Saturday, August 7, 2010

மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மிரட்டல்: ரயில்வே ஊழியர்களை கடத்தி அட்டூழியம்

புருலியா :மேற்கு வங்கம் புருலியா மாவட்டத்தில், ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட, நான்கு பேரை கடத்திச் சென்ற நக்சலைட்கள், "லால்கார்க்கில் நாளை நடக்கும் மம்தா கட்சி பேரணியின் கலந்து கொள்ளக் கூடாது' என, மிரட்டல் விடுத்தனர். அதே நேரத்தில், பீகாரில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ரயில் நிலையத்தை கிராம மக்கள் சூறையாடினர்.மேற்கு வங்கம் புருலியா மாவட்டத்தில் உள்ளது உர்மா ரயில் நிலையம். நேற்று முன்தினம் இரவு இங்கு புகுந்த ஆயுதம் தாங்கிய நக்சலைட்கள், ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் ஆதித்யா கெர்கெட்டாவை சிறை பிடித்தனர்.




பின்னர் சில பத்திரிகை நிருபர்களுக்கு போன் செய்யும்படி அவரை மிரட்டினர்."லால்காரில் நாளை நடக்கும் மம்தா கட்சி பேரணியில் யாரும் பங்கேற்கக் கூடாது' என, மிரட்டல் விடுக்கும்படி அவரிடம் தெரிவித்தனர். அவரும் அதன்படியே செய்தார்.பின்னர் கெர்கட்டாவைவும், ஸ்டேஷனில் இருந்த மேலும் மூன்று ரயில்வே ஊழியர்களையும் ரயில் நிலையத்துக்கு வெளியே சிறிது தூரம் கடத்திச் சென்றனர். அங்கு, "மம்தாவின் பேரணியில் ரயில்வே ஊழியர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது' என, எச்சரித்து மூவரையும் விடுவித்தனர்.வந்தவர்கள் நக்சலைட்கள் என்பதை தெரிவிக்கும் வகையிலும், மம்தா கட்சி பேரணியில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என, மிரட்டல் விடுக்கும் வகையிலும் அச்சிடப்பட்டிருந்த சில போஸ்ட்களையும் அவர்கள் விட்டுச் சென்றனர்.இரவு நேரத்தில் உர்மா ரயில் நிலையம் வழியாக எந்த ரயிலும் செல்லக் கூடாது என்றும் கெர்கெட்டாவை அவர்கள் மிரட்டினர்.





ரயில் நிலையம் சூறை: பீகார் மாநிலம், முங்கர் மாவட்டம் கஜ்ரா ரயில் நிலையத்தில், ரயிலில் இடம் பிடிப்பது தொடர்பாக, உள்ளூரைச் சேர்ந்த சிலருக்கும் வெளியூரிலிருந்து வந்த சிவபக்தர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.இதில், உள்ளூர்வாசி ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். மூன்று சிவபக்தர்களும் காயமடைந்தனர். தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் தாக்கப்பட்டதையறிந்த கிராம மக்கள், கஜ்ரா ரயில் நிலையத்துக்குள் புகுந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரயில்வே சொத்துகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். ரயில் நிலையத்தை சூறையாடினர். சம்பவம் பற்றி அறிந்த போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

1 comment: