்தக் கஸியோ கைக்கடிகாரம், தலைமைப் பீடம் அவருக்குப் பரிசாகக் கொடுத்தது. இனியும் தாமதிக்க முடியாது. அவர்கள் தீர்மானித்த நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. அந்தத் திடல் 100 அடி உயரம்தான் இருக்கும். இரண்டே நிமிடங்களில் அதன் மீது ஏறிவிடலாம். 20 வருடப் பயிற்சி இந்தத் தருணத்துக்காகத்தான். ஒரேயரு கட்டளைதான் தேவை. எல்லோரும் பின்வாங்கி இன்னொரு சமருக்குத் தயார் செய்யலாம். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழிவை எதிரிகளுக்கு உண்டாக்கலாம்.



கை ரேடியோவில் அவ்வளவு நேரமாக எதிர்பார்த்திருந்த கட்டளை கடைசியில் வந்தது. மூன்றே மூன்று சங்கேத வார்த்தைகள்தான். 'அதிகம் இழந்தவர்கள் தோற்றவர்கள்!’ சுருக்கமான, தெளிவான உத்தரவு. துர்க்காவின் உடலில் இதற்கு முன்னர் ஒரு முறையும் அனுபவித்திராத மாற்றம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமான அட்ரனலீன் அவர் உடம்பில் பாய்ந்து சுவாச வேகம் கூடி, அந்தரத்தில் மிதப்பதுபோல ஆனார். அவர் காதுக்குள் இருதயம் அடித்தது. ஆயிரம் யானை பலம் உண்டானதுபோன்ற உணர்வு. முன்னே கால் வைத்தால்போதும், ஒருபோதும் திரும்ப முடியாத ஒரு கட்டத்துக்குள் அவர் நுழைந்துவிடுவார். அவருடைய இருதயத்தின் இரண்டு துடிப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் பாய்ந்து, அவருடைய ஆயுளையும் 1,000 போராளிகளின் ஆயுளையும், ஒரு தேசத்தின் ஆயுளையும் தீர்மானிக்கப்போகும் அந்த ஓர் அடியை துர்க்கா வைத்தார்.



எதிரிகளின் நாலு டாங்கிகளும் எட்டு கவச வாகனங்களும் புள்ளிகளாகத் தெரிந்தன. தனித்தனியாக ஆடிய கை விரல்களால் துர்க்கா ஷி97 துப்பாக்கியைத் தொட்டுத் தூக்கினார். சற்று நிதானித்து, நேராக்கி குறிபார்த்து விசையை அமுக்கினார். எதிரிகள் விழுந்துகொண்டே இருந்தார்கள். இனி, அவர் நிறுத்தப்போவது இல்லை. யாராவது அவரை நிறுத்தினால் ஒழிய.



ராணுவத்தின் வலப் பக்க முனையும் இடப் பக்க முனையும் நகர்ந்து இடைவெளியைக் குறுக்கி வந்தபோது, இலங்கை ராணுவத்தினர் தங்கள் படையில் ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ள ஆரம்பித்தார்கள். இப்படி ஒரு மூடத்தனமான நகர்வு ஒருவரும் எதிர்பார்க்காதது. இதைச் சாதகமாக்காமல் விடுவது அதனிலும் கூடிய மூடத்தனம். ராணுவம், தங்கள் படையைக் கொல்லும் அதே வேகத்தில், போராளிகளையும் கொன்றது. எங்கேயோ இருந்து இலக்குவைத்து சுடப்பட்ட குண்டு ஒன்று துர்க்காவைத் தாக்கியது அவருக்குத் தெரியவில்லை. உதிரம் நெற்றியிலே வழிந்து, கழுத்திலே இறங்கி, நெஞ்சை நனைத்தபோது குனிந்து பார்த்தார்!



அன்றைய நாள் 2009... ஏப்ரல் 4-ம் தேதி. போர் நின்றபோது, போராளிகளில் 700 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். இலங்கை ராணுவத்தின் இழப்பு 3,000 பேருக்கு மேலாக இருந்தது. அந்த விவரம் துர்க்காவுக்கு என்றென்றைக்குமே தெரியப்போவது இல்லை.



அவர் துப்பாக்கியைக் கையிலே இறுக்கிப் பிடித்தவண்ணம் புரண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி கிடந்தார். அது சொல்ல முடியாத தூய வெண் நிறத்தில் காணப்பட்டது. ஓர் அபூர்வமான நறுமணம் மூக்கைத் துளைத்தது. மேஜர் சோதியாவும், லெப். கேர்ணல் செல்வியும் கண்களுக்குத் தெரிந்தனர். அருள்மதிக்கு விடை சொல்லாமல் புறப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது. வெகுதூரத்தில் பூட்ஸ் ஒலிகளும் மனிதக் குரல்களும் கேட்டன.



பிரிகேடியர் துர்க்கா மரணத்தைத் தழுவும் முன்னர் கடைசியாகப் பார்த்தது, ஆகாயத்தை மறைத்து 100 பறவைகள் சிறகடித்துப் பறந்த காட்சியை. அவருடைய கண்கள் அந்தக் கூட்டத்தில் 6 மணிக் குருவியைத் தேடின!






Thursday, April 21, 2011

''திரும்பி வருவேன் அம்மம்மா என்றான்... வரவேயில்லை!''





''ரெண்டு பக்கெற் உப்பு அம்பது ரூபாதான்ஞ் வாங்குங்கோ அக்கா'' என்று இறைஞ்சுகின்றன அவர்களின் கண்கள். எட்டு, பத்து வயது மதிக்கத் தக்க இரண்டு சிறுவர்கள். வெயிலில் அலைந்து கறுத்து வாடிய முகங்கள். பிஞ்சுக் கைகளை இழுக்கும் உப்புப் பொதிகளின் சுமை.



'அப்பா, அம்மா ரெண்டு பேரும் இல்லை. கடைசிச் சண்டையிலை செத்துப் போயிட்டினம்.'



இதை அவன் எங்கோ பார்த்துக்கொண்டு, மரத்துப்போன முகத்தோடு சொல்கிறான். பெற்றோர் கோயிலுக்கோ, கடைக்கோ போய்இருப்பதைச் சொல்வதுபோன்ற தொரு தொனி.



மேலும், முள்ளி வாய்க்கால் பேரனர்த்தத்தை அவர்கள் 'கடைசிச் சண்டை’ என்றுதான் சொல்கிறார் கள். அந்தச் சிறுவர்களிடம் துயரக் கதை ஒன்று இருக்கிறது. கேட்பதற்கு அஞ்சி அந்தக் கண்களில் இருந்து தப்பித்து ஓடுகிறோம். அவர்களைப் போலவே, ஈழத்தில் உள்ள அனை வரிடமும் துயரம் செறிந்த கதைகள் பல நூறு உண்டு.







'என்னுடைய கணவரும் மூத்த மகனும் மாத்தளனில் கொல்லப்பட்டார்கள். சின்ன மகனை, முகாமில் இருந்து ராணுவம் பிடித்துப் போய் பூஸா சிறையில்வைத்து இருக்கிறார்கள். இரண்டாவது மகன், நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்டான். அவனைத் தேடி நான் ஒவ்வொரு முகாமாக அலைந்து திரிகிறேன். எவர் எவருடைய கால்களிலோ, விழுந்துப் பார்க்கிறேன். ஒரு பயனும் இல்லை.' - தனித்து நிற்கும் அந்தப் பெண்மணி நைந்து போன சேலைத் தலைப்பினால் கண்களைத் துடைத்துக்கொள்கிறார். சிறையில் இருக் கும் கடைசி மகனைப் பார்ப்பதற் காக, அவர் அப்போது அவசரமாகக் கிளம்பிக்கொண்டு இருந்தார்.



'அவன் பெயர் ராஜு. குடும்பத் தில் பாசமுள்ள பிள்ளை. 'நான் திரும்பி வருவன் அம்மம்மாஞ்... கவலைப்படாதையுங்கோ’ என்று சொல்லிவிட்டுப் போனான். வரவே இல்லை. வீரச் சாவடைந்து விட்டதாகச் சொன்னார்கள். பார்த்து அழுவதற்கு அவனுடைய உடம்புகூடக் கிடைக்கவில்லை.' - முள்ளி வாய்க்காலில் மறைந்துவிட்ட தனது பேரனை நினைத்து விம்முகிறார் விசுவமடுவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து நல்லூரில் தற்காலி கமாகத் தங்கியிருக்கும் அந்த முதிய பெண்.



'இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்களுடைய காணி, மரங்கள் நிறைந்த சோலையாக இருந்தது. எவ்வளவோ சிரமப்பட்டு உழைத்து, கடன் வாங்கி வீட்டைக் கட்டினேன். எல்லோரும் வெளிக்கிட்டு ஓடியபோது, நாங்களும் ஓடினோம். திரும்பி வந்து பார்த்தபோது, அத்திவாரம் மட்டுமே மிஞ்சியிருக்கக் கண்டோம். சுவர்க் கற்களைக்கூடப் பெயர்த்தெடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். இன்று தறப்பாழ்களின் கீழ் வாழவேண்டி இருக்கிறது. ஆட்களற்ற வனாந்தரமாக எங்கள் ஊர் இருந்த காலத்தில், யானைகள் புகுந்து மரங்களை எல்லாம் அழித்துவிட்டன. பாம்புகள் புற்றெடுத்துக் குடி புகுந்துவிட்டன...' முன்னம் வாழ்ந்த காலங்களின் ஞாபகத்தில் ஏங்கிய விழிகளோடு வானத்தை அண்ணாந்து பார்க்கிறார் அந்தப் பெரியவர். அண்ணாந்த முகத்தில் இருந்து உருண்டு சரிகிறது ஒரு துளிக் கண்ணீர்.



வலது கை துண்டிக்கப்பட்டு இருக்க, இடது கையால் ஓங்கி ஓங்கி நிலத்தில் முளையடித்துக்கொண்டு இருக்கிறான் ஓர் இளைஞன். இறுகிய முகத்தில் சிரிப்பின் அடையாளமே இல்லை.



'எங்களுக்கு ஒருத்தரும் இல்லைஞ்... எங் களுக்கு ஒருத்தரும் இல்லை...' என்ற வார்த் தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் அந்த இளம்பெண். மே 2009-ல் நடந்தேறிய பேரனர்த்தத்தில், அவளது கணவன் செல்லடியில் சிக்கிச் சிதறிவிட்டான். 'லமினேட்’ செய்யப்பட்ட புகைப்படத்தில் தனது அப்பாவைக் காட்டு கிறது இரண்டரை வயதுக் குழந்தை.



ஏதோவொரு வகையில் போர் அனைவரையும் பாதித்து இருக்கிறது. பாதித்துக்கொண்டு இருக்கிறது. முன்னரைக் காட்டிலும் அதிக அளவிலான பிச்சைக்காரர்களைக் காண முடிகிறது. பேருந்து நிலையங்களில் அதீத ஒப்பனையுடன் நிற்கிறார்கள் சில பெண்கள். ராணுவத்தினர் பாலியல் பண்டங்களாகப் பயன்படுத்தி, தெருவில் வீசி எறியப்பட்ட பெண்களே அவர்கள். வறண்டு பறக்கும் தலை மயிரோடும் பொட்டில்லாத நெற்றியின் கீழ் இருண்ட கண்களோடும் கூடிய பெண்கள், குழந்தைகளைக் கைகளில் பிடித்தபடி அரச நிவாரணங்களுக்காக அலைந்துகொண்டு இருக்கிறார்கள். கை, கால் இழந்த அநேகரைத் தெருக்களில் கடந்து செல்ல நேரிடுகிறது.



எல்லா முகங்களிலும் சொல்லித் தீராத துயரம். வார்த்தைகளையும் புன்னகையையும் போர் தின்றுத் தீர்த்துவிட, வெறும் உடலங்களாக உலவிக்கொண்டு இருக்கிறார்கள். இறந்தவர்கள் இறந்துபோக, எஞ்சிய வர்கள் அந்த ஊழிக் கூத்தின் ஞாபகங்களில் இறுகிக் கிடக்கிறார்கள். இறந்த கால இழப்புகளுக்கும் நிகழ் கால இருப்புக்கான போராட்டமே ஈழத் தமிழர்களது இன்றைய வாழ்வு. இலங்கை அரசாங்கமோ, மீள் குடியேற்றம், புனர் நிர்மாணம், மறுவாழ்வு இன்ன பிற வார்த்தைகளைச் சலிக்காமல் உதிர்த்துக்கொண்டு இருக்கிறது.



இடுப்புக்குக் கீழ்ப் பகுதி சிதைந்துபோயிருக்க, நிலத்தில் வீழ்ந்துகிடந்து 'காப்பாற்றுங்கள்ஞ்... காப் பாற்றுங்கள்ஞ்...’ என்று கதறி அழுதவர்களைத் தூக்கி வர இயலாமல் சாவிடம் விட்டுவர நேர்ந்துவிட்ட குற்றவுணர்வை, எந்த நிவாரணத்தால் துடைத்தெறிய இயலும்? குண்டு விழுந்து கிணறான பள்ளத்துள் துண்டு துண்டாகச் சிதறிக்கிடந்தவர்களின் ஞாபகங் களை எந்தத் தறப்பாளைக்கொண்டு மூடுவது? பசிக் கொடுமை தாளாமல், தங்களை வளர்த்த மனிதர்களின் பிணங்களையே பிய்த்துத் தின்ற வளர்ப்பு நாய்களின் ஊளைச் சத்தத்தை எந்தச் சங்கீதத்தால் மறக்கடிக்க முடியும்? விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப் பட்ட தமது உறவுகள் திரும்பி வருவர் வருவர் என்று, முள் கம்பி வேலிகளைப் பற்றியபடி காத்திருந்து ஏமாந்த கண்களுக்கு எந்த நிவாரணத்தால் மருந்திட இயலும்?







ஆனால், ஞாபகங்களை அழிப்பதன் வழியாக முழுமையான வெற்றியைத் துய்க்க முடியும் என்பதை இலங்கை அரசாங்கம் தெரிந்துவைத்து இருக்கிறது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில், அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது பேரினவாதம். முன்னொரு காலத்தில் 'கலாசார நகரம்’ என்று கொண்டாடப்பட்டதும், கல்வியில் சிறந்தது எனப் போற்றப்பட்டதுமான யாழ் நகரம்... இன்று கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு இன்ன பிற சீர்கேடுகள் மலிந்த இடமாகிவிட்டது.



'விடுதலைப் புலிகள் இயக்கம் எல் லோரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்ததாகச் சிலர் குற்றம் சாட்டுகிறார் கள். ஆனால், புலிகள் இல்லாத குறையை இப்போது உணர்கிறோம். எங்களுடைய இளைய சமுதாயம் கட்டுப்பாடுகள் அற்ற, தான்தோன்றித் தனமான, வன்முறை மிகுந்த சமுதாயமாக மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அடிதடிகள், குழுச் சண்டைகள் சர்வசாதாரணமாகிவிட்டன' எனக் குறைப்பட்டுக்கொள்கிறார் நடுத்தர வயது மனிதர் ஒருவர். கவர்ச்சிகரமான புதிய பெயர்களுடன் சண்டைக் குழுக்கள் ஊருக்கு ஊர் உதயமாகி இருக்கின்றன. ராணுவமோ, காவல் துறையோ, அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதன் வழியாக வன்முறையை ஊக்குவிக்கின்றன. அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் பக்கம் சாய்ந்துவிடுகின்றன.



இளைஞர்கள் மத்தியில் விடுதலை உணர்வு திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சிறு நகரங்களில்கூட களியாட்ட விடுதிகள், மதுச் சாலைகளை சாதாரணமாகக் காண முடிகிறது. இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் ஒருவருடனான தொடர்பு, தங்களது வாழ்க்கைத் தரத்தை, வளத்தை உயர்த்திவிடும் என்று நம்பும் அளவுக்கு தமிழ் இளை ஞர்களில் சிலர் மூளைச் சலவை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.



மே 2009-ல் நடந்தேறிய பேரழிவுக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களும் இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குப் போய் விட்டார்கள்.



'வவுனியாவில் முட்கம்பி முகாமுக்குள் அடிப்படை வசதிகளே இல்லாமல் அடைத்துவைத்து இருந்தார்கள். மீள் குடியேற்றம் என்று சொல்லி மீண்டும் வன்னிக்கு அழைத்து வந்து பள்ளிக் கூடங்களில் திரும்பவும் அகதிகளாக அமர்த்தினார்கள். இரண்டு மாதங்களுக் குப் பிறகு, சில மரச் சலாகைகளையும் தறப்பாழையும் தந்து எங்களது நிலத்தில் குடியிருக்க அனுமதித்து இருக்கிறார்கள். இங்கே எந்த ஒரு வசதியும் இல்லை. எங்கள் நிலத்தில் இருக்கிறோம் என்ப தைத் தவிர, வேறு ஒன்றுமே இல்லை' - பெருமூச்செறிகிறார் ஒரு பெண்.



'இந்த நிலம் இப்படியா இருந்தது?' என்று ஏக்கப் பெருமூச்செறியும் கண்களில் விரிகிறது பாம்புகளும் தலையும் உடலும் இழந்த அடிப்பனைகளும் வறண்ட பற்றைச் செடிகளும் நிறைந்த வனாந்தரம்.



கல்லறைகளின் மீது நிற்பதான நடுக்கம் கால்களில். வன்னியின் எந்தப் பகுதியைத் தோண்டினாலும், எலும்புகள், உக்கிக்கொண்டு இருக்கும் உடலங்கள், குருதிக் கறை படிந்த ஆடைகள், தலை மயிர், பற்கள் எனக் கொலையுண்டவர்களின் எச்சங்களைக் கண்டெடுக்க முடியும். பாரிய புதைகுழிகளைக் கொண்டமைந்ததாக இருக்கிறது வன்னி நிலம்.



தமிழர்களின் நிலை இவ்விதம் இருக்க, யாழ்ப் பாணமோ தென்னிலங்கைச் சிங்களவர்களின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் வணிகத் தளமாகவும் படிப்படியாக சிங்கள இராசதானிக் கோலம் பூண்டு வருகிறது. இவை போதாது என்று, யாழ்ப்பாணத்தில் தங்களுக்கு நிலங்கள் இருப்பதாகச் சொல்லியபடி, ஆவணங்களுடனும் பாதுகாப்புக்கு அடியாட்களு டனும் பேரினவாதிகள் வந்து இறங்கி இருக்கிறார் கள். அரச அங்கீகாரத்துடன், ஒத்துழைப்புடன் நிலக் கபளீகரம் நடைபெற்று வருகிறது. வன்னியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்கள், தறப்பாழ்களைத் தாண்டி இறங்கும் வெயிலிலும் கொட்டும் மழையி லும் அகதிகளாக அவதிப்பட்டுக்கொண்டு இருக்கி றார்கள்.



இவற்றை எல்லாம் ராஜபக்ஷே சகோதரர்கள் பிரமாண்டமான கட்-அவுட்களில் வெள்ளை வேட்டி, கோட் சூட் சகிதம் கம்பீரமாக நின்று பார்த்தபடி, சிரிப்பாய்ச் சிரிக்கிறார்கள். குடும்ப அரசியல், கருத்துச் சுதந்திர மறுப்பு, சொத்துக் குவிப்பு, ஊழல், அடியாள் அரசியல், செல்வாக்குக்கு சேவகம் என மற்றொரு தமிழகமாக 'மலர்ந்து’ வருகிறது இலங்கை!



ஈழத் தமிழர்கள் மட்டும் அல்லாது; அவர் தம் தெய்வங்களும் அகதிகளாக்கப்பட்டுவிட்டன. ஏ 9 பாதையில் இருந்த இந்து சிறு கோயில்கள் தகர்க்கப்பட்டு, அங்கு எல்லாம் புத்தர் 'குடியேற் றம்’ செய்விக்கப்பட்டுவிட்டார். செம்பருத்திக்குப் பதில் தாமரை மலர்கள்.



முறிகண்டிப் பிள்ளையார் இன்னமும் தப்பிப் பிழைத்திருக்கிறார். யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் சிங்களவர்கள் முறிகண்டியில் இறங்கி பிள்ளையாரை வணங்கிச் செல்கிறார்கள். அவர்களுக்கு அருகில் புழுக்களிலும் புழுக்களாக உணர்ந்தபடி நின்று வணங்கும்போது, இழக்கப்பட்ட முகங்கள் மனத் திரையில் ஒவ்வொன்றாகத் தோன்றி மறைகின்றன.



'எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகள் எங்கே?' என்று காட்டு மரங்கள் சஞ்சலித்துப் புலம் பும் வீதி வழி திரும்பிச் செல்கின்றோம்.



எல்லாம் கனவுபோல் இருக்கிறது. கண்களில் நிரந்தரமாக உறைந்துவிட்ட கொடுங்கனவு!